நோன்புப் பெருநாள் தினமான
21/3/2026 அன்று
கெப்பிட்டல் எப்.எம். மில்
ஒலிபரப்பான எனது கவிதை
நோன்புப் பெருநாள் தினமான
21/3/2026 அன்று
கெப்பிட்டல் எப்.எம். மில்
ஒலிபரப்பான எனது கவிதை
வலம்புரி கவிதா வட்டத்தின் 120 ஆவது கவியரங்கு 02/03/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எழுந்திவன் கவிதை மண்ணில்
எடுப்புடன் உலவுகின் றான்
எழுதிய கவிதை தன்னால்
எழிலுற திகழுகின் றான்
அழுத்தியே மரபு தன்னை
அகமதில் வளரவிட் டான்
பழுதிலா பலரின் நெஞ்சை
பறித்திவன் இடம்பிடித் தான்
முனைப்புடன் முகநூல் தன்னில்
முழுவதும் பழகுகின் றான்
வினைதிறன் காட்டும் வண்ணம்
விசையுடன் தொடருகின் றான்
நினைக்கவே முடியா ரசிகர்
நினைவினில் நிலவுகின் றான்
தனக்கென பெயரும் பெற்று
தலைதனை நிமிர்த்திநின் றான்
வாழையின் தோட்டம் என்ற
வளமுறு பெயருக்கேற் ப
வாழையின் வரிசை தன்னில்
வஸீரிவ னுழைந்துவிட் டான்
பேழையாம் இலக்கி யங்கள்
பெருமையாய் வழங்கிவைத் த
வாழையின் வாரிசென் ற
வெகுமதி இவனும்பெற் றான்
வலம்புரி களத்தில் மின்னி
வலமிவ னிருக்கைபோட் டான்
நிலவென இவனும் இன்று
நிறைவுடன் தலைமையேற் றான்
உலகெலாம் தமிழை வார்த்து
உரியதோர் இடமும்பெற் றான்
மலரதன் மணத்தை வெல்லும்
மகிமையாய் அரங்கில்நின் றான்
கவிஞர்
வாழைத்தோட்டம் எம். வஸீர்
இன்றுங்கள் கையில் இருப்பது
நூற்று இருபது
இதில்
காட்டியே நிற்க வேண்டும்
கவிதை சிறப்பது
இடையிடைய
எழவேண்டும்
உணர்வுகளின் நெருப்பது
நிறைவேற்றி வைக்கவேண்டும்
எங்கள் விருப்பது
சபை
கரகோஷம் செய்து
உதிர்க்க வேண்டும்
அழகிய சிரிப்பது
வாருங்கள் கவிஞர்
வாழைத்தோட்டம் எம். வஸீர்
வலம்புரி கவிதா வட்டத்தின் 119 ஆவது கவியரங்கு 01/02/2026 அன்று கொழும்பு, ஜிந்துபிட்டி நீதிராஜா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் எம்.பீ.எஸ். பாலா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
எம்.பீ.எஸ். பாலா
இவர் எம்மைக் கவர்ந்தது
இவருக்குள்ள நல்ல மனதின்
சிறப்பாலா ?
இவருக்குள் குடியிருக்கும்
தமிழின் இருப்பாலா ?
எப்போதும் பணிவு காட்டும்
நல்ல பண்பாலா ?
எல்லோரையும் அரவணைக்கும்
இவரின் அன்பாலா ?
இவர் ஏந்தும்
புகைப்படக் கருவி எனும்
துருப்பாலா ?
கவிதைப் படகை
இவர் செலுத்தும் துடுப்பாலா ?
பிறருக்கும் வாரி வழங்கும்
கைகளின் சிகப்பாலா ?
இவரிடம் இருக்கும்
வெள்ளை மனதின் வனப்பாலா ?
எப்போதும் காட்டும்
முகச் சிரிப்பாலா ?
எறும்புபோல் இயங்கும்
இவர் சுறுசுறுப்பாலா ?
இவரிடம் இருப்பது
வள்ளுவன் முப்பாலா ?
இவர் எங்களவர்
என்று சொல்ல ஆசைப்படும்
எங்கள் தவிப்பாலா ?
எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி
எங்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
சின்னக் கவிதைகளில்
சின்னம் பொறிப்பவர்
எம்.பீ.எஸ். பாலா
தமிழக மண்ணில்
முடிசூடிக் கொண்டதும்
இதனாலா ?
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
இன்றவர் தலைமையில்
போடப் போகிறார் கோலா
கவியரங்கில் ஓடப் போகிறது
கவிதை
தேனா பாலா
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
இந்தக் கவியரங்கு
நூற்றுப் பத்தொன்பது
இன்றெங்கள் உள்ளங்களை
வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!
உறுதியாய் சொல்கிறேன்
இன்னல்களுக்கு மத்தியிலும்
இன்று
தலைமையேற்றிருக்கிறீர்கள்
நீங்கள்
எங்களை வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!
