எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

சொல் - கவிதை திக்வல்லையில் வாசிக்கப்பட்டது

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்



வாருங்கள் என்றெம்மை அழைத்ததுவே
திக்வெல்லை
தமிழ்த்தென்றல் தலைமையிலே
வந்தோம் நாம் இவ் வெல்லை

தென்றல் கவிதைகளை
சூறாவளி சொற்களிலே
சுமந்து வந்தோம்

கருக்களை மணந்து வந்த
சொற்களினால்
மணந்து நிற்போம்
உங்கள் மனங்களிலே
என்ற நம்பிக்கையில் !




கவியரங்கத் தலைவர்
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
உடன் பாட உடன் பட்ட
கவிஞர்கள்
அதிதிகள்
கேட்ட வுடன்
கைதட்ட காத்திருக்கும்
சபையோர்கள்
அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வந்து நின்றேன்
திக்வெல்லை

வரும் போது என்னோடு
கொண்டு வந்தேன் ஒரு
சொல்லை



சொல் என்னைப் பார்த்து
சொல் என்றது

உங்களைப் பார்த்து
சொல் என்றது

அதனைச்
சொல்ல வந்தேன்

அன்புள்ளங்களை
அள்ள வந்தேன்

குன் என்ற சொல்
உருவாக்கிய உலகம்

கூன் விழாமல் செல்
என்றுதானே
சொல்லித்தந்தது



இக்ரஹ் என்ற
ஒரு சொல்லே

இருளின் ஒளியின்
அர்த்தங்களைப்
பிரித்துக் காட்டியது
உலகத்தைப்
புரட்டிப் போட்டது

ஹிரா
இந்த உலகிற்கு
பகலைத் தந்தது

மனித இனத்தில்
மாற்றத்தை ஏற்படுத்திய
சொற்கள்
மறக்கடிக்கப்பட்டு விட்டனவா?

கஃபாவை
தனியே விட்டு விட்டு
சொர்க்கத்தை
இந்தப் பூமியிலேயே
கட்டப் பார்க்கும்
புதிய நம்ரூதுகள், காரூன்கள்

புதிய சொற்களுக்குள்
சின்னாபின்னமாகிறார்கள்

யாரிடமோ அவர்களை
விற்றுவிற்றார்கள்

அவர்களை
வல்லானிடம் நாங்கள்
விட்டு விடுவோம்

எங்களின்
பல சொற்கள்
இருளுக்கு மட்டுமே

எங்களைச்
சொந்தக்காரர்களாக்கி வைத்துக் கொள்கிறது

கனிகளை ஒதுக்கிவிட்டு
காய்களைக் கடித்தே
காலத்தை ஓட்டுகிறோம்

சுவையான கனிகள்
இருக்கின்றன
எங்கள் நாவுகள்
அழுகிய காய்களுடன்
நட்பு பாராட்டுகின்றன

சொல்லை
"ஷெல்" லாக்கி
குண்டு மழை
பொழிகிறோம்


எங்கள்
வாழ்க்கை
சொல் என்ற
வாகனத்தில்தானே
பயணம் செய்கிறது

கரடு முரடான
பாதைகளைக் கடக்க -
சரியாக
கடக்க
சொல் வாகனச் சாரதிகள்
அது
எங்கள் கைகளில்தானே
இல்லை இல்லை
வாய்களில்தானே
இருக்கிறது

நானும் நீங்களும்
எங்கள் சொற்களை
எங்கே இருந்து
பொறுக்கிறோம்
என்பதில்தானே
எங்களுக்கான
அடையாளம் இருக்கிறது

அதுதானே
நாங்கள்
பொறுக்கிகளா இல்லையா
என்று
பிரகடனப்படுத்துகிறது

நான் என்ற சொல்லுக்குள்
ஆயுள் கைதியாய்
போன மானுடம்

சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடியாமல்

மூச்சுத் திணறுகிறது

நாம் என்ற சொல்லுக்குள்
தன்னை வைப்பிலிடும்
மானுடம்
ஒன்றுக்கு நூறாய்
பெருக்கிக் கொள்கிறது

