எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 30 செப்டம்பர், 2023

மீலாத் வானொலி கவிதை 2023

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 28/09/2023 அன்று குருநாகல் கெகுணகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து நேரடியாக ஒலிபரப்பிய மீலாத் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்புக் கவியரங்கில் நான் வாசித்த கவிதை.  கவியரங்கிற்கு கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமை தாங்கினார்.


மண்பாடும் மா நபியின்

பண்பாடு எனும் மகுடத்தில் இடம்பெற்ற கவியரங்கில் எனக்கு வழங்கப்பட்ட தலைப்பு -


பகை வென்று பலம் தந்த.    பத்ர் களத்து மண்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும்


ஒரு.                                             பண் பாட வந்தேன்

பத்ர் களத்து மண் 

நான் -

பாட வந்தேன்

வல்லவனே அல்லாஹ்வே

வந்து விழட்டுமே 

என் வாயில் தேன்

அதை நினைத்தேன்

உனை துதித்தேன் 


கவிதை கசிகிறது

இந்த

பத்ர் களத்து

மண் வாசனையில் 

நான்

மூழ்கித் திளைக்கிறேன் 

அன்றைய

ரமழான் பதினேழின் 

யோசனையில்


உங்கள்

கல்புகளும் 

இணைந்து கொள்ளுமா 

இந்த சம்பாஷணையில் 


என் மேனிதானே

இஸ்லாம்

வாழப் போகிறதா 

மாளப் போகிறதா 

என்று


பலப் பரீட்சை

நடாத்திய இடம்


ஆமையிடம் 

முயல்

தோற்றுப் போனதை

நான் 

எழுதி வைத்தேன் -

சரித்திரப் புத்தகத்தில்


ஆயிரமாய்

ஆயுதமேந்திய கைகள்

ஈரமாய் 

துஆ ஏந்திய கைகளிடம்

என்

மண்ணைத்தானே 

கவ்வின 


சொற்ப முஸ்லிம்களை

எதிர்க்க

அற்பப் பதர்கள் 

அல்லவா 

ஆயிரமாய்

வந்திருக்கிறார்கள்

என்று காட்டிய 

பத்ர்

நானல்லவா


பத்ரை

சேறாக்க நினைத்தவர்கள்

இஸ்லாமிய 

கதிர்களை அல்லவா

விவசாயம் செய்தார்கள்


அவர்கள் குதிரைகளின்

குளம்போசை 

முஸ்லிம்களின்

தக்பீர் ஓசையின் 

முன் தோற்றுப் போனது


குதிரைகளில் வந்த

கழுதைகளாய் 

அவர்களுக்கு

அடையாளம் கிடைத்தது


இன்றோடு

கதை முடியும்

என்று வந்து

இஸ்லாத்திற்கு 

முடி சூடிவிட்டு

மடிந்து போனார்கள்-

பத்ரீன்கள் 

இஸ்லாமிய இதயங்களில்

படிந்து போனார்கள்


 புதிய அத்தியாயத்தை

எதிரிகளே

எழுதிச் சென்றார்கள் -


அவர்களது 

தோல்வியை

முதலீடு செய்து


பத்ர் நான்

பேரதிர்ஷ்டம் செய்த

மண்


நான்தானே

முதன் முதல்

முன்னூற்றி பதின்மூன்று

ஈமான்தாரிகளை

ஆயுதமேந்திய

வானவர்கள்

தழுவிக் கொள்ள

இடம் கொடுத்தவன்


மனப்பால் குடித்து

வந்தவர்களை

மண்டியிட வைத்து

அவர்களின்

வயிற்றில்

புளி கரைத்தேன்

இந்தப்

பாலையிலே

பாலை வார்த்தேன்


இங்கிருந்துதானே 

அகிலத்துக்கே

காலை

உதயமானது


நான்

சாதனை மண் மட்டுமல்ல 

சோதனை மண்ணும்தான் 


வாளேந்தி போராடுகிறார்களா அல்லது

வாலைச் சுருட்டிக் கொண்டு

புறமுதுகு காட்டுகின்றார்களா 

என்று

இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு

