எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 27 டிசம்பர், 2023

சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 95 ஆவது கவியரங்கு 26-12-2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.

      - என். நஜ்முல் ஹுசைன்
        தலைவர்,
        வலம்புரி கவிதா வட்டம்
        (வகவம்)

தனக்கென கவிதையின் உலகில் நின்று
தனித்துவம் பெற்றவன்; தகைமையாளன்
கனத்திட வைப்பவன் கவிதை மொழியால்
கதைகளில் அனுபவச் சோகம்
பிழிவான்
மனங்களை வென்றிடும் கவிதை பாடி
மலைத்திடும் அளவினில் ரசிகர்
பெற்றான்
கனவதில் நிலைக்கின்ற போதும்
கூட
கவிதையில் வாழ்ந்திவன் இன்பம் காண்பான்

இளமையை தமிழுக்கே தாரை வார்த்து
இலக்கணம் இலக்கியம் பாடம் கற்றான்
விளக்கென பலருக்குச் சுடரும் ஏற்றி
விதிமுறை நடைமுறை சொல்லித் தந்தான்
வளம்பெறும் கவிதையில் வாழும் கவிஞன்
வகவத்தில் இருப்பது பெருமை என்போம்
உளமெலாம் நிறைந்தவன் இவனை இன்று
உரிமையாய் தலைமைக்கே அழைத்து வந்தோம்

அமீர் எனும் சொல்லுக்குத் தலைவன் பொருளாம்
அரங்கிற்கு இன்றிவன் பொருத்த மானான்
அமீர் அலி என்கின்ற சந்தக் கவிஞன்
அமீர் எனும் தலைவனாய்
அமைந்து கொண்டான்
டுமீலென வெடித்திடும் கைத் துப்பாக்கி
போலிவ னரங்கிலே வெடிக்க வந்தான்
தமிழெனும் அமுதினைச்
சாறாய்பி ழிந்து
தன்அக வாழ்க்கையைப்
படிக்க வந்தான்


சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி

இது
தொண்ணூற்றி ஐந்தாம்
கவியரங்கு
இதில் இருக்கிறதே
உனக்கும் பெரும் பங்கு
எம் கவிஞர் படையும்
துணைக்கிங்கு
சங்கத் தமி ழெடுத்து
நீ முழங்கு !

வருக
சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி
- என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஐம்பது எழுத்து ஆளுமைகள்" வாழ்த்துப் பா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


பாவேந்தல் பாலமுனை பாறூக் தொகுத்த "ஐம்பது எழுத்து ஆளுமைகள்" நூல் அறிமுக விழா 16/12/2023 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வாசித்த வாழ்த்துக் கவிதை

ஓர் ஆளுமை
ஆழ
மைத் தொட்டுள்ளது

ஆளுமைகளை
ஆழம் பார்த்து
காலை விட்டுள்ளது

காலை வாரும் உலகில் தலையை வாரி விட்டுள்ளது

இளமைத் தொட்டு
எழுதியவர்கள்
இள "மை"த் தொட்டு எழுதியவர்கள்
தம் முதுமைத் தொட்டும்
எழுதி இருப்பதை

தன் புது மைத்
தொட்டு எழுதி
பார்வைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பார் வைத்திருக்கிறார்

பாவேந்தல் பாறூக்

அது அவர்
பேர் வைத்திருக்கிறது

எழுத்துலகில்
வேர் வைத்தவர்களை
தன் வேர்வை வைத்து
எழுதி இருக்கிறார்

தன் இமைகள்
சுமைகள் தாங்கிய போதும் நித்திரை மறந்து
இதனை சுகப்பிரசவம்
ஆக்கித் தந்துள்ளார்

எத்தனையோ சுகப்பிரசவங்களின் மகப்பேற்று
மனை

தமிழன் -
தமிழ் முரசு

ஆம்
தமிழ்
முரசு கொட்டியல்லவா
பிரசவம் நடத்தியுள்ளது


அன்பைக் கொட்டி ஆளுமைகளை அணைத்துக்கொண்டது

அவர்கள் அணைத்துக் கொண்டதால்
இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஆளுமைகள்

