எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஜூன், 2026

இப்போது புரிந்தது - சிறுகதை

 இப்போது புரிந்தது


   - என். நஜ்முல் ஹுசைன் 

அப்துல்லாஹ் கலங்கிப் போனான். இப்படி ஒரு பதில் தனது பொஸ்ஸிடமிருந்து வரும் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அவனது பொஸ் தாஹிர் ஹாஜியார் மிகவும் நல்ல மனிதர். இரக்க குணமுடையவர். எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர். யாருடைய மனம் நோகும்படியும் பேசமாட்டார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஏழையாக இருந்து செல்வந்தர் ஆனவர். ஆனால் அவரது பிள்ளைகளிடம் அந்தப் பண்புகளை எதிர்பார்க்க முடியாது. அதிலும் அவரது மூத்த மகன் மிகவும் கர்வம் பிடித்தவன். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடன் முகம் கொடுத்தே பேசமாட்டான். அவர்களை மனிதர்களாகவே மதிக்கமாட்டான். 

அவர்களது நிறுவனம் பல பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம். அங்கே நீண்ட காலம் அப்துல்லாஹ் பொறுப்பான பணியில் இருந்தான்.

தாஹிர் ஹாஜியார் அப்துல்லாஹ்வுடன் மிக அன்பாக இருப்பார். அவன் தனது பணிகளிலே நேர்மையாக இருப்பதை பலமுறை அவதானித்திருக்கிறார். சிலவேளை சில விடயங்களில் தாஹிர் ஹாஜியாருக்கே அப்துல்லாஹ் ஹலால், ஹராம் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அதனால் மற்றவர்கள் மேல் காட்டும் அன்பைவிட அப்துல்லாஹ் மீது கொஞ்சம் கூடுதலான அன்பும், நன்மதிப்பும் தாஹிர் ஹாஜியாருக்கு இருந்தது.

அப்துல்லாஹ் எப்போதுமே எனக்கு அது வேண்டும், இது வேண்டும் எனக் கேட்க மாட்டான். தவிர்க்க முடியாத தேவையிருந்தால் மட்டுமே தாஹிர் ஹாஜியாரிடம் கேட்பான். மற்றபடி தனக்கு கிடைக்கும் சம்பளத்திலேயே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்வான். அதனை நன்றாக தெரிந்த தாஹிர் ஹாஜியார் அவன் இடையில் என்ன உதவி கேட்டாலும் அதனைக் கொடுக்கத் தயங்க மாட்டார்.

இன்றுதான் முதன்முறையாக அப்துல்லாஹ் கேட்டு தாஹிர் ஹாஜியார் "இல்லை" என்று சொல்லியிருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த அப்துல்லாஹ்வுக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அவர் "இல்லை" என்று சொன்னபோது அருகில் மூத்த மகனும் இருந்தான். அவன்தான் அவரது நல்ல மனதைக் கெடுத்திருக்க வேண்டும். "இப்போது யாவாரம் ரொம்ப டல். பொறவு பார்ப்போம்" என்று சொன்ன பதிலை அப்துல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆம் ஹாஜியாரின் மூத்த மகன்தான் அதற்கு காரணம். அப்துல்லாஹ் கொடுத்த கடிதத்தை மகனிடம் கொடுத்துதான் ஹாஜியார் வாசிக்கச் சொன்னார். 

அதை வாசித்த உடனே அவன் அந்தக் கடிதத்தை மேசையில் வீசினான்.

"டெடி, இப்படி கேக்குற கேக்குற நேரமெல்லாம் இவங்களுக்கு பணம் குடுக்க வாணாம். நாங்கதான் நல்ல செலரி குடுக்குறோமே. அதுல இத எல்லாம் அவங்க பார்த்து கொள்ளணும். எங்களுக்கே எவ்வளவு கொமிட்மன்ட்ஸ் இருக்கு"

தன் டெடி அப்துல்லாஹ்வுக்கு உதவி செய்வதற்கு பெரியதொரு தடையைப் போட்டு நின்றான் அந்த மகன். ஹாஜியார் என்னதான் நல்ல குணமுள்ளவராக இருந்தாலும் தனது அன்பு மகனின் பேச்சை மீற அவரால் முடியவில்லை.