பரீட்சை வைத்தேன்


அவர்களது ஈமானை

அல்லாஹ்விடம்

சொல்லி வைத்தேன்


அவர்களை

பத்ரீன்கள் என்ற 

சொல்லில் வைத்தேன் 


முன்னூற்றி பதின்மூன்று

வெறும்

இலக்கமல்ல 

இடி

முழக்கம்

என்று பறைசாற்றியவன் நான்


அந்த 313

நூற்ற நூலாடைதான் 

முஸ்லிம்களின்

மானத்தை


இன்றும் 

பாதுகாத்து நிற்கின்றது

என்று காட்டியவன் 

நானல்லவா


 நான் மண்ணல்ல

இஸ்லாத்தை

உலகுக்கே காட்டிய கண்


என் மண்மீதுதானே 

உலகம்

கண் வைத்தது

ஈமான்

இதயம் வைத்தது


நான்

முஸ்லிம் உலகின்

இதயமானேன் 


என்னை

மண்ணாக நினைத்தார்கள்

முஸ்லிம்களை

மண்ணாக்க நினைத்தார்கள்

அவர்கள்தான்

மண்ணோடு

மண்ணாகிப் போனார்கள்


இஸ்லாமிய சாம்ராஜ்யம்

உலகமெங்கும் 

கட்டிடம் கட்ட

என்னிடமிருந்துதானே

மண் அள்ளினார்கள் 


ஒற்றை மரம் கூட இல்லாத

என்

வெற்று மேனியின் மேல்தானே 

அந்த ஈமான்தாரிகள்

வெற்றிக் கனி

பறித்தார்கள்


இன்றும் அதன் சுவை

முஸ்லிம் உம்மாவின்

நாவில்


நான் இன்றும்கூட

இறுமாப்போடிருக்கிறேன் 


எங்கள் அண்ணல் நபியின்

கண்ணீரைத்

துடைத்ததில் 

எனக்கும்

பங்கிருக்கிறதே 

என்று

எண்ணி எண்ணி.....


ஒப்பிட்டால்

முஸ்லிம்கள் என்மீது

வடித்த

உதிரத்தை விட

நான் அவர்களுக்கு

வழங்கிய

உதிரம்தானே அதிகம்


அதனால் தானே 

உலக தரைகள் எங்கும்

அவர்கள்

காலூன்றி நிற்கின்றார்கள்


அதனால்

என்றென்றும் நான்

உலகளாவிய முஸ்லிம்களின்

மனங்களில் எல்லாம்

மணந்து கொண்டே

இருப்பேன்


எங்கெங்கெல்லாம் 

அண்ணலே யாரஸூலே 

உங்கள் உம்மத்தை

தலைகுப்புறப் புரட்ட

சதி நடக்கிறதோ 

அங்கெல்லாம்

அவர்களைத் தூக்கி நிறுத்த 

நான் இருக்கிறேன்


இந்த 

பத்ர் களம்

இருக்கின்றது -

இன்றும் அதே

உயிர்ப்போடு !


ஸல்லல்லாஹு அலா முஹம்மத்

ஸல்லல்லாஹு அலைவஸல்லம் !


 - என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மாட்டிக்கொண்டான் - சிறுகதை

 

மாட்டிக்கொண்டான்


    - என். நஜ்முல் ஹுசைன்


முபாரக் ஒரு காலமும் இப்படி நடுங்கியதில்லை.  அச்சம் அவன் உள்ளத்தை மட்டுமல்ல உடம்பையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தான் கைது செய்யப்பட்டால் தனக்கு என்ன நிலைமையாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாமலிருந்தது.


மீடியாக்கள் முண்டியடித்துக் கொண்டு அவனது வீட்டு வாசலில் கெமராக்களை தூக்கிக் கொண்டு வருவது போன்றே அவனது மனக்கண் முன் தோன்றிக் கொண்டிருந்தது. அந்த மாயத் தோற்றத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை.  அவனது கைதுக்குப் பிறகு மீடியாக்கள் அவனது குடும்பத்தை என்ன பாடுபடுத்தும் என்று அவனால் யோசிக்கவே முடியாதிருந்தது.


தொலைக்காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. சிங்கள செய்திகளிலெல்லாம் இவ்வாறான செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தன. அதுவும் வேதனையைத் தந்து கொண்டிருந்தது.


அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே குலை நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த வரிசையில் தானும் வந்து விடுவேனோ என்று நினைப்பே அவனது தலையில் இடி விழுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.


பொலிஸாரும் இராணுவத்தினருமாக இணைந்து வீடு வீடாக தேடுதல் நடத்திக் கொண்டிருந்தார்கள்.  தனது வீட்டுக்கு வந்தால் நிச்சயமாக அவர்கள் கண்டுப் பிடித்து விடுவார்கள்.


அவர்களது தேடுதலுக்குப் பயந்து முபாரக் எத்தனைப் பெறுமதியான நூல்களை எரித்துப் போட்டான் . அவன் மட்டுமல்ல அவனைப் போன்ற பலர் இதனைத்தான் செய்தார்கள். வருபவர்களுக்கு அரபு மொழியைப் பார்த்தாலே அது தீவிரவாதிகளின் நூல்கள் போலல்லவா தெரிகிறது.  அதனால் பலர் குர்ஆனைக்கூட எப்படி மறைப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  வீட்டில் அரபு கிதாபுகளையும் குர்ஆன்களையும் வைத்திருந்த ஒரு சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வந்த செய்திகளும் முபாரக்கின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன.  "அல்ஹசனாத் " சஞ்சிகையை வைத்திருந்த பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் அவனை குழப்பமடைய செய்திருந்தன. அவனது மனைவியும் அவனை விடாது நச்சரித்துக் கொண்டே இருந்ததால், தான் இஸ்லாமிய அறிவினைப் பெருக்கிக் கொண்ட பல பொக்கிஷங்களைத் தடயமின்றி  எரித்துப் போட்டான். அப்போது அவனது ஈமானிய இதயம் பட்ட பாட்டை வரிகளில் உள்ளடக்கிவிட முடியாது.


ஆனால் இப்போதுள்ள இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவதென்றுதான் புரியாமல் தவித்தான்.  இதிலென்றால் எப்படியும் தான் மாட்டிக் கொள்வேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. பொலிஸார் வந்து அவனது கைகளில் விலங்கு மாட்டி அவனை இழுத்துக் கொண்டுச் செல்லும் காட்சி அவனது மனக் கண் முன் தோன்றிக் கொண்டேயிருந்தன.


கண்டியில் அவனுக்குத் தெரிந்த உறவினர் ஒருவரையும் கைது செய்து அடைத்து வைத்து சில மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் விட்டிருந்தார்கள்.  இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் - அவரது தேநீர் வைக்கும் மேசையில் போட்டிருந்த விரிப்பு. அது இராணுவ சீருடைக்கு ஒத்ததாக இருந்ததாம். அதனைக் காரணம் காட்டியே அவரைக் கைது செய்திருந்தார்கள். தொலைக்காட்சி செய்திகளில் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் வாய் கூசாமல் கூறப்பட்டன.  அவர் ஓர் அப்பாவி என்பது முபாரக்குக்கு நன்கு தெரியும். இருந்தாலும் என்ன செய்ய பாதுகாப்புப் படையினர் எங்களையெல்லாம் சந்தேகக் கண் கொண்டுதானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


முபாரக் எந்தத் தவறுமே செய்யவில்லை. இருந்தாலும் இப்போது அவனிடம் இருக்கும் சான்று அவர்களுக்கு முபாரக்கை சந்தேகத்திற்குரியவனாகத்தானே காட்டும்.


அதை நினைத்து நினைத்துத்தான் இரவும் பகலும் அச்சத்துடனும் கவலையுடனும் இருந்தான்.


அந்த அச்சத்துடனும் கவலைக்கும் மூல காரணமாக இருந்தது அவனிடமிருந்த அந்த "கத்திகள்தான்".


வீடுகளிலிருந்த ஓரிரு கத்திகளுக்காகக் கூட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே.   முபாரக்கிடம் கைவசம் இருப்பதோ  32  கத்திகள்.


இது சில வருடங்களுக்கு முன் அவன் செய்த வியாபாரத்தில் மிஞ்சியவை.  இப்போது அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் அவனிடமில்லை.