பத்திரிகைகளே
உங்கள்
திரி கைகளால் தானே
இந்தப் பிரகாசம்
எங்களுக்கு



சஞ்சிகைகளே
எங்கள் சிகைகளே   அலங்காரமாய்
இருப்பது உங்களால்தானே

உங்களின்
அச்சகங்களும்
அட்சரங்களும்
உச்சரித்ததால்
உச்சம் தொட்ட
ஆளுமைகள்

பேனைத் தொட்டு எழுதிய நாங்கள் இப்போது
"போனை"த் தொட்டு எழுதுகிறோம்

நாங்கள் எப்படி
எழுதினாலும் உங்கள்
பிரசுர பானை தானே
அதனைச் சமைத்து அகப்பையில் அள்ளி
வாசகர்
அகப்
பைக்கு ஊட்டி விடுகின்றது

அப்பக்கம் இப்பக்கம் இருந்தவர்களுக்கெல்லாம்
தன் பக்கம்
ஒரு பக்கம் வழங்கி
அக்கம் பக்கமாக்கிய
தமிழ் முரசு பொறுப்பாசிரியர் ஜீவா சதா
சிவம்
நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் இலக்கிய இதயங்களில்
மகத் துவம்


பாலமுனை பாறூக்

ஆளுமைகளின்
பாலம் உனை
பாராட்டி மகிழ்கின்றேன்

நீங்கள் துணிந்த கருமம் யாரும் துணியாத கருமம்

இந்த ஆளுமைகளை
ஒரு நூலால் கட்டியிருக்கிறீர்கள்

ஒரு நூலாய் கட்டியிருக்கிறீர்கள்

பாவேந்தலே நீங்கள்
பூ வேந்தி இருக்கிறீர்கள்

பல்லோரின் பிரார்த்தனைகள் உங்களை ஏந்தி இருக்கின்றன

நன்றி !

என். நஜ்முல்  ஹுசைன்

16/12/2023

புதன், 13 டிசம்பர், 2023

அவர்களுக்காக - சிறுகதை

 

அவர்களுக்காக.........!


             - என். நஜ்முல் ஹுசைன்


செய்தியை கேள்விப்பட்டவுடன் அபூநஜாத் திகைத்துப் போய்விட்டான்.  அவன் நினைத்ததோ ஒன்று; ஆனால் நடக்கப் போவதோ ஒன்று. அவனால் அதனை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.  தீயில் விழுந்த புழுவாக அவன் துடித்தான்; துவண்டான்.  

உயிரை துச்சமென மதித்து அவன் செய்த செயல் எத்தனை அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும்.  ஆனால் அது போன்ற ஒரு செயலில் ஈடுபடக் கிடைத்ததை பேரருளாகவே அபூநஜாத் கருதினான்.  அவ்வாறான ஒரு தீரமான செயலைச் செய்வதற்கு அவன் மட்டுமல்ல அவனது சக தோழர்களும் எப்போதும் தயாராகவே இருந்தனர்.

எனினும் இதனை செய்வதற்கு அபூநஜாத்தையே தெரிவு செய்தமைக்கு காரணம் அவனிடமிருந்த விசேடமான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவுதான். இச் செயலை செய்வதற்கு வெறுமனே உடல் வலிமையும் துணிவும் மட்டும் போதாது. அபாயகரமான அச் செயலை செய்வதற்கு நுண்ணிய அறிவும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சில செயல்களை செய்யும் ஆற்றலும் இருக்க வேண்டும்.  அந்த ஆற்றல் நிரம்பப் பெற்றவன்தான் அபூநஜாத்.

