எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 11 மார்ச், 2024

வருக ரமழானே !

 


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


ரமழான் வசந்தம் கவியரங்கு

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டமும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்தியமும் இணைந்து புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த   ரமழான் வசந்தம் சிறப்புக் கவி ராத்திரி கவியரங்கம் 29/2/2024 வியாழன் மாலை கொழும்பு தெமட்ட கொட வீதி,  தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில்   நடைபெற்றது.

மறைதாஸன் தாஸீன் நத்வி அரங்கில்  ரமழானை வரவேற்று நடைபெற்ற கவியரங்கிற்கு
கலாபூஷணம் தமிழ்த்தென்றல்  அலி அக்பர்  தலைமைத் தாங்கினார்.

கவிஞர்கள்  என். நஜ்முல் ஹுசைன்,  அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி)  , அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி), புத்தளம் மரிக்கார்    ஆகியோர் கவிதை பாடினர்.

அங்கே நான் பாடிய கவிதை -

- என். நஜ்முல் ஹுசைன்






எழுந்து நின்றேன் சபையில்
என் கவிதை
சென்று விழட்டுமே உங்கள் அகப் பையில்
என்னதான் இருக்கிறது என் கையில்; பயமில்லை
அல்லாஹ்வே
என்னோடு நீ இருக்கையில்


அமலால் அழகுப்படுத்த வரும்
ரமழான் மாதம்
இன்ப அலை எழுந்து
நெஞ்சில் மோதும்

தமிழ்த் தென்றலோ டிணைந்து
கவிதை பேசும்
எங்கள் கவிதை வரி எங்கும்
சுகந்தம் வீசும்

தமிழ்த் தென்றல் அலி அக்பர்
ஏறி நிற்கின்றார்
இன்று கவியரங்க  மிம்பர்
அவர்
தலைமையிலே பாடுகின்ற
கவிஞர்களும்
எழுந்து நிற்பர்

இது மறைதாசன் யூ. எம். தாஸீன் நத்வி அரங்கு

சிறகடித்துப் பறக்கின்ற தவர்
ஞாபகமே
அவர் அரங்கில் நிற்பதெந்தன்
பாக்கியமே

அவரின் மாணவனாய்
முன் வீட்டுச் சிறுவனாய்
அன்புக்குப் பாத்திரமானவனாய்
பார்த்திருக்கிறேன் அவர் பா திறம்

"குர்ஆனே கூறாயோ"
கவிதைகளை
என் கையெழுத்தில்
பிரதி எடுத்துக் கொடுத்துள்ளேன்
அப்போதே அவர் கவிதைகளைச்
சுவைத்துள்ளேன் அவையெல்லாமே
தேன்

பிரதி எடுத்துக் கொடுத்ததற்கு
பிரதி உபகாரமாகவா
இங்கே நான் !

பெருந்தகையின்
மேலான ஜன்னத்துக்காய்
பிரார்த்தித்து !

கவியரங்கத் தலைவர்,
தாளெடுத்து
கையில் கோல் எடுத்து
தோள் சேர்ந்த கவிஞர்கள்
செவியெடுத்து
அவை சூழ்ந்த அறிஞர்கள்
அன்பர்கள்
அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் !


தேய்ந்து பிறை செல்கிறது
வளர்பிறையை
அழைத்து வர

ஓய்ந்திருந்த சொந்தங்களை
மீண்டும் பள்ளி
இழுத்து வர

ரமழான் பிறையை
வரவேற்க
ஷஃபான் பிறையும்
நோன்பு வைத்திருக்கிறது


பள்ளிவாசல்களே
நீங்கள்
கொஞ்சம்
கொழுக்க வேண்டியிருக்கும்

வானத்தில் ரமழான்
பிறை வரும் போதே
உங்கள் வாசலுக்கு
புதிதாய் பலர்
வந்து விடுவார்கள்