அதுதான் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தான் முபாரக்.  அவற்றையெல்லாம் ஒரு மூலையிலே போட்டு வைத்திருந்தான். அவை வெளிநாட்டுத் தயாரிப்பு என்ற காரணத்தால் ஆண்டுகள் பல கடந்தும் பளபளப்பாகத்தான் இருந்தன.  முபாரக் அவை தன்னிடமிருப்பதை மறந்தே போயிருந்தான். இந்தப் பிரச்சினைத் தோன்றிய பின்னர்தான் ஸ்டோர் அறையிலிருந்து அவற்றை வெளியில் எடுத்தான். அதிலிருந்து ஒரு சில கத்திகளையாவது எடுத்துச் செல்லுமாறு பல நண்பர்களிடம் கேட்டுப் பார்த்து விட்டான். என்றாலும் ஒருவர் கூட அதற்கு இணங்கவில்லை.  தங்களுக்கு இப்போதைக்கு கத்தி வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.


ஆனால் அதற்காக யாரையுமே குறை சொல்ல முடியாது. யாருமே தேவையற்ற சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.


எல்லா கத்திகளையும் குழி தோண்டிப் புதைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும். வீடுகளுக்கு மோப்ப நாய்களையும் அழைத்து வந்து தேடுகிறார்களாம்.


இதையெல்லாம் நினைத்து நினைத்தே முபாரக் பித்துப் பிடித்தவன் போல இருந்தான்.  அவனது மனைவி பரீதா கூட சமையல் செய்வதற்கும் திராணியற்று இருந்தாள். அவர்களது பிள்ளைகள் இது பற்றி எதுவுமே தெரியாமல் அவர்கள் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


இன்று முபாரக் வசித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதலை ஆரம்பித்திருந்தனர் என்ற செய்தி

அவனுக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது.


"முபாரக் அய்யே, முபாரக் அய்யே" யாரோ வாசலிலிருந்து பலமுறை அழைத்துக் கொண்டிருந்தது முபாரக்கின் காதுகளில் விழவேயில்லை.


முபாரக்கின் மனைவிதான் உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தாள். அது பக்கத்து வீட்டு சுனில் அய்யா.


அவளுக்கும் அச்சம் பிடித்துக் கொண்டது. நடுக்கத்துடன், "எய் அய்யே ?" (ஏன் அண்ணா ?) என்று கேட்டாள்.


உள்ளுக்கு வரவா என்று கேட்டுக் கொண்டே அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே வந்தான்.


"முபாரக், முபாரக் அந்தா பொலிஸெல்லாம் வாராங்க"


சுனில்  முபாரக்கின் அச்சத்தை அதிகரித்தான். முபாரக் விழிகளை விழித்து சுனிலைப்  பார்த்தான்


"ஒங்கட கத்திய எல்லாம் என்ன செஞ்சீங்க ?" சுனில்  கேட்டான்.


முபாரக்கிடம் இருக்கும் கத்திகளைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். பக்கத்து வீடென்றதால் சுனிலின் மனைவி மெனிக்கே முபாரக்கின் வீட்டிற்குள்ளே எல்லாம் சுதந்திரமாக நடமாடுவாள்.  அவள்தான் கத்திகளைப் பற்றியும் முபாரக்கும், மனைவியும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லியிருப்பாள்.


"எல்லாம் அப்படித்தான் இருக்கி" முபாரக் ஈனக் குரலில் சொன்னான்.


"அவங்க வந்தா ஒங்கள எப்படியும் புடிச்சுருவாங்களே" என்று சொல்லிக் கொண்டே சுனில்  வெளியே ஓடினான்.


முபாரக் ஆடாமல் அசையாமல் இருந்தான்.


இப்போது மீண்டும் சுனிலின்  குரல் கேட்டது.


"முபாரக்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.


"நங்கி கத்தியெல்லாம் எங்க ? " என்று பதறிக் கொண்டு கேட்டான்.


எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பரீதா கத்திகள் இருக்கும் இடத்தைக் கைக் காட்டினாள்.


ஓடிப் போய் எல்லா கத்திகளையும் சுனில்  அள்ளி எடுத்தான். ஒரே முறையில் அவற்றையெல்லாம் அவனால் எடுக்க முடியவில்லை. எல்லாமே பெரிய கத்திகள்.