தனது தாய் நாட்டு மக்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக போராடும் அந்தப் போராளிக்கு தீவிரவாதி பட்டம் சூடி அவனது போராட்டத்தை சில மேற்குலக நாடுகள் மழுங்கடிக்கப்  பார்த்தாலும் அவனும் அவனது சக தோழர்களும் முன் வைத்த காலை என்றென்றும் பின் வைக்க  மாட்டார்கள்.

இடைக்கிடை கண்முன்னே தங்களது உறவுகள் குறிப்பாக வயோதிபர்கள், பெண்கள் குழந்தைகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ் வேளை அவர்களது போராட்டம் இன்னும் கூர்மையாகிக் கொண்டுதானிருந்தது. அவ்வப்போது அப்பாவிகளைக் தாக்கிவிட்டு வீர பிரதாபம் பேசித் திரியும் இஸ்ரேலுக்கும், அதனைப் பார்த்துக் கொண்டே குருடர்களாக இருக்கும் மற்றைய  நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டுமென சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அந்த   காஸா மண்ணின் மைந்தர்கள் காத்துக் கிடந்தனர். 

அந்தச் சந்தர்ப்பம்தான் அபூநஜாத்துக்கும் அவனது நண்பர்களுக்கும் வாய்த்தது.

விடுதலை வேட்கையோடு எத்தனை நாட்கள் தான் கற்களை மட்டுமே நம்பி இருப்பது. அபூ நஜாத் போன்ற உறுதிமிக்க இளைஞர்கள் எதிரிக்கு இணையான போர் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.  எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாளும் ஆற்றல்களையும் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்ல நவீன அறிவியல் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் கண்ணில் மிளகாய் தூள் தூவும் வண்ணம்  சில பல நுணுக்கமான ஆற்றல்களையும் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டனர்.  அந்த ஆற்றலே அபூநஜாத்தை எதிரியின் நாட்டுக்குள் - இல்லை இல்லை தமது நாடு என நினைத்துக் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் எதிரியின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லும் திறனை அவனுக்கு வழங்கி இருந்தது. தான் செல்வது மரணத்தின் பயணம் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கொஞ்சம் கூட அச்சச்சிறையில் தன்னை பூட்டி வைத்துக் கொள்ளவில்லை.

கண்முன்னே தனது அப்பாவி உறவுகள் அடிக்கப்பட்டு,  உதைக்கப்பட்டு, ஈவிரக்கமின்றி  துவம்சம் செய்யப்படுவதை அன்றாடம் கண்டு கண்டு அபூநஜாத்தினதும்,    அவனைப் போன்றே அவனது தோழர்களினதும்   நெஞ்சங்கள் புழுங்கிக் கொண்டிருந்தன. நிச்சயம் தமது எதிரி ராணுவம் அழிக்கப்பட வேண்டியவை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.  அந்த போராட்டத்தின் விலை தங்கள் உயிர்கள்தான் என்பதை அவர்கள் அறியாமலில்லை. தாங்களும் வீரச் சொர்க்கம் அடைய வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. எனினும் மரணிக்கும் முன்பு சுதந்திர பாலஸ்தீனத்தைக் கண்டுவிட்டு மரணிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உறுதியாக கொண்டிருந்தனர்.  நியதிப்படி எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகவே இருந்தனர். கொடூர இஸ்ரேலுக்கு பல மேற்குலக நாடுகள் துணையாக இருக்கும் போது தங்களுக்கு வெறும் வாய்ஜாலங்களே துணையாக இருக்கின்றன என்பதை எண்ணும் போதெல்லாம் அவர்களின் இரத்தம் கொதிப்பேறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. தம் கைகளே தமக்கு உதவி என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.

தாம் எதிர்பார்த்து காத்திருந்த வேளை வந்த போது, அவனும் அவனது நண்பர்களும் திட்டம் தீட்டினார்கள். அதனை திறம்படச் செய்யும் ஆற்றல்  தொழில்நுட்ப அறிவில் அனைவரையும் மிஞ்சிய அபூ நஜாதிற்கு இருக்கிறது என்று ஒருமித்துத் தீர்மானித்தார்கள்.