தொழுகையும் அழுகையும்
புதுக் குரலில்
உங்களிடம் சங்கமிக்கும்

இடித்து இடித்துக்
கட்டிய
பள்ளிவாசல்களை
இடிக்கும்
இபாதத்வான்கள்

அவர்களையும்
நீங்கள்
தழுவிக் கொள்ளுங்கள்
ஒரு சிலராவது
இறுதிவரை
வாழ்நாள்
இறுதிவரை
நழுவிக் கொள்ளாமல்
இருப்பர்

வானத்தைப் பார்ப்போருக்கு
ரமழான் பிறை தென்படும்
வாழ்க்கையைப் பார்ப்போருக்கு
தங்கள் குறை தென்படும்

குறையகற்றி
தூசு தட்ட
இதோ ரமழான்
அருகிலே

ஆம் ரமழானே
நீ
எங்களை
ஒட்டடை அடிக்கும்
மாதம்

சைத்தானிய
சிலந்தி வலைகளால்
எங்களை
நாங்களே
பின்னிக் கொண்டு

சென்ற முறை
சென்ற போது
எமக்கு
விலங்கிட்டுச் சென்றாய்

விலங்கை உடைத்து
விடுதலைப் பெற்று
இப்போது
விலங்காகி
இருக்கிறோம்

புனிதத்தை
ஒரு மாதத்துக்கு
மட்டுமே
மட்டுப்படுத்திக் கொள்ளும்
சமுதாயம்

ரமழானே
எமது பாதுகாப்பு அரணே
ஏன் நாம் ஆகிப் போகிறோம்
உனக்கு முரணே

நாம்
கயிறுகளை விட்டுவிட்டாலும் -
இஸ்லாமிய வயிறுகளையெல்லாம்
ஒற்றுமையாக்கும்
அதிர்ஷ்டசாலி நீ

கஜானாக்களைத்
திறந்து கொடுப்பவர்களை
மட்டுமல்ல
கைகளைப் பொத்திக் கொடுப்பவர்களையும்
உருவாக்கும் நீ

இல்லாதவர்கள் கூட
இல்லாதவர்க்கு
எதையாவது கொடுக்க
சொல்லிக் கொடுக்கும்
மாதம் நீ

கொடுப்பதை செல்வந்தருக்கு
மட்டுமல்ல
மிஸ்கீனுக்கும்
பொதுவுடமையாக்கும்
மாதமே

ஸக்காத்தும் ஸதக்காவும்
ஒன்றையொன்று
முந்திக் கொள்ள
போட்டி நடாத்தும்

வீடு தோறும்
கையேந்தித் திரிவோர்
ஒரு புறமிருக்க
வீடு வீடாய்
மூட்டைக் கட்டிக்
கொடுப்போரை
வறுமையின் கொடும்போரை
எதிர்க்கச்
சொல்லிக் கொடுப்போரை
உருவாக்கும்
மாதம் நீ

கண்ணியவான்களையும்
புண்ணியவான்களையும்
உருவாக்குவதில்
முன்னணியில் நீ

நரகத்துக்கு மட்டுமே
போய் கொண்டிருப்போரை
தடுத்து நிறுத்தும்
அணைக்கட்டே ரமழானே

சுவனம்கூட
நீ வந்த பிறகுதானே
தன் பேனாவுக்குள்
அதிக மையை
ஊற்றிக் கொள்கிறது
தன் ஏட்டில்
பல இலட்சம் பேரின் பேரை
எழுதிக் கொள்ள

பாவம் நரகம்
தலையைத்
தொங்கப் போட்டுக்
கொண்டு

ரமழானே
இபாதத்தை
உனக்காக மட்டுமே
சுருக்கி வைத்துக்
கொள்ளும் சமுதாயம்

ரமழான் முழுவதும்
சூபி ஞானிகளாய்
குர்ஆனை ஏந்தும்
தேனிகளாய்

ஒரு மாதப் பயிற்சியோடு -
இடையில் முளைக்கும்
பல்கலைக்கழகங்களைப்
போல் -
எங்களுக்கு நாங்களே
கலாநிதி பட்டம்
சூடிக் கொண்டு