வெறுமனே
சொல் என்று
சொல்லி விடாதீர்கள்

அதனை
மின்சாரமாய்
செலவு செய்யுங்கள்

நீங்கள்
கோர்த்தெடுக்கும்
சொற்களே
உங்கள் வாழ்க்கையை
வார்த்தெடுக்கின்றன


அறிவுரை எனும் பெயரில்
செவிப்பறைகளை
கிழித்தெடுக்கும் சொற்கள்
இதயத்திலிருந்து
வழுக்கி விழுந்து விடுகின்றன

நேரம் தன்னைப்
புதைத்துக் கொள்கிறது
விழிகள்
உறக்கத்திடம்
அடிமையாகிப் போகின்றன

சமூக வலைதளங்களை
வடிகாணாய் உபயோகித்து
சாக்கடைச்
சொற்களை ஓட விடும்
எடுபிடிகள்

துர்நாற்றத்தை
தூய மணமாய் நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்

ஆம்
சொல்லுக்குள்
வாசமும், நாசமும்
இருக்கின்றன

பெற்றோருக்கெதிரான
"சீ" என்ற ஒரு சொல்
பல்லாயிரம் பூட்டுக்களால்
மூடப்பட்டிருக்கும்
நரகக் கதவினை
உடைத்தெறியும்
கடப்பாரை  - மறந்து விடாதீர்கள்

சொல்லே உன்னால்
எத்தனைப்
புதுமணத் தம்பதிகள்

விவாகரத்து
சிலந்தி வலைக்குள்

சொற்களை முன்பின்
சரியாக
அடுக்குவதில்
கோலம் ஆட்சி செய்கிறது
அலங்கோலம்
அடித்து விரட்டப்படுகிறது

சினம் கலந்த
சொற்களிலே
சோரம் போய் விடாதீர்கள்

உலகத்தின் சுழற்சிக்கு
சொல் தானே காரணம்

சொல்லால்
எழுந்து நிற்கும்
மனிதன்

அழிந்து போவதும்
சொல்லால்தானே

நேயப்படுத்தும் சொற்கள்
நிறைய இருக்கும் போது
காயப்படுத்தும் சொற்களால்
ஏன்
வாயை நிரப்பிக் கொள்கிறீர்கள்

அன்பு என்ற
சொல்லை மட்டுமே
விதையுங்கள்
இன்பம் என்ற சொல்
உங்கள்
தோளில் கைபோட்டுக் கொள்ளும்

பல வேளைகளில்
சொல்லில்லா மௌனம்
சொல்லுள்ள பேச்சை
வென்று நிற்கிறது

நில் என்றது
என் சொல்

முதலில் நீ
சொன்னபடி நில்
என்றது என் சொல்

அதுவரை
போதும் நில்
என்றது
அது

அதனால் இன்னும்
சொல்லாமல் செல்கிறேன்

என்றாலும்
என் சொல்படி
நான் நிற்க
உங்கள் பிரார்த்தனைச்

சொற்களில்
என்னையும்
பன்னீராய்த் தெளித்துக் கொள்ளுங்கள்

அதற்கு முன்

என் சொல்
மனதை ரணமாக்கும்
கல்லா
ஆத்மாவை மயக்கும்
கள்ளா

சொல் வேந்தர்களே
சொல்லுங்கள் !

நன்றி !

என். நஜ்முல் ஹுசைன்
25/02/2023



வியாழன், 20 ஏப்ரல், 2023

ரமழான் கவிதை - 2023

 





இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/04/2023 ஞாயிறு இடம்பெற்ற கவிஞர் அஸ்ரப் சிஹாப்தீனின்"கவிதா நதி" நிகழ்ச்சில் ஒலிபரப்பான ரமழான் கவிதை 


சுகந்தம் நிறைந்த

ரமழான் மாதத்தை

வயிற்றோடு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


என் ஈமானிய சமுதாயமே ! 


உன் இதயத்தைத் தானே

இஸ்லாம் கேட்கின்றது 


உன் அமல்களை

இந்த மாதத்திற்கு மட்டும்

மட்டுப்படுத்தி விடாதே 


அதனை

சொல்லித் தரத்தானே

இந்த ரமழான்

உனக்கு முன்னால்

வந்துள்ளது 


உன் இபாதத்துக்கும்

ஈமானுக்கும்

பாலம் போட்டுக் கொள் 


ஒன்றை யொன்றுத்

தொடாத

ஒன்றிலுமே பயனில்லை 


உன் வயிற்றை

நிரப்புவதும் 


அதை காலியாக

வைத்திருப்பதும்தான்

ரமழான் என்று

என் சமுதாயமே

ஏமாந்து போகாதே 


என்றுமே பசித்திருக்கும்

வயிறுகளை

உனக்கு அடையாளம் தெரியவில்லையா ? 


