எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 11 டிசம்பர், 2018

கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்




வலம்புரி கவிதா வட்டத்தின் 54 வது கவியரங்கு 22-11-2018 வியாழக்கிழமை கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கினை தலைமையேற்று நடத்த செயலாளர் கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன். - என். நஜ்முல் ஹுசைன் , தலைவர், வகவம்


ஐம்பத்தி நான்காவது வகவம் இன்று
வாகையுடன் நடக்கிறது என்றால் அன்று
தெம்போடு எழுந்த இவன் துணிச்சலாலே
தேவை யென கருதி
எமை அசைத்தாலே
சுருண்டேதான் படுத்திருந்த
வகவம் தன்னை
வியர்வையினை சிந்தியிவன் விழிக்கச் செய்தான்
புகழீட்டி வலம்புரியும்
நிமிர்ந்தற்கு முழு முதலாம் காரணமும் இவனாய் ஆனான்

ஆரம்பித்து மூலையிலே
உறங்கவிட்டோம்
தூரம் நின்று பழங்கதைகள்
பேசி நின்றோம்
நேரமிது எம் கவிஞர் தூக்க
மகற்ற
ஆர்ப்பரித்து இவன் வந்தான் ஆரம் பித்தான்

ஆரம் பிய்த்து இதை அழுக்காய்
ஆக்கிடாமல்
சோரம் தான் வலம்புரிகள்
ஆகிடாமல்
சோர்வின்றி இவன் உழைத்தான்
இவனைத்தானே எமதின்றின்
ஆரம்பம் என்றே சொல்வேன்
(இவனைத் தான் எமதின்றின்
ஆரம்பம் என்பேன்)

நாம் மீண்டு எழ
ஆரம்பம் இவனே என்பேன்



செவ்வாய், 4 செப்டம்பர், 2018

கவிஞர் எஸ். தனபாலன்


வலம்புரி கவிதா வட்டத்தின் 51வது கவியரங்கம் 22-8-2018 
புதன்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் எஸ்.  தனபாலன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வகவம்



உணர்வோடு கவி எழுதி
உள்ளம் கவர்வான்
மணக்கின்ற சொல் லெடுத்து
மகிழச் செய்வான்
கணக்கின் றியே நட்பைப் பகிரச் செய்து 
இணக்கம் தான் உயர்வென்று
உரத்துச் சொல்வான்

ஓடையது சலசலக்கும் பாடல் எழுதி
ஓராயிரம் உள்ளம் கவர்ந்தான் அன்றே


மேடையதை கலகலக்க வைத்த 
ஸ்ரீதர் 
மேன்மையுற பாட்டெழுதி வென்றான் இவனும் 
ஆடையதாய் அணிகலனாய் வகவம் வந்தான்
ஆற்றலுடை தனபாலன் 
எங்கள் தோழன்

கவியரங்கை தலையேற்க  முன்னே வந்தான்
கவிமகனாம் தனபாலன் 
கொண்டான் ஆர்வம்
புவிமயங்கும் வார்த்தைகளால்
கவிதை கோத்து 
புகழ் பரப்பு வான் எங்கள் 
கவிஞர் சேர்த்து 
தவிக்கின்ற கவியுள்ள தாகம் தீர்க்க 
தகைமையுள கவிதருவான்
நிற்பான் இவன் வான்
குவிக்கின்ற புகழ் தன்னை வகவம் கொள்ள
கவிமகனே தனபாலா 
உன்னைக் காட்டு

கவிஞர் எஸ். தனபாலன் 
  51வது  வகவ கவியரங்கம் 
உன்றன் தலைமேல்
வைத்துவிடு வகவத்தின்
புகழை மலைமேல் !
 



திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன்







வலம்புரி கவிதா வட்டத்தின் 49 வது கவியரங்கு  29-05-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கொழும்புஅல் ஹிக்மா கல்லூரியில்  நடைபெற்றபோது கவியரங்கை தலைமை தாங்கி நடாத்த  கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -

 என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வலம்புரி கவிதா வட்டம்


இலக்கிய உலகினில் நிலைத்து
இருப்பவன் எம் மனம் கவர்ந்து
வலம்புரி தன்னிலே கலந்து
வைப்பவன் கவிதையால் விருந்து
தலைக்கனம் என்பதை மறந்து
தருகிறான் அன்பினில் மருந்து
தலைமையை ஏற்றவன் இன்று
தகைமையாய் வாழ்பவன் சிறந்து