மிக சூசகமான முறையிலே திட்டமிட்டு அபூநஜாத் எதிரியின் எல்லைக்குள் சுரங்கம் வழியாக நுழைந்தான். எப்போதுமே தங்கள் கைகள் ஓங்கி இருப்பதன் கர்வத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் மிகவும் மெத்தனமாகவே இருந்தனர்.

அபூநஜாத்தும்  நண்பர்களும் குறிவைத்த  இடத்திற்கு ஒரு சில இராணுவ வீரர்களே பாதுகாப்புக்காக இருந்தனர். அவர்கள் கூட அவர்களது கவனங்களையெல்லாம் வெவ்வேறு திசைகளில்தான் செலுத்தி இருந்தார்கள். கேலிப்பேச்சுக்களை உதிர்த்து  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அது அபூநஜாத்தின் வேலையை அவன் நினைத்து வந்ததைவிட இலகுவாக்கியது. தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தானோ அது இத்தனை இலகுவாக முடியும் என்று அவன் கூட நினைக்கவில்லை.

எதிரிகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கும் கருவிகளை ஏமாற்றும் கலையில் அபூநஜாத் விசேட பயிற்சிப் பெற்றிருந்தான்.

அந்த அறிவைப் பயன்படுத்தி அவன் செய்து வந்திருந்த பொருள் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தது.

அதே வேளை வெளியே பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு இஸ்ரவேலின் தொழில்நுட்பம் இல்லையோ என்பதையும் அபூநஜாத்தினால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.  இல்லாவிட்டால் இப்படியான ஒரு திட்டத்தை இவ்வளவு இலகுவாக முடிக்க முடியுமா ?

அவனும் அவனது நண்பர்களும் திட்டமிட்ட காரியத்தை ஒரு சிறு கீறலுமின்றி அவனால்  செய்ய முடிந்தது அவனுக்கே பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.

"அல்ஹம்துலில்லாஹ்" என்று பாதுகாப்பாகத் திரும்பி வந்து அமர்ந்த போதுதான் அவனுக்கு இடி போல் அந்தச் செய்தி கிடைத்தது.

அச்செய்தி கிடைத்தவுடன் அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. பலமுறை சிந்தித்தான். பலவாறு சிந்தித்தான். நண்பர்களுடன் ஆலோசனை செய்ய நினைத்தான். என்றாலும் செய்யவில்லை. அவன் செய்ய நினைத்திருக்கும் காரியம் முன்பை விட அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும். தனது நண்பர்கள் அதனை தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் அவனை அவர்களிடம் ஆலோசனைப் பெறுவதைத் தடுத்தது.

எதையுமே யோசிக்கவில்லை தன்னந் தனியனாய் தன் பயணத்தைத் தொடர்ந்தான். எத்தனை நீளமான பயணம். சென்று வந்த வழி தான் என்றாலும், உள்ளம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. 'சென்ற முறை எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவிச் சென்றேன் இம்முறையும் அப்படி முடியுமா ? அல்லது உயிரைத் தியாகம் செய்ய நேரிடுமா ? '

"யா அல்லாஹ் நான் நினைத்த காரியத்தை முடிக்கச் செய். அதன் பிறகு எனது உயிர் பிரிந்தால் பரவாயில்லை" என்பதே அவன் வழியெங்கும் செய்த பிரார்த்தனையாக இருந்தது. 

சிரமத்துடன் தான் போக வேண்டிய எல்லையை அடைந்து விட்டான். இன்னும் ஒரு ராணுவ வீரனையும் காணவில்லை. எனினும் பதுங்கிப் பதுங்கிச் சென்றான். 

"டுமீல்" தலைக்கு மேலால் வெடிச்சத்தம். மயிரிழையில் அபூநஜாத் உயிர் தப்பினான்.

ஆறு ராணுவ வீரர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அவனைச் சூழ்ந்து விட்டார்கள்.