உனது ஈமானை நீ

பரிசோதித்திப்

பார்க்க வேண்டியிருக்கும் 


நீ 

செல்வந்தனாய்

இருக்கும் போதே 


சில்லறைகளுக்காய்

இத்தனை ஜனங்களா ? 


உன் கஜானாவுக்குள்

அழுக்குகளும்

இருக்கின்றனவா என்று

பரிசோதித்துப் பார்த்துக் கொள் 


அவைதானே

அழுக்குகள் சுமந்த 

மனித கோலத்தில்

தெருத்தெருவாய்

அலைகின்றன 


முஸ்லிம் உம்மத்தே

சுயநலம் உனக்குரியதல்ல 


பூனை உறங்கும் அடுப்புகள்

நாளைய உனது

நரக நெருப்பிற்குத்தானே

கட்டியம்

கூறிக் கொண்டிருக்கின்றன 


தோளோடு தோள்

நிற்பது

உனக்கு மட்டுமல்ல 


உனது

செல்வங்களுக்கும் கூட

கடமைதான்

என்று

உணர்ந்து கொள் 


ஒவ்வொரு ஆண்டும்

ரமழான் வரும்

போகும் 


எப்போதும் நீ

முஸ்லிமாகவே இரு ! 


     - என். நஜ்முல் ஹுசைன்

கவிஞர் வதிரி சி. ரவீந்திரன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 86 ஆவது கவியரங்கம் 05/04/2023 கொழும்பு 13 ரோயல் அகடெமியில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கலாபூஷணம் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
   - என். நஜ்முல் ஹுசைன்
     தலைவர்,
     வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)


தனக்கென்று தனிப்பாணி தன்னைக் கொண்டு
தமிழுக்கு அணிசேர்க்கும் வகவ கவிஞர்
மனங்கொண்டு அன்றுமுதல் இன்று வரையில்
மகிமையுடன் கவிபடைத்து உள்ளம் வெல்வார்
மனங்கோணா வகையினிலே எல்லோ ரோடும்
மனங் கவர வேநடக்கும் நல்ல மனிதர்
எனக்கென்றால் சம்மதமே என்று கூறி
எம் அரங்கின் தலைமையினைத்
தாங்க வந்தார்

போலீஸாய் தன் கடமை சிறப்பாய் செய்து
பொது மக்கள் சிக்கல்கள் தீர்த்து வைத்தார்
போலி யாய் தான் நடித்து எவரின் மனதும்
புண்படவே செய்யாத பண்பின் ஆளர்
வேலியாய் தான் வாழ்க்கை இல்லறத்தில்
வேட்கையுடன் வருவோரைப் பதிவு செய்து
ஜாலியாய்  அவர் வாழ்க்கை செல்லவென்று
வாழ்த்திவிடும் திருமண பதி வாளர்இவரே

ஈழத்து மெல்லிசையை ஆய்ந்து இவரும்
இன்புறவே நல்லாக்கம் தந்து உள்ளார்
வேழத்தின் பிளிறலுக்கு ஒப்பாய் நல்ல
வேரூன்றும் கவிதைகளும் படைத்தே உள்ளார்
ஆழ்மனது எங்ஙனுமே கவிதை கொண்ட
ஆர்ப்பாட்ட மில்லாத இந்தக் கவிஞர்
சூழ்ந்திருக்கும் நம் கவிஞர் படையை
நடத்த
சுடர்வரிகள் கொண்டேதான் முன்னே வந்தார்

சிதறி ஓடும் சிந்தனைகள்
சீராய் கோக்கும்
பதறி ஓடும் மானிடர்க்காய்
பாட்டுப் பாடும்
வதிரி தந்த கவிதை மகன்
வதிரி சி. ரவீந்திரன்

வரவேற்று உங்களிடம்
அரங்கைத் தந்தோம்
சுவையூற்றும் கவிஞர்களைத்
துணைக்கே  தந்தோம்

கவிஞர் கலாபூஷணம்
வதிரி சி. ரவீந்திரன் அவர்கள்


-   என். நஜ்முல் ஹுசைன்