பொலீஸாய் பணியினை செய்து
பொறுப்புடன் நடந்தவ னிவனும்
வலிமையாய் வாழ்க்கையு மமைய
வழியினை செய்திடும் வகையில்
துளி மையால் மணமக்க ளிணைக்க
துணை செய்யும் பதிவாளராகி
களிக்கிறான்; களிப்பினைத் தந்து

எதிர் கொள்ளும் அனைவரி னோடும்
அன்பினைக் காட்டிடும் நெஞ்சன்
எதிரியாய் யாருமே இல்லை
என்று கர்வமும் கொண்ட மைந்தன்
வதிரியை ஊராய் கொண்டு வளமுடன்
வாழும் இந்திரன்
புதிரிலை என்றே வகவ
தலைமையை யேற்றான் ரவீந்திரன்

கவிஞர் வதிரி சீ. ரவீந்திரன்
கவியரங்கு உங்களுக்கு
கவிதை படையெடுங்கள்
உணர்வு நாம் பெறுவ தற்கு

புதன், 8 ஆகஸ்ட், 2018

காவ்யாபிமானி கலைவாதி கலீல்

வலம்புரி கவிதா வட்டத்தின் 50வது கவியரங்கம் 27-7-2018 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் காலை நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த காவ்யாபிமானி கலைவாதி கலீல் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்,
தலைவர் - வகவம்


பல்லாற்றல் தன்னைத்தான் அடக்கி
பக்குவமாய் எழுந்து நிற்கும்
கலைஞர்
சொல்லாற்றலால் பலரை
மயக்கி
சோர்வொன்றை காட்டாத
இளைஞர்
இல்லாத துறையென்று
ஏதும்
இல்லாம லேமிளிரும்
ஒருவர்
வல்லோனின் அருளாலே இன்று
கவியரங்கை தலையேற்ற
தலைவர்

தன்மனதில் பட்டவைகள்
சரியாய்
திகழ்ந்தாலே அச்சமென்ப
தின்றி
முன்வருவார் முன்வரிசை
யேற்று
முனைப்புடனே உற்சாகம்
தருவார்
இன்சொற்களே யன்றி
வேறு
இறுமாப்பாய் வசைபாட
மாட்டார்
அன்பாகவே யாரும்
ஒன்றாய்
இணைந்து
பணியாற்றவே இவரும்
உழைப்பார்


தலைமேலே தன்பணியை
வைத்து
 தாகத்தோடே இன்றும்
எழுதி
கலைபடைக்கும் கைவண்ணக் காரர்
கலைவாதி கலீல் எங்கள்
சொந்தம்
நிலையாகவே எழுத்தில்
தங்கி
நிதர்சனமாய் வடிக்கின்றார்
சந்தம்
மலையாகவே உறுதி கொண்டு
கவியரங்கை தலையேற்றார்
இன்று

சிரேஷ்ட பத்திரிகையாளர் கவிஞர்
ஓவியர்
பாடகர்
எனும் பல்கலை வேந்தர்
கலைவாதி கலீல் - இனி
கவியரங்கு உங்களிடம்
தேன் பாயும்
காதுகளோ எங்களிடம்!

'வேறாகாத வேர்கள்' - சிறுகதை


ஆகஸ்ட் 1 - 14 'எங்கள் தேசம்' சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கும் 'வேறாகாத வேர்கள்' - எனது சிறுகதை. நன்றி: சகோ. இர்ஷாத்.