அவர்களது மேலதிகாரி கத்துவது கேட்டது.  அவர்களது மொழியிலேயே அவன் கத்தினான்      

"சுட வேண்டாம். அவனை உயிருடன் பிடியுங்கள். எப்படி இத்தனை தூரம் வந்தான் என்று கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும்"  என்றான்.

அதனால் ராணுவ வீரர்கள் அவனை அமுக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.  என்றாலும் அவர்களையெல்லாம் விட அபூநஜாத் மிகவும் பலசாலியாக இருந்தான். அவர்களது பிடியிலிருந்து திமிரி  அவனை விடுவித்துக் கொண்டான். தப்பி ஓட முயற்சி செய்தான். என்றாலும் ஒவ்வொரு ராணுவ வீரனும் அபூநஜாத்தை நையப் புடைக்க ஆரம்பித்தனர். மேனியிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

என்றாலும் அபூநஜாத் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அவர்களுடன் போராடிப் போராடி முன்னேறினான். துப்பாக்கியின் மறுமுனையாலும்,  சப்பாத்துக் கால்களினாலும் அவனை தாக்கினர். அத்தனையையும் தாங்கிக் கொண்டு அபூநஜாத் இன்னும் முன்னேறினான்.

ராணுவ வீர்களின் பிடிக்குள் இருந்து கொண்டே அவர்களையும் மீறி,  இரத்தம் தோயத் தோய உடைந்த கால்களை இழுத்துக் கொண்டு ஓரிடத்திலே வந்து நின்றான்.

ஒரு பெரும் கல்லை அகற்றினான்.

அங்கே பெரியதொரு வெடிகுண்டு மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கண்டு ராணுவ வீரர்கள் அனைவருமே அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர்.  அதனை வெடிக்கச் செய்யத்தான் அவன் அங்கே வந்திருக்கிறான் என்று அவர்களுக்கு விளங்கிவிட்டது. அது வெடித்தால் அங்கே பேரழிவு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. 

அச்சத்தின் காரணத்தால் அவர்கள் அவனை விட்டுவிட்டு நெடுந் தூரம் ஓட ஆரம்பித்தனர்.

'இப்போது குண்டு வெடிக்கும், இப்போது குண்டுவெடிக்கும்' என எதிர்பார்த்து இருந்த வேளை அந்தக் குண்டு வெடிக்கவே இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது....

இல்லை குண்டு வெடிக்கவில்லை'

மெது மெதுவாக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கே அபூநஜாத் குண்டுக்கருகில் நின்று கொண்டு  ஏதோ செய்து கொண்டிருந்தான்.  ஏதோ வயர்களைத் தேடி  வெட்டிக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் அங்கே இருந்த ராணுவ அதிகாரிக்கு புரிய ஆரம்பித்தது.  அங்கே வந்திருந்தவன் குண்டை வெடிக்க வைக்க வரவில்லை.

அந்தக் குண்டை செயலிழக்கச் செய்ய வந்திருக்கிறான்.

அவன் குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த போதும் தனது பணியை செய்து முடித்திருக்கிறான். 

தனது பணி முடிந்து "அல்ஹம்துலில்லாஹ்" என்று அபூநஜாத் நிலத்தில் சாய்ந்தான். 

ராணுவ அதிகாரி, சிறிய மயக்கத்திலிருந்த அபூநஜாத்தின் கன்னத்தில் தட்டினான். முகத்தில் தண்ணீர் தெளித்தான். 

மெதுவாக கண்களைத் திறந்த அபூநஜாத்திடம்  "என்ன செய்கிறாய் ? " என்று கொச்சை அரபியில் கேட்டான்.

பேசும் திறனை இழந்திருந்த அபூநஜாத் மெது மெதுவாக பேசினான்.

"இந்த நிலத்துக்கு மேல் பெரியதொரு ராணுவ அணிவகுப்பு நடக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அந்த வேளையிலே இக்குண்டை வெடிக்கச் செய்தால் பெருந்தொகையான ராணுவ வீரர்களை, அரசியல் தலைவர்களை கொல்லலாம் என்று தீர்மானித்தோம்.