இருந்தாலும்
ரமழானே

பலரது வாழ்க்கையைப்
புரட்டிப் போடும்
நெம்புகோல்
உன்னிடம்

பலரின் முதல் சுஜூதுகளை
பதிவு செய்தவன்
நீ



இஸ்லாம்
உலகெங்கும்
வியாபித்துள்ளது

என்றாலும்

எமது
அடுத்த வீட்டுக்குள்
இன்னும்
நுழையாமல்

சில அப்துல்லாஹ்கள்
நோன்பு மாதத்திலும்
நோன்பு பிடிப்பதில்லை

ஏனெனில்
அவர்களுக்கு
நோன்பு
பிடிப்பதில்லை

இல்லை இல்லை
நோன்பே
உனக்கு அவர்களைப்
பிடிப்பதில்லை

அலைந்து திரிந்த
மனங்களை
கட்டிப்போடவும்
சிதைந்து போன
உள்ளங்களுக்கு
கட்டுப் போடவும்
நீ வருவாய்
முஃமீன்களுக்கு
நீ வருவாய்
தருவாய்

நாடே கஞ்சிக்காக
கெஞ்சிக் கொண்டிருக்கையில்
பிஞ்சுக் கைகள் ஏந்திக்
கொண்டு வரும்
கஞ்சிக் கோப்பைகளைத்
தட்டி விடாதீர்கள்

யாருக்குத் தெரியும்
அதுதான்
அவர்களின்
சஹர் சாப்பாடோ?

முஸ்லிம்கள்
சட்டை அணிந்திருக்கிறோம்
ஈமானை
அசட்டை செய்து கொண்டே

ஹராமும் ஹலாலும்
அருகருகே
ஓடும் நதிகளாய்

கால்
சேற்றிலா
ஆற்றிலா என்று
தெரியாமல் நாங்கள்

எமது வயிற்றைக் கிள்ளும்
பாலஸ்தீன
பசியும்
மெக்டோனோல்ட்ஸ்
உணவுகளால்
செரித்துப் போகும்

பல வண்ண மைகளும்
கலக்க வேண்டிய
ஒற்றுமை
ஒற்றை மையாய்
கருமையாய் -
கடுமையாய்

சரி என்ற வாதத்தால்
சரிந்து கொண்டு
பிழைக்குள்
பிழைத்துக் கொண்டிருக்கிறோம்

ஒருவரையொருவர்
அணைத்துக் கொள்ள
சொல்லித் தந்தது
இஸ்லாம்

ஒருவருக்கொருவர்
அடித்துக் கொண்டு
இஸ்லாமிய ஒளியை
அணைத்துக் கொண்டிருக்கிறோம்

இருந்தாலும்
நன்றி மறந்த
எங்களை மன்னித்து

ஆண்டுதோறும்
எங்கள் தலையில்
மகுடம் சூட
நீ வந்து
நிற்கிறாய்
ரமழானே

ஷஃபானும் நாங்களும்
குதூகலமாய்
வான வீதியில்
செங்கம்பளம் விரித்துக்
காத்திருக்கிறோம் -

அமலால் அழகு சேர்க்கும்
ரமழானே
உன்னை வரவேற்க !

நீ
கற்றுத் தரும்
பாடங்களை
கைவிட மாட்டோம்
என்ற
உறுதி மொழியோடு....

உனக்காய்
மீண்டும் வெள்ளையடித்த
பள்ளிவாசல்களைப் போல்

நாங்களும்
மீண்டும் வெள்ளையடித்துக் கொண்டு
காத்திருக்கிறோம் !

வருக
ரமழானே !

வாய்ப்புக்கு
ஜஸாக்கல்லாஹ் கைர்

அஸ்ஸலாமு அலைக்கும் !

  - என். நஜ்முல் ஹுசைன்

29/02/2024