வேறாகாத வேர்கள் !
- என். நஜ்முல் ஹுசைன்


"ஏய் இங்க போட வாணாம், இங்க போட வாணாம்" கத்தினான் காசிம்.
ஏழு பேரிருந்த முச்சக்கர வண்டி தரிப்பில் எட்டாவதாக புதிதாக நிறுத்துவதற்கு வந்த இர்ஷாத்தை நோக்கித்தான் காசிம் கத்தினான்.
இன்னும் சரியாக வாடிக்கையாளர்கள் வராததால் ஏழு முச்சக்கர வண்டிகளும் அங்கே நின்றிருந்தன. புதிதாக அவ் வரிசையில் சேர்வதற்காக வந்த இர்ஷாத்தைப் பார்த்துதான் காசிம் கடிந்து கொண்டான்.
இவ்வாறான காட்சிகளை ஒவ்வொரு முச்சக்கர வண்டி தரிப்பிலும் காணலாம். தங்களது இடத்தில் வந்து வேறொருவர் பயணியை ஏற்ற எந்தவொரு சாரதியும் இலேசில் விடாத நேரத்தில் நிரந்தரமாக நிற்க விடுவார்களா?
"பவ்பங் காசிம். எயாட்டத் அபி மெத்தன நதரகரன்ன இட தெமு -
பாவம் காசிம் இங்கே நிற்பாட்ட அவனுக்கும் இடம் கொடுப்போம் " சோமபால காசிமைப் பார்த்துச் சொன்னான்.
அந்த முச்சக்கர தரிப்பில் மூன்று இனத்தவர்களும் கலந்துதான் இருந்தனர். சோமபால அமைதியானவன். நல்ல குணநலமுள்ளவன். அத்தனைப் பேரையும் அனுசரித்துச் செல்பவன்.
"வேண்டாம் வேண்டாம் இவனுக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு இன்னும் ரெண்டு பேர் நம்மட ஸ்டேண்ட பிடிக்க வருவாங்க" காசிம் மீண்டும் கோபமாக கடத்தினான். அவனுக்கு ஆதரவாக சுரேஷும், சுலைமானும் குரல் கொடுத்தனர்.
ஆனால் ரமேஷும், காதரும், ஜினதாசவும் "பரவாயில்லை பரவாயில்லை எங்களுக்கு கெடைக்கிறது கெடைக்கும். அவனைப் பார்த்தா பாவமா இருக்கி" என அனுதாபக் குரலெழுப்பினர்.
இப்படி அவர்களின் நீண்ட வாக்கு வாதத்தின் முடிவில் காசிம் அரைமனதோடு இர்ஷாத் அங்கே தனது வண்டியை நிறுத்த சம்மதம் தெரிவித்தான். காசிம் கொஞ்சம் முரட்டு குணமுள்ளவனாக இருந்ததால் எல்லோரும் காசிமை அனுசரித்தே நடந்தனர்.
இர்ஷாத் உயர் தரம் வரை படித்தவன். படித்துக் கொண்டிருந்தபோதே வெளிநாட்டு வேலைக்குப் போனவன். வெளிநாட்டில் பல வருடங்களை கழித்து விட்டு வந்த அவன் நாடு திரும்பியபோது திருமணம் முடித்தான். ஒரு மாதம் மனைவியோடு வாழ்ந்த அவன் மீண்டும் வெளிநாடு சென்றான். வெளிநாடு சென்றாலும் இம்முறை அவனது மனைவியின் நினைவு அவனை அதிகம் வாட்டத் தொடங்கியது. மனைவி கர்ப்பமுற்று தனியாக பட்ட வேதனைகளையெல்லாம் நினைத்து நிலைகுலைந்து போனான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய இர்ஷாத்துக்கு மனைவியையும், பிள்ளையையும் விட்டு விட்டுச் செல்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாதிருந்தது. மீண்டும் வெளிநாடு செல்வதில்லை என்று தீர்க்கமான முடிவெடுத்தான். கையிலிருந்த பணத்தைக் கொண்டு பழக்கமில்லாத வியாபாரங்களைச் செய்து அதனை இழக்க விரும்பவில்லை. எனவே முச்சக்கர வண்டியொன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டுவோம் என்று தீர்மானித்தான். வண்டி வாங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதனை நிறுத்திக் கொள்ளத்தான் ஒழுங்கான தரிப்பிடம் கிடைக்கவில்லை. அதுதான் இறுதியில் தான் வசிக்கும் தெருமுனையில் இருக்கும் தரிப்பிடத்திலேயே நிற்பாட்டுவோம் என்று தீர்மானித்தான். ஒருவாறு மற்றையவர்களின் சம்மதம் கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணநலத்தை உடையவர்களாக இருந்தனர். ஆனால் மொத்தத்தில் எல்லோரிடமும் மனிதம் இருந்தது.
கூடிய விரைவில் இர்ஷாத் எல்லோருக்குமே நல்ல நண்பனாகிப் போனான். மற்றையவர்களைவிட படித்திருந்ததால் எல்லோருக்கும் அவனது உதவி தேவைப்பட்டது. வாக்காளர் விண்ணப்பம், பாடசாலை விண்ணப்பம் என்று அனைத்தையும் நிரப்பவும் இர்ஷாத் தேவைப்பட்டான். எல்லோருக்கும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினான். அங்கே இன மத பேதம் இருக்கவில்லை. அந்த தரிப்பிடத்தில் எல்லோரும் மிகவும் ஒற்றுமையுடன் பழகினர்.
ஒரு வாரமாக சோமபால ஆட்டோ தரிப்பிடத்திற்கு வரவில்லை. அவனது கைபேசியும் வேலை செய்யவில்லை. எல்லோரும் ஒன்றாகப் பழகினாலும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று பழகும் பழக்கம் பெரிதாக இருக்கவில்லை. ரமேஷ் மட்டும் சோமபாலவின் வீட்டுக்கு சில தடவைகள் சென்றிருக்கிறான். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சோமபாலவை அவனது வீட்டுக்குச் சென்று பார்த்து விட்டு வருமாறு ரமேஷிடம் சொன்னார்கள்.
சோமபாலாவின் வீட்டுக்குப் போய்விட்டு வந்து ரமேஷ் சொன்ன செய்தி நண்பர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
சோமபால ஒரு பயங்கர நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். அவனும் அவனது மனைவி சோமலதாவும் இரு வீட்டாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்கள் விருப்பத்திற்கு திருமணம் முடித்தவர்கள். அதனால் இரண்டு குடும்பங்களிடமிருந்தும் எந்த உதவியும் இன்றி அவதிப்பட்டார்கள். அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதிலும் வருவதிலும் சோமலதா மும்முரமாக இருந்தாள். இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கும் அனுப்பவில்லை. சோமபால ஆட்டோ செலுத்தாததால் கையில் காசின்றியும் பசியோடும் இருக்கிறார்கள். பிள்ளைகள் கூட ஒழுங்காக சாப்பிடவில்லை. இப்போது சோமபால வீட்டில்தான் ஓய்வெடுக்கிறான்.
கதையை கேட்டதும் ஒட்டு மொத்த நண்பர்களுமே மிகவும் கவலைப்பட்டார்கள். ஏழு பேருமே ஒன்றாக சோமபாலாவைப் பார்க்க வீடு தேடிச் சென்றார்கள்.
உணவுப் பொட்டலங்களையும் எடுத்துச்சென்றார்கள். உணவுப் பொட்டலங்களைக் கண்டதும் அருகே ஓடி வந்த சோமபாலவின் பிள்ளைகளைப் பார்த்து கண் கலங்கினார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த சோமபாலவை எல்லா நண்பர்களுமே கட்டியணைத்தார்கள். எதற்கும் கவலைப்படவேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்கள். சோமலத்தாவைப் பார்த்து "தங்கச்சி இதுக்குப் பிறகு உங்களுக்கு யாருமே இல்ல என்று கலங்க வேண்டாம். இதோ உங்களுக்கு ஏழு அண்ணன்மார் இருக்கிறோம்" என்றார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்டு சோமலதா குலுங்கிக் குலுங்கி அழுதாள். ரமேஷ் ஒரு பிள்ளைக்குச் சோறூட்டினான். காசிம் ஒரு பிள்ளைக்கு சோறூட்டினான். சோமபாலாவுக்கும் நண்பர்கள் சோறூட்டினார்கள். சோமபால நண்பர்களின் பாசத்தைப் பார்த்து திக்கு முக்காடிப் போனான். அவனது நோயில் பாதி குறைந்ததை அவன் உணர்ந்தான். விடை பெற்ற நண்பர்கள் தங்களுக்குள் சேகரித்து வந்த பணத்தை சோமபாலாவிடம் கொடுத்தார்கள். சோமபால அதனை வாங்க மறுத்தான். என்றாலும் நண்பர்களின் அன்பு வற்புறுத்தலுக்கு முன் அவன் தோற்றுப்போனான்.