அதனால் தான் இந்த இடத்தை கண்டுப்பிடித்து நானே வந்து உங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைவாக இதனைக் கொண்டு வந்து பொருத்தினேன்.

"அப்படியா ?" நடுக்கத்தோடு கேட்ட ராணுவ அதிகாரி

"அப்படி என்றால், அப்படி என்றால் ஏன் இத்தனை கஷ்டப்பட்டு வந்து இதனை செயலிழக்க செய்கிறாய் ?"

"நான் இந்தக் குண்டை பொருத்தி விட்டு சென்ற பிறகுதான், எனக்கு அந்தத் தகவல் கிடைத்தது. 

அந்தப் பேரணியில் 400 சிறுவர் சிறுமியர் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்திதான் அது.  எங்களது இலக்கெல்லாம் ராணுவ வீரர்கள் ஆன உங்களை நோக்கித் தானே தவிர அந்த மழலைகளை நோக்கி அல்ல. அந்தச்  சிறுவர்கள் வெடித்துச் சாவதை நாங்கள் எப்போதுமே விரும்புவதில்லை.  அவர்களை பாதுகாக்கவே நான் மீண்டும் வந்தேன்"  என்று தட்டுத்தடுமாறி சொன்ன போது அந்த ராணுவ அதிகாரியின் விழிகளில் நீர் முட்டியது.

 இரத்தம் தோய்ந்த அபூநஜாத்தை அந்த ராணுவ அதிகாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

அவனது தழுதழுத்த நாவில் இருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன

" நீங்கள் தீவிரவாதிகள் அல்ல- போராளிகள்".

 ("விடிவெள்ளி"   7/12/2023)


செவ்வாய், 12 டிசம்பர், 2023

கவிஞர் பொன். தாட்சாயினி சர்மா

 தாட்சாயினி சர்மா


ஊற்றெடுக்கும் தமிழைத்தான் துணைக்கழைத்து
உற்சாக மே பொங்க வகவத்தில்
ஆற்றலினை யே காட்ட முன்வந்த
ஆரணங்கே இந்தப் பெண்கவிஞர்
போற்றலுடன் இன்றவர்க்கு தலைமை தந்து
பேருவகையே நாங்கள் கொள்ளுகின்றோம்
சாற்றுகின்ற கவிதைகளால் மனங்கவர்ந்த
சாதனையாள் இவளை நாம் வாழ்த்தி நின்றோம்

இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பிடித்து
இடறிவிழாதே எங்கும்  தடம்பதித்து
உலவுகின்ற இவர் எழுந்து நிற்கின்றார்
உதவுகின்ற சமூகத்தின் சேவைதன்னில்
நிலவுக்கு ஒப்பான குளிர் மனத்தாள்
நிமிர்ந்திருப்பார் உயர்வான பண்புகளால்
வலம்வந்தார் இன்றெங்கள் வகவத்தில்
வாகாவே அரங்கத் தலைமையேற்று


தாட்சாயினி சர்மா எனும் இவரின்
தகைமைகள் பற்பலவாம் சாற்றவொண்ணா
வாட்டமின்றி எப்போதும் சிரித்த முகம்
வாஞ்சையுடன் பணிவதனின் துணையால் எங்கள்
நாட்டமதில் முன்னணியில் வந்து நின்றார்
நாடியே நாம் தலைமையினைத் தந்தே மகிழ்ந்தோம்
பாட்டெடுத்து எம்கவிஞர் அணியோ டிணைந்து
பாராட்டும் வண்ணம்தான் முன்னே செல்வார்

கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா
எங்கள் கவியரங்கம் தொண்ணூற்றி நாலு
இன்று நீங்கள் கிளப்புங்கள் தூளு

சர்மா பொன் தாட்சாயினி
உங்கள் கவியரங்கம்
இனித்திடட்டுமே இனி

வருக
கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா