எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

நோன்புப் பெருநாள் கவிதை 11/4/2024

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



இனிமையாம் பெருநாள் இன்று
எங்களைச் சூழ்ந்த வேளை
அருமையாய் கெப்பிட்டல் டிவி
அன்புடன் அழைத்து எம்மை
பாடுக பெருநாள் கவிதை
பாருளோர் சிந்தை அள்ள
என்றதே; அதனால் இங்கு
எம் மனம் சொல்ல வந்தோம்

செவிகளை, விழிகளைத்தான்
எமக்கென
இங்கே தந்த
அன்பர்க்கே ஸலாம் உரைத்து

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பெனும் மாதம் வந்து
நன்மைகள் அள்ளித் தந்து
நோகின்ற மானிடர்கள்
இடரினை
எடுத்துச் சொல்லி
ஆன்மாவில் கலந்திருந்து
நேற்றுதான் போனதம்மா

உற்றதோர் தோழனாக
ஒரு மாதம் இணைந்திருந்து
பக்குவப்படுத்திச் சென்ற
ரமழானை நினைத்தால் கண்ணீர்
நண்பனே சென்றாய் என்று
அழுதிட வேண்டும் இன்று
அத்தனை உறவாய் இருந்தாய் -
எம்மை
சொத்தென பாது காத்தாய்
எம் பாவத்திற்கு நீ
வைத்தாயே
தீ


எண்ணம் போல் வாழ்ந்திருந்தோம்
பாவத்தில் மூழ்கிப் போனோம்
எங்களின் கண்கள் இரண்டை
கூடா காட்சிக்கே
கொடுத்திருந்தோம் - அது
பாவமே இல்லை என்றே
எமக்கு நாம் சொல்லி
நாளும்
பாவியாய் அலைந்திருந்தோம்
பாதகம் புரிந்திருந்தோம்

பிறரது பிழைகள் தன்னை
பெரியதாய் கண்டு நாமும்
அவர் மனம் நோகுமென்ற
எண்ணமே சிறிதுதுமின்றி
புறமது பேசி நாளும்
திரிவதில் இன்பம் கண்டோம்

எம்மிடம் எந்தப் பிழையும்
இல்லை நாம் சிறந்த மனிதர்
என்ற
எண்ணத்தில் இறுமாந்திருந்து
ஏமாந்து போனோம் நாமும்

நாவினால் மட்டுமல்ல
எங்கள்
எழுத்தினால் கூட
பிறரின்
குப்பைகள் கிளறி மகிழ்ந்தோம்

வலைதள புகழில் மயங்கி
வீண்
வலையிலே மாட்டி நின்றோம்

சகோதரன் இறைச்சியைத்தான்
சுவையென புசித்து மகிழ்ந்தோம்

நான் மட்டும் தானே இங்கே
நல்லவன் என்ற நினைப்பில்
எத்தனை பாவம் செய்தோம்
எம்மை
நரகுக்கே அனுப்பப் பார்த்தோம்

வந்ததே ரமழான் மாதம்- எம்
வயிற்றினை கையில் எடுத்து
வயிற்றிலே பசியை வைத்து
எம்
மமதையை அடங்க வைத்து -
ஒற்றுமை
கயிற்றையே கையில் தந்து
எம்மை
மாற்றியே போனதம்மா

வயிற்றதன் வழியால் எங்கள்
ஆன்மாவை
சிறையில் வைத்தோம்
அலைகின்ற விழிகளைத்தான்
அடக்கியே கட்டுள் வைத்தோம்

எம்மை கெடுக்கின்ற தூதன்
விழிகள் என்பதை
உணர்ந்து கொண்டோம்

வீறாப்புப் பேசித் திரிந்த
நாங்களே மாறிப் போனோம்
வீறுடன் வந்த ரமழான்
ஆணைக்குள் அடங்கிப் போனோம்

என்னென்ன பாடம் சொல்லி
எங்களைத் திருத்தி ரமழான்
அட இது
நாங்களா என்று
எண்ண
வைத்ததை
என்ன வென்பேன்

படைத்தவன் தன்னைத் தொழவும்
பக்குவம் இன்றி இருந்தோம்
கிடைக்கின்ற நேரம் மட்டும்
தொழுதிடல் போதும் என்று
எம்மையே ஏமாற்றித்தான்
அதுவரை வாழ்ந்திருந்தோம்