வாருங்கள்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
வலம்புரி கவிதா வட்டத்தின் 112 ஆவது கவியரங்கு 10/06/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் பர்ஹாத் சித்தீக்குக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
சுறுசுறுப்பின் இலக்கணத்தை தன்னில் காட்டி
சுகமென்றே பொதுச்சேவை
தன்னை ஆக்கி
விறுவிறுப்பாய் செயல்புரிந்து
நிற்கும்இவனை
விருப்பமுடன் பாராட்டி
நிற்பர் பலரும்
அருவருப்பு என்பதனை என்றும் காட்டா
அன்பு மகன் எல்லோர்க்கும் இனியன்; உயர்ந்தோன் பொறுப்பெடுத்து பணியாற்றும்
இவனை இன்று
பெருமனதாய் நாமழைத்து தலைமை தந்தோம்
பொதுச்சேவை மட்டுமல்ல கவிதை என்னும்
பேராறில் மூழ்கிஇவன்
முத்தும் எடுப்பான். விதவிதமாய் வகவத்தின்
மேடை தன்னில்
வியப்பூட்டும் கவிதைகளால் உள்ளம் நனைப்பான்
இதமாக இவன் கவிதை இருக்கும் அதுபோல்
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் பொருளும் இருக்கும்
சதம்போட்டு கவியுலகில் நிலைத்து நிற்பான்
சாதிக்கும் இளையமகன் பர்ஹாத் சித்தீக்
கவிஞர் பர்ஹாத் சித்தீக்
இன்றெங்கள் கவியரங்கு நூற்றுபன் னிரண்டு
உன்றன் தலைமையிலே வடியட்டும் தமிழ்த்தேனும் திரண்டு
வரவேற்று நாம் தந்தோம் எம்மேடை இன்று
காட்டி நில்லு உன் புலமை எம்மனதை வென்று
- என். நஜ்முல் ஹுசைன்
(09/11/2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 க்கு இடம்பெற்ற மஸாஹிரா கனியின் 'வேரெழுது', 'விடத்தல்தீவு புலவர் முஹம்மத் காசிம் ஆலிம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அனைவருக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வேறெழுத முடியாமல்
வேரெழுத வந்தார்
வேறெதுவும்
எழுத முடியாமல்
தன்
வேரெழுத வந்தார்
போர் எழுதியதால்
ஊர் அழுத
பொழுதெழுதி
பேர் எழுதிக் கொண்டார்
சுவைப்
போர் எழுதிய
சுவையால்
தன்
சுமை எழுதிக் கொண்டார்
தன் இமைப் பொழுதில்
எழுதியதை
இதயத்தில் எழுதி -
நூல் எழுதி -
நிஜம் எழுதி
எம்முன்னே
வைத்தார்
பல நெஞ்சங்கள்
தைத்தார்
மஸாஹிரா கனி
கனிந்தெழுதினாலும்
கனி எழுத வரவில்லை
காய் எழுத வரவில்லை
மானிடர்க்காய்
எழுத வந்தார்
வேரெழுத வந்தார்
வேரெழுது
என்று
ஏர் உழுது சென்றார்
கிளை பரப்பி
தலை நிமிர்ந்து
தன்
கனி கொடுத்து நிற்கும்
விருட்சத்தின்
அடி காண
எமை
அழைத்துச் சென்றார்
எமை
வளைத்துக் கொண்டார்
தன் பாட்டன்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
புகழ் எழுதிச்
சென்றார்
தன் வேர்
கண்டு கொண்டார்
அதனால்
வீறு கொண்டார்
நீர் எழுதியதால்
கண்ணீர் எழுதிய
காவியங்கள் பிறந்த
நாட்டில்
மஸாஹிரா கனியே
நீர் எழுதியது
ஆனந்தக் கண்ணீர்
காவியம்
தமிழ்
மார் எழுதிய
பால் குடித்து
தமிழ்ப்பால்
தனை வளைத்து
தாழ்ப்பாள் போடாது
கவிதை
மடை திறக்கும்
மஸாஹிரா
இவர் விழித்திருந்தது
பல இரா
அதில் கண்டதெல்லாம்
வேர் காணும் கனா
வயிற்றுக்கு
சோறெழுதிய
ஏர் எழுதிய
கவிதை
நெற்கதிர்
எங்கள்
வாழ்க்கைக்கு
வாழ்த்தெழுதிய
மஸாஹிரா கனியின்
எழுத்துக்கு
யார் நிற்கப் போகிறார்கள்
எதிர்
கார் எழுதியது
மழை
கெட்டிக் காரி
இவள் எழுதியது
கலை
அதை வைத்துத்தானே
எமக்கெல்லாம்
வீசியிருக்கிறார்
வலை
மஸாஹிரா கனி
விண்மீன் சொற்கொண்டு
எழுதிய கவிதையில்
வலைமீனாய்
வசியப்பட்டுப் போயிருக்கிறோம்
மூல வேர்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
பேத்தியே
மஸாஹிரா கனியே
இன்னும் இன்னும்
உன்
வேரெழுது
அங்கெல்லாம்
உன்
பேரெழுது
உனை
வாழ்த்தி மகிழ்கிறேன்
வல்லான் அல்லாஹ்
தொழுது !
நன்றி !
- என். நஜ்முல் ஹுசைன்