விடை பெற்று வெளியே வந்த நண்பர்களிடம் இர்ஷாத் ஒரு வேண்டுகோள் விடுத்தான். "இன்றிரவு ஏழு மணிக்கு நாங்கள் அனைவரும் எங்கள் ஸ்டேண்டில் சந்திப்போம்". இர்ஷாத் ஏதோ சொல்லப் போகிறான் என்று தெரிந்து கொண்ட நண்பர்கள் சம்மதம் தெரிவித்து பிரிந்தார்கள். ஒவ்வொரு திசையில் பறந்தார்கள்.
ஏழு மணியளவில் ஒவ்வொரு நண்பராக தரிப்பிடத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
இர்ஷாத் தன் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னான். "சோமபால எங்கள் நண்பன். அவன் இப்படி துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியாது. அவனது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமல் இருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இப்போது எங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. அது சோமபாலாவின் கவலையைப் போக்குவது. அவனது நோயை குணமாக்குவது. அவனது சுமையை இறக்கி வைப்பது. ஒவ்வொரு நாளும் ஒருவர் மாறி ஒருவர் சரத்தின் வீட்டுக்குச் சென்று அவனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு வருவோம்.
பாடசாலை விட்டதும் வீட்டில் கொண்டு போய் விடுவோம். சோமபால ஆஸ்பத்திரிக்குப் போக ஒருவர் மாறி ஒருவர் எங்கள் ஆட்டோவில் கூட்டிப்போவோம். மறுபடி சோமபால நோய் குணமாகி வரும் வரை எங்கள் ஒவ்வொருவர் உழைப்பிலும் சிறு தொகையை ஒன்று சேர்த்து சோமபாலவிடம் கொடுப்போம். ஏனென்றால் இப்படியான ஒரு நிலை நாளை எமக்கும் ஏற்படலாம். அப்போதும் எங்களுக்குள் நாங்கள் இப்படியே உதவி செய்து கொள்வோம். எங்களுக்கு உதவி செய்ய வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்கள். நாங்களே எங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் "
நண்பர்கள் ஒட்டு மொத்தமாக இர்ஷாத்தின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டனர். எல்லா நண்பர்களுமே ஒற்றுமையுடன் செயல்பட்டு உழைத்த காரணத்தால் விரைவிலேயே சோமபால பூரண சுகம் பெற்றான். பூரண சுகம் பெற்ற அவன் தனது நண்பர்களுடன் ஆட்டோ ஸ்டேண்டில் வந்து இணைந்து கொண்டான்.
இர்ஷாத் அவர்களை விடவில்லை. எல்லோருக்கும் தனித்தனியாக சேமிப்பு புத்தகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினான். கட்டாயமாக ஒவ்வொரு நாளும் ஒரு சிறு தொகை ஒதுக்கி அதை சேமிப்பில் இடவேண்டும் என்று சொன்னதை எல்லோரும் ஆமோதித்தனர். அவர்கள் கற்பனை செய்திருக்காத விதத்திலே அவர்களிடம் பணம் சேர்ந்தது. ஒருவருக்கு கஷ்டம் என்று வந்த வேளையெல்லாம் மற்றவர்கள் தமது சேமிப்பிலிருந்து பணத்தைக் கொடுத்து உதவினர். இவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பார்த்து குடும்பத்தினர் அளவிலா ஆனந்தமடைந்தனர். வறுமையை மட்டுமே கண்டு வந்த அவர்கள் வாழ்வில் இப்போதுதான் வசந்தம் வீசத் தொடங்கியது.
இப்போது மற்ற ஆட்டோ ஸ்டேண்டில் உள்ளவர்களும் தாங்களும் இப்படி செய்வோமா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திங்கள், 9 ஜூலை, 2018