வந்ததும் ரமழான் கையில்
தந்ததும் குர்ஆன்தானே
ஓது நீ ஓது என்று
ஓர் அமைப்பிலே
எம்மை வைத்து
ஓதி நீ அல்குர்ஆனை
வெறுமனே மூடிடாதே
என்னதான் இந்தக் குர்ஆன்
சொல்கின்ற பாடம் என்று
ஆராய்ந்து பார் நீ என்று
எமக்கது பாடம் நடத்தி

தொழுகைக்கு என்று நேரம்
இருக்கிற ததனை எங்கள்
நெஞ்சத்தில் ஏற்றி வைத்து
பாங்கொலி கேட்ட நேரம்
பள்ளிக்கே விரைய வைத்து
பக்குவப் படுத்திச் சென்ற
பாசமே மிகுந்த நண்பன்
ரமழானே சென்று விட்டான்

ஏழைகள் வீட்டிலுள்ள
பூனைகள் படுத்த அடுப்பை
எரியவும் செய்த அந்த
அற்புதம்தானே ரமழான்
நேற்று
விடைபெற்றுச்
சென்றதம்மா

ஏழைகள் வீட்டு வாசல்
உணவுப்
பொருட்களால் நிரம்பவைத்து
ஆனந்தக் கண்ணீர் தன்னை
விழிகளில் வரவழைத்து
பிரார்த்தனை சாவி
மூலம்
சொர்க்கத்தின் கதவை  எல்லாம்
திறக்கவே செய்த ரமழான்
நேற்றுடன் சென்று விட்டாய்

அள்ளியே அள்ளித்தானே
கொடுக்கவே சொன்ன
ரமழான்
புள்ளியே போட்டு நம்மை
சொர்க்கத்தில் சேர்க்க வைத்தாய்

நேற்று நீ -

விடை பெற்றுச் சென்றதாலே
வேதனை உற்றோம் உண்மை
நண்பனே கலங்கிடாதே என்றுதான்
நீயும் சொல்லி
எம் கண்ணீரைத் துடைத்து விட்டாய்

கைகுட்டையாக நீயும்
ஷவ்வாலைப் பரிசளித்தாய்
பெருநாள்
கொண்டாடு எனப் பணித்தாய்


பெருநாள்
கொண்டாட
ஒன்று சேர்ந்தோம் 
உன் பெருமையை
எண்ணிக் களித்தோம்

மீண்டும் நீ அடுத்த வருடம்
எங்களை காண வருவாய்
இன்ஷா அல்லாஹ்

நீ புகட்டிய பாடம் எல்லாம்
மனதிலே இருத்தி நாங்கள்
அதுவரை காத்திருப்போம்
அழுக்கிலே அமிழ்ந்திடாமல்
என்றுதான் உறுதி சொன்னோம்

பெருநாளின் மகுடம் சூடி
பெருமிதம் கொண்ட யார்க்கும்
உரிமையாய் வாழ்த்து கூறி
உவகை நாம் கொள்ளுகின்றோம்

ஈத் முபாரக் !


- என். நஜ்முல் ஹுசைன்

(நோன்புப் பெருநாள் தினமான 11/4/2024 அன்று கெப்பிட்டல் டிவியில் ஒளிபரப்பான கவிதை)






புதன், 24 ஏப்ரல், 2024

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்

 வலம்புரி கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கம் 23/4/2024 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன் 

