எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 13 ஜூன், 2023

கவிதாயினி வாசுகி பி. வாசு

 



வலம்புரி கவிதா வட்டத்தின் 88 ஆவது கவியரங்கு 03/06/2023 கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிதாயினி வாசுகி பி. வாசு அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)


அழகு தமிழ் மொழியெடுக்கும் ஆற்றல் உள்ளார்
அற்புதமாய் கவி படைக்கும் பேறும் கொண்டார்
பழகுதற்கு உயர் பண்பு தன்னை நெஞ்சில்
பக்குவமாய் ஏந்தியெங்கள் முன்னே வந்தார்
முழங்குகின்ற வரிகளிலே ஆழம் வைத்தே
முத்திரைகள் பதிப்பதிலே வெற்றி கண்டார்
வழங்குகின்ற வார்த்தைகளால் உள்ளம் கவர்ந்தே
வகவத்தில் தனக்கென ஓர் இடமும் பெற்றார்



உற்சாகம் கரைபுரள கவிதைபாடி
உள்ளங்க ளிலிவரும் அமர்ந்து கொண்டார்
பற்றோடு ஆற்றல்கள் நிரம்பப் பெற்று
பல்வேறு பணிகளையே தலைமேல் வைத்தார்
குற்றாலம் அருவி என்னும் மொழியின் நடையால்
குழுமங்கள் பலவற்றின் தலைமை யேற்றார்
பழுதில்லா மொழியாலே இணைய தளங்கள்
பக்கங் களில் கூட செவ்வி காண்பார்

புகழ்மாலை பலவற்றை சூடி இந்த
பெண்கவிஞர் வகவத்தின் மேடை வந்தார்
மகிழ்ந்தே நாம்  கவியரங்கத் தலைமை தந்து
மனதார வாசுகியை வாழ்த்து கின்றோம்
நிகழ்காலம் எதிர்காலம் வெல்லும் கவிஞர்
நிரையொன்றை அவர் பின்னே நடக்கச் செய்தோம்
தகைமையுடன் தலைமையினை செய்வார் என்று
தலைநிமிர்ந்தோம்; வாழ்த்தி நின்றோம்

கவிதாயினி
வாசுகி பி. வாசு
கவிதையினால்
நீ இன்று பேசு
காட்டிடு நீ உந்தனது
மாசு !

அன்புடன் அழைக்கின்றேன்
கவிதாயினி
வாசுகி பி. வாசு

        - என். நஜ்முல் ஹுசைன்