"நடந்தது என்ன......?" சிறுகதை. விடிவெள்ளி பத்திரிகையில் 06/07/2018 இடம்பெற்றது

-       என். நஜ்முல் ஹுசைன்


வாப்பா மரணித்ததன் பின் முழு குடும்பப் பொறுப்பும் அவனுக்குத்தான். உயர்தரம் கற்றிருந்த நியாஸ் டாக்டராகும்  கனவை உதறிவிட்டு பொருத்தமான தொழிலை தேடிக் கொண்டான். தங்கை நஸீமாவுக்கும், தம்பி ரபீக்குக்கும் ஒழுங்கான படிப்பு கொடுக்க வேண்டும்.  உம்மாவை கவலைப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  காலதாமதம் செய்யாமல் நஸீமாவுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவனது புதிய கனவாக இருந்தது.

நல்ல தொழிலிலும் இருந்த காரணத்தால் கலியாண தரகர்கள் அவனுக்கு தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தனர். தங்கை நஸீமாவை திருமணம் முடித்துக் கொடுக்காமல் தான் திருமணம் முடிக்கக் கூடாது என்பதை ஒரு வைராக்கியமாகவே நெஞ்சில் பதித்துக் கொண்டான்.
 
நஸீமா சாதாரண தர பரீட்சை எழுதியதிலிருந்து உம்மா அடிக்கடி அவளது திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். அவளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதாயிருந்தால் அதனை தான் இப்போது பெறும் சம்பளத்திலிருந்து சமாளிக்க முடியாது என்பது நியாஸுக்கு நன்றாக தெரிந்தது.  மூளையை கசக்கிப்பிழிந்த பின் வெளிநாடு செல்லும் யோசனை அவனுக்கு வந்தது. தெரிந்த நண்பர்களின் துணையுடன் ஒரு வெளிநாட்டு முகவர் நிலையத்தின் மூலம் துபாயில் தொழிலைப் பெற்றுக்கொண்டான். 

நல்ல திறமைசாலியாகவும், தனக்குத் தரப்படும் பணிகளை கச்சிதமாக செய்து முடிக்கும் ஆற்றலும் பெற்றிருந்த நியாஸ் மிக விரைவிலேயே பதவி உயர்வுகள் பெற்றுக்கொண்டான். கொழுத்த சம்பளமும் கிடைத்தது.
தங்கை நஸீமாவுக்கு நல்லதொரு மாப்பிள்ளையை உம்மாவிடம் பார்க்கச் சொல்லியிருந்தான். புரோக்கரகள்; பல இடங்களை கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாள் இரவும் அது பற்றி கதைத்து உம்மாவுக்கு நியாஸ் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தான். தான் துபாயிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தங்கையின் திருமணத்தை முடிப்பதே அவனது எண்ணமாக இருந்தது.  உம்மா காட்டிய இரண்டு இடங்கள் அவனுக்குப் பிடித்தன. இலங்கைக்கு வந்து தான் பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்தான்.

இலங்கை வந்து ஒருநாள்தான் ஓய்வெடுத்தான். அடுத்த நாளிலிருந்து நஸீமாவின் திருமண விஷயத்தில் மிகவும் கரிசனையோடு ஈடுபட்டான். தான் முதலில் பார்த்து வைத்திருந்த இரண்டு இடங்களுக்கும் நியாஸ் போனான்.  அதில் ரபீக்கை நியாஸுக்கு மிகவும் பிடித்தது.  அவர்களை தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னான்.  ரபீக்கின் தாய் கொஞ்சம் கறாரானவர் என்று தெரிந்து கொண்டான்.  அவர்களுக்கும் முதல் பார்வையிலேயே நஸீமாவைப் பிடித்துப் போனது.  தனக்கு ஒரே தங்கை என்ற காரணத்தால் மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டான். உடனடியாகவே திருமணத்தையும் நடாத்தி முடித்து நஸீமாவை மாப்பிளை வீட்டுக்கு அனுப்பி வைத்த போது அவனது லீவும் முடியும் தறுவாயிலிருந்தது. உறவுகளைப் பிரிய மனமின்றி மறுபடி துபாய் வந்து சேர்ந்தான்.

ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு தொலைபேசியில் பேசி சுகம் விசாரித்துக் கொள்வான்.  நஸீமாவுடைய திருமண வாழ்க்கையைப் பற்றியும் மிகவும் அக்கறையோடு விசாரிப்பான். நஸீமாவின் கணவர் தங்கமானவர் என்றும் அவரது தாயார்தான் முரட்டுத்தனமானவர் என்றும் நியாஸின் உம்மா சொல்லி வைத்தார்.  சரி நூற்றுக்கு நூறு எல்லோரையும் சிறப்பானவர்களாக எதிர்பார்க்க முடியாது.  கொஞ்சம் அனுசரித்து போகுமாறு நியாஸும்  நஸீமாவுக்கு சொல்லி வைத்தான்.