அதுதான் அவர் அப்துல்லாஹ்வுக்கு சொன்ன "இல்லை"க்கு காரணம்.

உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அப்துல்லாஹ் நன்கு புரிந்து கொண்டான்.

வீட்டுக்குச் சென்று மகளிடம் என்ன சொல்வது ? மனைவியிடம் என்ன சொல்வது ? என்ற கவலை அவனை உறைந்து போக வைத்தது.

இவ்வளவுக்கும் அவன் பெரிதாய் எதையும் முதலாளியிடம் கேட்கவில்லை. உயர்தரம் படித்துக் கொண்டிருந்த தனது மகளது டியூஸன் பீஸ், புத்தக செலவுகளுக்காக உடனடியாக அவனுக்கு 26,000/- ரூபா அளவில் தேவைப்பட்டது. அதனைத்தான் அவன் சரியாகவே கணக்கிட்டு தனது மகளின் படிப்புச் செலவுக்காக
 25,600/- ரூபாய் தேவை என எழுதிக் கொடுத்திருந்தான்.

கலங்கிப் போயிருந்த அப்துல்லாஹ் "யா அல்லாஹ், நீயே போதுமானவன்" என்று மொழிந்தவனாக தனது அன்றாட பணிகளில் ஈடுபட ஆரம்பித்தான்.

வழமையாக வரும் தபால்காரன் அலுவலகத்திற்கு வந்த தபால்களை அப்துல்லாஹ்விடம் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் போன கையோடே அன்றைய பதிவுத் தபால்காரனும் வந்து சேர்ந்தான். அப்துல்லாஹ்விடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்துச் சென்றான்.  

அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டுச் சென்று முதலாளியின் கெபினைத் தட்டி கடிதங்களை கொடுத்துவிட்டு வந்து தனது பணிகளில் மீண்டும் ஈடுபடலானான் அப்துல்லாஹ். 

ஒரு அரை மணித்தியாலம் சென்றிருக்கும், தாஹிர் ஹாஜியார், "அப்துல்லாஹ், அப்துல்லாஹ்" என்று கூப்பிடுவது கேட்டது. 

அப்துல்லாஹ் உள்ளே சென்றான். தாஹிர் ஹாஜியார் ஒரு என்விலப்பை நீட்டினார். கையில் வாங்கிய அப்துல்லாஹ் ஒட்டாமல் இருந்த என்விலப்பை அங்கேயே திறந்துப் பார்த்தான். அதில் 30,000/- ரூபா பணம் இருந்தது. எதுவுமே விளங்காமல் விழித்த அப்துல்லாஹ்விடம், "இது நீங்க காலையில கேட்ட பணம். முதலுல இல்லன்னு சொன்னேன்னு ஒன்னும் நெனைக்க வாணாம். இத கொண்டு போய் ஒங்கட மகள்ட படிப்ப பாருங்க" ஹாஜியார் சொன்னார். அருகே அவரது மகனும் அப்துல்லாஹ்வை சிரித்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென ஏன் இந்த மனமாற்றம். ஒன்றும் புரியவில்லை.

"ஜஸாக்கல்லாஹ் கைர்" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான் அப்துல்லாஹ்.


அல்ஹம்துலில்லாஹ் ஒருவழியாக மகளது பிரச்சினை தீர்ந்தது. என்றாலும் ஹாஜியாருக்கும் அவரது மகனுக்கும் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்தின் காரணத்தை யோசிப்பதை மட்டும் அவனது மனம் நிறுத்தவில்லை.


தனது வேலைகளில் மூழ்கிப் போயிருந்த அப்துல்லாஹ்வைக் கூப்பிட்டு அன்று வந்திருந்த கடிதங்களை பைல் பண்ணக் கொடுத்தார் தாஹிர் ஹாஜியார்.

அதற்கான பைல்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக பைல் பண்ணத் தொடங்கினான் அப்துல்லாஹ்.

அப்போதுதான் அவனது கண்களைக் குத்திக் கொண்டு நின்றது ஒரு கடிதம். அது அரசாங்க கடிதம். டெண்டர் ஒன்றில் கலந்து வெற்றி பெற்று பொருள்களை இறக்குமதி செய்து கொடுத்ததற்கான கொமிஷனைக் குறிக்கும் கடிதம். 