   - என். நஜ்முல் ஹுசைன்

     தலைவர், வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


சுறுசுறுப்பாய் பல பணிகள் தன்னில் நுழைந்து

சுமையென்றே எண்ணாது கடமை ஆற்றும் 

முறுவலிக்கும் இதயத்தார்; என்றும் முன்னே 

செல்வதற்கே துணிகின்ற மனமு முள்ளார் 

வறுத்தெடுக்கும் வெயிலிலே வாடும் மாந்தர் துயர்தீர்க்கும் 

மழையெனவே கவிதை பாடி

நறுமணத்தில் நம்மையெல்லாம்

மகிழவைக்கும் கவிஞரிவர் 

வாழ்த்துரைத்து வரவேற்போமே 


சட்டத்தை தன் வாழ்க்கைப் பயணமாக்கி

சத்தியத்திலும் நிலைக்க வேண்டுமென்று

கட்டத்துக்குள் தன்னை நிலைநிறுத்தி

கண்ணியமாய் பலர் மனதில் எழுந்து நிற்கும்

பட்டங்கள் பலவற்றை கல்வியோடும் 

பற்றித்தான் பிடித்திருக்கும் 

கவிதையோடும்

எட்டித்தான் பிடித்தவர்க்கே 

எங்கள் தலைமை தந்தேதான் நாம் மகிழ்ந்தோம்; அரங்கில் வைத்தோம்


எத்துறையில் தான் சார்ந்து இருந்த போதும்

இலக்கியத்தின் தாகத்தை நெஞ்சில் ஏந்தி

பத்திரிகை கவிதையென நின்றே இலங்கி

படித்ததுவும் பகர்வதுவும் பத்தி எழுத்தில்

முத்திரையே பதித்தவரை அழைத்து வந்தோம்

முன்னின்று கவியரங்கைத்

தலைமை யேற்க 

வித்துவத்தை காட்டுங்கள் எங்கள் அரங்கில்

வீறுடனே எம் கவிஞர் படையினோடு 


கவிஞர்

சட்டத்தரணி

ரஷீத் எம். இம்தியாஸ் 

தொண்ணூற்றி எட்டுக் கவியரங்கைத் தூக்கி வந்தோம்

தொண்ணூற்றி ஒன்பதனை 

உங்கள் தலைமேல் வைத்தோம்

நூறினிலே நாங்களுமே 

சுடராய் மின்ன

நூற்று ஒரு கவி படித்து

வாசல் திறப்பீர் 


வருக

கவிஞர் ரஷீத் எம். இம்தியாஸ்






வெள்ளி, 12 ஏப்ரல், 2024

கவிஞர் ராஜா நித்திலன்

 (வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கு 24/03/2024 ஞாயிறு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ராஜா நித்திலன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்)


   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம்
     (வகவம்)



வளமாக வேஎங்கள் வலம்புரியும்
வீறுநடை போட்டிடவே
வேண்டுமென்ற உளம்கொண்ட ஓரிளைஞன் எம்மோடு
உறுதியுடன் உழைத்திடவே முன்னே வந்தான்
இளம்ரத்தம் எமக்கிங்கு
உறுதுணையாய்
இருப்பதனை நாம்கண்டு மகிழ்வே உற்றோம் உள்ளம் நெகிழ்ந்தோம்
களம்தன்னில் இவனை நாம்
ஏற்றிவிட்டு
கண் இமைக்காம லே நாம்
பார்த்து நின்றோம்

இவன் சொல்லும் கவிதைகளோ
தாளிலி ல்லை
இதயத்திலே ஏந்தி
வந்துநிற்பான்
அவல்போலே இனித்திடவே
வாய்திறந்து
அருவியென தமிழெடுத்துக் கொட்டிடுவான்
சுவரினிலே சித்திரமே தீட்டுகின்ற
ஆற்றலுளான்
மனங்களிலே அழகுறவே செம்மையுடன் கவிதை படம்
வரைந்திடுவான்
கவர்ந்தேதான் நெஞ்சங்கள்
பலவற்றில் நீங்காமலே இவனும் குடியிருப்பான்
கருப்பொருளில் வேதாந்தப்
புதையல் வைத்து
சிந்தைக்கு இவன் தீனிப் போட்டிடுவான்

மேடையிலே கவி படித்துப் போகும் இவனை
மேல்தட்டிப் பாராட்டா தாரும்
உளரோ
கூடையிலே தமிழ் அள்ளி வந்தே நிற்கும்
ராஜா நித்திலனைப் பாராட்ட
முடிவெடுத்தோம்
மேடையிலே கவித் தலைமை
உனக்கே என்று
மேன்மையுடன் சீராட்டி
அமர வைத்தோம்
ஏடைநீ திறந்து விடு எங்கள் கவிஞர்
ஏற்றம் பெற துணை வருவார்
என்றே சொன்னோம்


கவிஞர் ராஜா நித்திலன்

இது கவியரங்கு
தொண்ணூற்றி எட்டு
நீ
வண்ணத் தமிழெடுத்து
வானை முட்டு


எங்கள் கவிஞரொடு
கைகள் பிணைத்து
ஏறிச் சென்றே நீ
புகழை எட்டு

வருக
கவிஞர் ராஜா நித்திலன் !


 - என். நஜ்முல் ஹுசைன்