சில நாட்கள் கோலெடுக்கும் உம்மா நஸீமாவின் மாமியார் செய்யும் கொடுமைகளை சொல்ல ஆரம்பித்தார்.  நியாஸுக்கும் கவலையாக இருந்தது.  அருமையாக வளர்த்த தங்கையல்லவா.  அடிக்கடி நஸீமாவின் கணவரோடும் நியாஸ் பேசிக் கொண்டான்.  என்றாலும் அவரது தாயாரைப் பற்றி ஒருநாளும் குறை கூறியதில்லை.
நேற்று உம்மா போனில் சொன்ன செய்தி நியாஸுக்கு இடி விழுந்தது போலிருந்தது.
'மகன், நஸீமாட மாமிட கொடும எல்ல மீறி போயிடுச்சி. எம் மகள அவ கொல்லப் பார்த்திருக்கா. நல்ல வேள அல்லாஹ் எனக்கு காட்டித் தந்தான். ஒடனே மகள கூட்டிட்டு நான் வந்திட்டன்.  அவங்க ஒறவே வாணாம். எம் மக வாழாவெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை. அன்னைக்கு மாடிப்படியில எறங்குறப்போ நஸீமா கால் தவறி கீழ விழுந்துட்டதா சொன்னேனே. அதுகூட எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு. நஸீமா மாமியார்தான் பின்னால நின்னு தள்ளிவிட்டிருப்பா' என்று சொல்லி தேம்பித் தேம்பி அழுதார்.
'இப்படி ஒரு கொடும கார மாமியாரா' நியாஸால நம்பவே முடியவில்லை.  எவ்வளவு தியாகத்தோடு நஸீமாவுக்கு திருமணம் முடிச்சு கொடுத்தேன். அது இவ்வளவு சீக்கிரம் இப்படி ஆகிறிச்சே' நினைக்க நினைக்க நியாஸுக்கு பொறுக்கவில்லை.
பலமுறை நஸீமாவின் கணவரிடமிருந்து நியாஸுக்கு கோல் வந்தது.  நியாஸுக்கு பேசவே பிடிக்கவில்லை.  அவர் நல்லவராக இருந்து என்ன பயன்.  அவரது உம்மாவின் கொடுமைகளை தடுக்க முடியவில்லையே.

நஸீமாவின் மனது நோகும் என்பதால் எதையும் விபரமாக விசாரிக்கப் போகவில்லை.  ஆறுதல் மட்டும் கூறிக் கொண்டான்.  உம்மா நஸீமாவுக்கு விவாகரத்து செய்து விடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

கடந்த விடுமுறையை நஸீமாவின் திருமண வேலைகளுக்காக கழித்த நியாஸுக்கு இம்முறை விடுமுறையை அவளது விவாகரத்து வேலைகளுக்காக கழிக்க வேண்டியிருந்தது.

இரண்டு வருட தொடர் வேலைக்குப் பிறகு விடுமுறையில் இலங்கைக்கு வந்தான் நியாஸ்.

இப்போதுதான் உம்மா நஸீமாவுக்கு நடந்த கொடுமையை விலாவாரியாக சொன்னார்.

இவர்கள் நஸீமாவைப் பார்க்க நஸீமாவின் கணவர் வீட்டுக்கு போனபோது ரபீக் இருக்கவில்லை.  ஆனால் நஸீமா கடுமையான வயிற்று வலியால்  துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது மாமியோ இதென்ன பெரிய வயித்து வலியா. ஓம திரவம் குடிச்சா சரியா போகும் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். பெற்ற வயிறு பற்றி எரிந்திருக்கிறது.
நஸீமாவின் மாமியோடு வாய் தர்க்கம் புரிந்து டாக்டரிடம் கூட்டி வந்திருக்கிறார்.

'மகன் டாக்டர் உங்களோடு படிச்சாரே உங்க கூட்டாளி பாஹிம்தான். ஒடனே நஸீமாவ செக் பண்ணிட்டு மகளுக்கு நஞ்சு உணவு கொடுத்திருக்கிறாங்க என்ற அதிர்ச்சி தகவல சொன்னாரு. நல்ல நேரம் ஒடனே கூட்டிக்கிட்டு வந்தீங்க. இல்லாட்டி ஆபத்தா போயிருக்கும் என்று சொல்லி மருந்து தந்தாரு. என் புள்ளயை கொல்லப் பார்த்த அவங்க ஊட்டுக்கு எப்படி மகன் நம்ம புள்ளய அனுப்புறது. வேண்டாம் மகன் வேண்டாம் மகன். எப்படியாவது என் மகளுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்திருங்க. இதுவர இந்த வெட்கக்கேட்ட யாருக்கிட்டயும் சொல்லல்ல மகன்' கதறி அழுதார் நியாஸின் உம்மா.

நஸீமாவோடு பேசியபோது தனது கணவரைப் பற்றி சிறப்பாகத்தான் சொன்னாள். ஆனால் மாமியாரின் கொடுமைகளை நிறையச் சொன்னாள்.  தான் எதை செய்தாலும் குறை கண்டு பிடிப்பவராகவே தனது மாமி திகழ்ந்ததாகவும் சொன்னாள்.