சில மாதங்களுக்கொரு முறை இப்படியான கடிதங்கள் வருவது வழக்கம். கொமிஷனுக்கான காசோலையும் அதனோடு வரும்.

இப்போதுதான் அப்துல்லாஹ்வுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது.

அப்துல்லாஹ் கொடுத்து விட்டுச் சென்ற கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கலானார் தாஹிர் ஹாஜியார். பதிவுத் தபாலில் வந்த கடிதத்தைத்தான் முதலில் உடைத்தார். 

உள்ளே இருந்த செக்கையும், கடிதத்தையும் பார்த்த ஹாஜியாருக்கு பெரிய அதிர்ச்சி. 

இம்முறை கொம்பெனிக்கு வந்த கொமிஷன் பணம் 853,000/-. எப்போதுமே அந்தக் கொமிஷன் பணம் முழுமையாகவே வந்து விடும். ஆனால் இந்தத் தடவை அந்தத் தொகையிலிருந்து மூன்று சதவீதம் எனக் கூறி ரூபா 25,599/- கழித்து வந்திருந்தது. புதிய நடைமுறைக்கேற்ப இனிவரும் காலங்களில் கொமிஷன் பணத்திலிருந்து மூன்று சதவீதத்தை வரியாக அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டிருந்தது.

எப்போதுமே முழுமையாக வரும் கொமிஷன் பணம் இம்முறை மூன்று சதவீத கழிவுடன் வந்திருக்கிறது. அதுவும் அந்தக் கழிவுத் தொகை ஏறக்குறைய அப்துல்லாஹ் கேட்ட அந்தத் தொகை. அல்லாஹ் கணக்குப் போடுவதில் மாபெரும் வல்லவன்.

மகனைப் பார்த்து ஹாஜியார் சொன்னார், " இங்கப் பாருங்க. நாங்க அப்துல்லாஹ்வுக்கு கொடுக்க ஏலாது என்று சொன்ன பணத்தை அல்லாஹ் கழிச்சிட்டு அனுப்பிட்டான். அப்துல்லாஹ் போன்ற நேர்மையானவங்க எங்களுக்கிட்ட கேட்காம வேறு யாரிடம் கேட்பாங்க ? மகன் அல்லாஹ் மிக வல்லம உள்ளவன். எல்லாத்தையும் அறிஞ்சவன். நாங்க இப்படி உதவி செய்றதெல்லாம் எங்களுக்கு எந்த நஷ்டத்தையும் கொண்டு வராது. அல்லாஹ்ட பரக்கத்தான் கொண்டு வரும்"

கடிதத்தையும், காசோலையையும் கையிலே எடுத்துப் பார்த்துக் கொண்டே தனது டெடி சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்த அவரது மகன் ," இயஸ் டெடி, நீங்க சொல்லுறது சரி. ஒருநாளும் இல்லாம இப்படி நடந்திருக்கு. இது அல்லாஹ்ட வேலதான். அல்லாஹ் எங்கட கண்ண தொறந்திருக்கான். நீங்க நெனச்சத அப்துல்லாவுக்கு கொடுங்க டெடி" என்றான். அவனது பேச்சிலும் ஒரு தெளிவு இருந்தது.

•••••••••••••••••••••••••••••••••

(விடிவெள்ளி 18/06/2026)

திங்கள், 25 மே, 2026

கவிச்சமர்


 24/05/2026 ஞாயிறு காலை கொழும்பு புதுச்செட்டித் தெரு, ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் கவிஞர் எழுத்தாளர் ந. தாமரைச்செல்வியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

பல கலைநிகழ்ச்சிகளோடு ஒரு கவிச்சமரும் இடம்பெற்றது.

"பரபரப்பான வாழ்க்கையில்

பல்லாங்குழி ஆடும் துயரத்திற்கு காரணம் 

கணவனே, மனைவியே" என்பது தலைப்பு.

மனைவியே என்ற தலைப்பில் நானும் கவிச்சமர் செய்தேன்.

