எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 30 நவம்பர், 2015

கவிஞர் எம்.ஏ.எம். ஆறுமுகம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது கவியரங்கு 25/11/2015 அன்று இடம்பெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞரும் இசைக் கலைஞருமான எம்.ஏ.எம். ஆறுமுகம் அவர்களை நான் இவ்வாறு அழைத்தேன்.
                                                                                  - என். நஜ்முல் ஹுசைன் 


நாடெங்கும் இவன் பார்வை சுற்றும்
அழுகுரல்கள்
இவன் நெஞ்சைப் பற்றும்
வைப்பானே இவன் அங்கு பற்றும்
உணர்வெங்கும் கொழுந்தே தீ பற்றும்


மரபுக்குள்ளே
தானே நிற்பான்
எண்ணத்தை
பிசகின்றி வைப்பான்
தீமைகள் கண்டாலே கொதிப்பான்
அது யாராக இருந்தாலும்
எதிர்ப்பான்

போலீஸ் -
காக்கிச் சட்டையும்
அணிந்தான் - கையில்
துப்பாக்கியும் கூட கொண்டான்
இரண்டுக்கும் உள்ளே பாயும்
கவிதையை
ஆயுதம் என்றான்

கவிதை ஆயுதம் ஏந்தி - அன்றே
வகவ அரங்கினில் மிளிர்ந்தான்
நெஞ்சை நிமிர்த்தித்தான் சொன்னான்
இன்றும்
அந்த நெஞ்சோடே உள்ளான்

இசைந்தான் இன்றவன்
இசைக்கும்
எமையெல்லாம்
அசைக்கும் வரமும்தான் பெற்றான்

வெள்ளையாய் கொண்டான் அகமும்
பேச்சினில் தந்தான் சுகமும்
கொள்ளையாய் சுவைகள் ஏந்தி
கவியரங்க தலைமை ஏற்று
கவர்ந்திட வந்தான்
ஆறுமுகமும்

கவிஞா
எம். ஏ.எம். ஆறுமுகம்
இன்றுனக்கு கவியரங்க
தலைமை
கொண்டு வா மீண்டும்
எம் இளமை


புதன், 11 நவம்பர், 2015

இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன்

வலம்புரி கவிதா வட்டத்தின் 21வது கவியரங்கு 27-10-2015 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமை ஏற்று நடத்துமாறு இளநெஞ்சன் முர்ஷிதீனை இவ்வாறு அழைத்தேன் - என். நஜ்முல் ஹுசைன்

மீண்டும் வகவம்
உயிர் பெறவே
தனது மூச்சைத் தந்தவனாம்


வேண்டும் வகவம்
கவிஞருக்கு
என்று
வேர்வை சிந்தி உழைத்தவனாம்

தூண்டும் கோலாய்
தானிருந்து
திறம்பட
பணியைச் செய்பவனாம்

மாண்டுப் போகக் கூடாது
முனைப்பில்
வெற்றிப் பெற்றவனாம்

அஞ்சா நெஞ்சன்
இளநெஞ்சன்
அகலப் பார்வை
பார்த்திடுவான்

ஆழம் இருக்கும்
கவி வரியில்
அகிலம் முழுதும்
பறந்திடுவான்

உலகில் அவலம் கண்டாலே
பேனா வழியால்
கொதித்தெழுவான்
துயரக் கதைகள்
சொல்லி இவன்
மேடை மீதே
கிளர்ந் தழுவான்

அவர்க்காய்
நெஞ்சை நிமிர்த்தி இவன்
கவிதை வழியால்
போர் தொடுப்பான்

போராளி இவன்
போராளி
உரிமைக்காக -
அலைகள் வீசும்
பேராழி

பிறருக்காய்
குரல் எழுப்பும்
படைப்பாளி

ஊரெல்லாம் வாழ்த்துவது
“இவன் வாழி”

எங்கள்
செயல் வீரர் செயலாளர்
இளநெஞ்சன் முர்ஷிதீன்
கவிதைகளில்
கொட்டுவது தேன்
கொட்டுவது தேள்

இளநெஞ்சன் முர்ஷிதீன்
இன்று
கவியரங்கை நடத்து
எங்கள் இதயங்களைப் பிடித்து…………