என்ன செய்ய மாமியாரின் கொடுமைக்காகவே ஒற்றுமையான கணவன் மனைவியை பிரிக்க வேண்டியுள்ளது.  என்றாலும் கொலை வரைப் போகத் துணிந்த மாமியாருக்காகவாவது இந்த விவாகரத்தைப் பெற்றுக் கொடுக்கத்தான் வேண்டும். நல்ல வேளை நஸீமா பிள்ளை எதுவும் உண்டாகியிருக்கவில்லை.

நியாஸ் தீவிரமாக நஸீமாவின் விவாகரத்து விஷயத்தில் ஈடுபடலானான். காதி நீதிபதியைப் பற்றித் தெரிந்த நண்பர்களின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டான்.

நியாஸ்     தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான்.  அருகில் ஒரு கார் வந்து நின்றது.  உள்ளே இருந்து யாரோ அழைப்பது போலிருந்தது.  பார்த்தான்.  நியாஸின் நண்பன் டாக்டர் பாஹிம். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தால் பழைய விவரங்களையெல்லாம் பேசினான். இறுதியில் உம்மாவைப் பற்றியும் நஸீமாவைப் பற்றியும் விசாரித்தான்.

மிகவும் கவலையுடன் அவளது விவாகரத்து குறித்து பாஹிமிடம் கூறினான்.
'விவாகரத்துக்கு போகும் அளவுக்கு என்ன நடந்தது? '
அப்போதுதான் நஸீமாவுக்கு நஞ்சூட்டியதை கண்டு பிடிதத்தே டாக்டர் பாஹிம்தானே என்று உம்மா சொன்ன நினைவு வந்தது.

'ஓ அந்த தங்கச்சிக்கு நஞ்சூட்டிய விவகாரம்தான்' என்று சொன்னான்.

' அடடா அப்படியா அது பொலிஸ் கேஸாச்சே. யார் நஞ்சூட்டினார்கள்' என்று புதுக் கதை போன்று கேட்டான்.

'விஷயத்தை இவன் மறந்து விட்டானோ. இப்படி புதிதாய் கேட்கிறானே' என்று உம்மா நஸீமாவோடு அவனிடம் மருந்தெடுக்கப் போன கதையை ஞாபகப்படுத்தினான்.

'நான் சொன்னேனா.....? ' ஆச்சரியமாக யோசித்தான் டாக்டர் பாஹிம்.

அவனிடம் பல நூறு நோயாளிகள் வருவதால் அவன் மறந்திருக்கலாம் என்றாலும் உம்மாவையும், நஸீமாவையும் அவன் எப்படி மறக்க முடியும்?
வியப்போடு அவனைப் பார்த்தான்.

கொஞ்ச நேரம் யோசித்து விட்டு பாஹிம் பழைய சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தான்.

'ஆம். ஞாபகம் வருகிறது. ஒரு நாள் ஒங்கட உம்மாவும், தங்கச்சியும் எனக்கிட்ட மருந்தெடுக்க வந்தது ஞாபகமிருக்கு. வேற விசேஷமா ஒன்னும் ஞாபகமில்லையே' என்று சொன்ன அவன், சிறிது நேரம் யோசித்துவிட்டு,

'சரி சரி ஞாபகம் வருது.  தங்கச்சிக்கு வயித்து வலி என்று வந்தாங்க. புட் பொயிஸனா இருந்திச்சி.....' என்று சொல்லிக் கொண்டே,

'இப்ப எனக்கு வெளங்குது. புட் பொயிஸன் உணவு நஞ்சாவுறதென்னா சில சமயம் சில உணவு பழசாகியிருந்தா அப்படி ஏற்படும். பழசா போன சிக்கன தின்னா சிலருக்கு ஏற்படும்.    உணவு நஞ்சாகி இருக்குன்னு நான் சொன்னத உங்க உம்மா நஞ்சு போட்டிருக்காங்கன்னு நெனச்சிருக்காங்க.....'
டாக்டர் பாஹிம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் நியாஸுக்கு எல்லாம் விளங்க ஆரம்பித்தது. அவனின்மேல் அவனுக்கே கோபம் ஏற்பட்டது.

'நானும் ஆராயாமல் அவசரப்பட்டு நல்லதொரு மனிதனை இழக்கப் பார்த்தேனே'.
பாஹிமை சந்தித்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லிக் கொண்டே காதியாரைப் பார்க்க ஓடினான் நியாஸ் - விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வேண்டாம் என்று சொல்ல !
..................................................................................................................................................................................................................