அதிர்ஷ்டவசமாக எனது கவிதையை நண்பர் மொழிவாணன் தனது கைபேசியில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Neethirajah Molivaanan அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

கலைஞானச்சுடர் சுபாஷினி பிரணவன் நடுவராக இருக்க கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், ந. தாமரைச்செல்வி, இறைஞானக்கவி ரமீஸ், தயாளினி ஆகியோர் சமர் புரிந்தனர்.


- என். நஜ்முல் ஹுசைன்



வியாழன், 26 மார்ச், 2026

கெப்பிட்டல் எப்.எம். நோன்புப் பெருநாள் கவிதை

 


நோன்புப் பெருநாள் தினமான 

21/3/2026 அன்று 

கெப்பிட்டல் எப்.எம். மில்

ஒலிபரப்பான எனது கவிதை







புதன், 4 மார்ச், 2026

கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர்


  

வலம்புரி கவிதா வட்டத்தின் 120 ஆவது கவியரங்கு 02/03/2026 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம். வஸீர் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.


   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர்

     வலம்புரி கவிதா வட்டம்

     (வகவம்) 




எழுந்திவன் கவிதை மண்ணில்

எடுப்புடன் உலவுகின் றான்

எழுதிய கவிதை தன்னால்

எழிலுற திகழுகின் றான்

அழுத்தியே மரபு தன்னை

அகமதில் வளரவிட் டான்

பழுதிலா பலரின் நெஞ்சை

பறித்திவன் இடம்பிடித் தான்


முனைப்புடன் முகநூல் தன்னில்

முழுவதும் பழகுகின் றான் 

வினைதிறன் காட்டும் வண்ணம்

விசையுடன் தொடருகின் றான் 

நினைக்கவே முடியா ரசிகர்

நினைவினில் நிலவுகின் றான்

தனக்கென பெயரும் பெற்று

தலைதனை நிமிர்த்திநின் றான்


வாழையின் தோட்டம் என்ற

வளமுறு பெயருக்கேற் ப

வாழையின் வரிசை தன்னில்

வஸீரிவ னுழைந்துவிட் டான்

பேழையாம் இலக்கி யங்கள்

பெருமையாய் வழங்கிவைத் த

வாழையின் வாரிசென் ற

வெகுமதி இவனும்பெற் றான்


வலம்புரி களத்தில் மின்னி

வலமிவ னிருக்கைபோட் டான்

நிலவென இவனும் இன்று

நிறைவுடன் தலைமையேற் றான்

உலகெலாம் தமிழை வார்த்து

உரியதோர் இடமும்பெற் றான்

மலரதன் மணத்தை வெல்லும்

மகிமையாய் அரங்கில்நின் றான்


கவிஞர்

வாழைத்தோட்டம் எம். வஸீர்


இன்றுங்கள் கையில் இருப்பது

நூற்று இருபது

இதில் 

காட்டியே நிற்க வேண்டும்

கவிதை சிறப்பது 

இடையிடைய 

எழவேண்டும் 

உணர்வுகளின் நெருப்பது 

நிறைவேற்றி வைக்கவேண்டும்

எங்கள் விருப்பது

சபை

கரகோஷம் செய்து 

உதிர்க்க வேண்டும் 

அழகிய சிரிப்பது


வாருங்கள் கவிஞர் 

வாழைத்தோட்டம் எம். வஸீர்




செவ்வாய், 3 மார்ச், 2026

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா



வலம்புரி கவிதா வட்டத்தின் 119 ஆவது கவியரங்கு 01/02/2026 அன்று கொழும்பு, ஜிந்துபிட்டி நீதிராஜா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்த கவிஞர் எம்.பீ.எஸ். பாலா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)

எம்.பீ.எஸ். பாலா

இவர் எம்மைக் கவர்ந்தது

இவருக்குள்ள நல்ல மனதின்
சிறப்பாலா ?
இவருக்குள் குடியிருக்கும்
தமிழின் இருப்பாலா ?
எப்போதும் பணிவு காட்டும்
நல்ல பண்பாலா ?
எல்லோரையும் அரவணைக்கும்
இவரின் அன்பாலா ?
இவர் ஏந்தும்
புகைப்படக் கருவி எனும்
துருப்பாலா ?
கவிதைப் படகை
இவர் செலுத்தும் துடுப்பாலா ?
பிறருக்கும் வாரி வழங்கும்
கைகளின் சிகப்பாலா ?
இவரிடம் இருக்கும்
வெள்ளை மனதின் வனப்பாலா ?
எப்போதும் காட்டும்
முகச் சிரிப்பாலா ?
எறும்புபோல் இயங்கும்
இவர் சுறுசுறுப்பாலா ?
இவரிடம் இருப்பது
வள்ளுவன் முப்பாலா ?
இவர் எங்களவர்
என்று சொல்ல ஆசைப்படும்
எங்கள் தவிப்பாலா ?

எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி
எங்கள் முன்
நிமிர்ந்து நிற்கிறார்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

சின்னக் கவிதைகளில்
சின்னம் பொறிப்பவர்
எம்.பீ.எஸ். பாலா
தமிழக மண்ணில்
முடிசூடிக் கொண்டதும்
இதனாலா ?

கவிஞர் எம்.பீ.எஸ். பாலா
இன்றவர் தலைமையில்
போடப் போகிறார்  கோலா
கவியரங்கில் ஓடப் போகிறது
கவிதை
தேனா பாலா



கவிஞர் எம்.பீ.எஸ். பாலா

இந்தக் கவியரங்கு
நூற்றுப் பத்தொன்பது
இன்றெங்கள் உள்ளங்களை
வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!

உறுதியாய் சொல்கிறேன்

இன்னல்களுக்கு மத்தியிலும்
இன்று
தலைமையேற்றிருக்கிறீர்கள்
நீங்கள்

எங்களை வெல்லப் போவது
வெல்லம் போன்ற
உங்கள் அன்பது!
வாருங்கள்
கவிஞர் எம்.பீ.எஸ். பாலா





செவ்வாய், 27 ஜனவரி, 2026

புதன், 14 ஜனவரி, 2026

கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கு 03.01.2026 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
   தலைவர்
   வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)

வழிகாட்டும் ஒளி விளக்காய்
இவரும் இங்கே
வீற்றிருந்து மாணவர்கள்
உலகம் செய்தார்
விழிதிறந்தார் இவரென்று
போற்றி மகிழ்ந்து
வீறுடனே பலரின்று
உயரம் தொட்டார்
களிப்புடன் நான்
இவரிடமே கற்றேன் என்று
கண்களிலே நீர் முட்ட
சொல்லி இவர்க்கு
அளிக்கின்றார் அள்ளி அள்ளி பிரார்த் தனைகள்

இலக்கியமே என்றதுமே
தூரம் மறந்து
இன்பமுடன் சுறுசுறுப்பாய்
பறந்து வருவார்
நிலவுஅது பௌர்ணமியாய் ஜொலிக்கும் நாளில்
நின்றிடுவார் வகவத்தின்
வாசல் வந்து
உலவுகின்ற உறவுக்கு
பாலம் அமைத்து
உயரத்தில் நின்றிருப்பார்
எங்கள் மனதில்
பலமாக இவர் எமக்கு
ஆனார் வகவ
பாதையிலே ராஜநடை போடுகின்றார் -
ராஜன் நடை போடுகின்றார்

நமடகஹ வரலாறு தன்னை எழுதி நல்லதொரு பணி செய்து
தலையும் நிமிர்ந்தார்
கமகமக்கும் கவிதைகளால்
எங்கள் மேடை
கலகலப்பாய் ஆவதற்கு
துணையும் நின்றார்
நமதுள்ளம் கவர்ந்தவரை
அழைத்து வந்து
நாமின்று இவ்வரங்கின்
தலைமை தந்தோம்
எமதரங்கின் தலைமை கவி
ராஜன் நசீர் தீன்
எழுகின்ற கரவோசை
வாழ்த்தும் உமையே

கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்

கவியரங்கில் நாம் தொட்டோம் நூற்று பதினெட்டு
உங்கள் தலைமையிலே ஜொலிக்கட்டும் புதுமை பல தொட்டு தமிழ் பாலில் தேன் கலந்து
நீ முரசு கொட்டு
சபையே
கவியரங்கு கலகலக்க
நீ கையைத் தட்டு

வாருங்கள்
கவிஞர் கலவெல ராஜன் நசீர்தீன் !