மூன்று முறை கத்திகளை தூக்கிக் கொண்டு வெளியே போனான்.


முபாரக்குக்கும், மனைவி பரீதாவுக்கும் சுனில்  என்ன செய்கிறான் என்றே விளங்கவில்லை. வெளியே போய் பார்த்தார்கள்.


சுனில்  தான் அன்றாடம் மரக்கறி விற்கும் தனது தள்ளு வண்டியிலே கத்திகளைப் பரப்பி வைத்திருந்தான்


முபாரக்கையும், பரீதாவையும் பார்த்து அவன் சொன்னான்,

"பய வெண்ட எபா (பயப்பட வேண்டாம்)" என்று சொல்லி விட்டு தெருவுக்குப் போனதும் கூவ ஆரம்பித்தான்,


"பிஹிய, பிஹிய லாபெட்ட பிஹிய (கத்தி, கத்தி மலிவு விலைக்கு கத்தி" என்று முபாரக் வசித்த அந்தத் தெருவைத் தாண்டிச் சென்றான்.


அவன் அந்தத் தெருவைத் தாண்டிச் செல்லவும் அவனுக்கு முன்னால் பொலிஸ் ஜீப்பொன்று வரவும் சரியாக இருந்தது.


ஜீப்பின் முன் சீட்டில் அந்தப் பகுதியின் ஓ.ஐ.சி.தான் அமர்ந்திருந்தார். ஜீப் நிறைய பொலிஸ்காரர்கள்.


சுனிலின் தள்ளு வண்டியைக்  கண்டதும் கையை நீட்டி அதை நிறுத்தச் சொன்னார்.


கொஞ்சம் நடுக்கத்தோடு சுனில் வண்டியை நிற்பாட்டினான்.  ஓ.ஐ.சி. அவனை முன்னே வரச் சொல்லி சைகை காட்டினார்.


முன்னே போன சுனிலிடம் பெயர் என்ன என்று கேட்டார். பெயரைச் சொன்னதும் . அவனிடமிருந்த கத்திகளில் ஒன்றை எடுத்து வருமாறு

பணித்தார். கத்திகள் ஒன்றை எடுத்துச் சென்றதும் அதனைக் கையில் வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தார்.


நண்பனுக்கு உதவி செய்யப் போய் தான் மாட்டிக் கொண்டேனே என்று சுனில் நினைத்துக் கொண்டிருந்த போதே,


"மேக்க கீயத பங் ? (இது எவ்வளவு ?) " என்ற ஓ.ஐ.சீ. கேட்டதுமே சுனில் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.


"இது 1500/- ரூபா மஹத்தயா "  என்றான்.


"எச்சர காணத ? (அவ்வளவு விலையா ?)

.

" சேர் இது இத்தாலி கத்தி சேர்" . மறுபடியும்  ஓ.ஐ.சி. கத்தியை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு சுனிலிடம் கொடுத்து விட்டு தனது பரிவாரங்களோடு முன்னே போனார்.


சுனில் இன்னும் உற்சாகமாக, "பிஹிய, பிஹிய " என்று கத்திக் கொண்டு எதிர்புறமாகப் போனான்.


முஸ்லிம்களின் வீடுகளில் தேடுதல் நடத்துவதற்காக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருந்தார்கள்.


எந்தவிதமான கலக்கமுமின்றி முபாரக் தனது பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். முபாரக்கின் மனைவி பரீதா இன்றாவது முபாரக்குக்கு வாய்க்கு ருசியாக   சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமையலிலே தீவிரமாக இருந்தாள்.


இனவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் அதற்கு அடிமைப்பட்டு விடாமல் பழைய அதே நேசத்தில் எவ்வித குறையும் வைக்காமல் சுனில் செய்த அந்த உதவியை வாழ்க்கையில் என்றென்றும் முபாரக்கினால் மறக்கவே முடியாது. அதற்கு கைம்மாறாய் சுனிலின் படத்தை முபாரக் இதயத்தில் மாட்டிக் கொண்டான்.


.........................................

(ஞானம்  - செப்டெம்பர் 2023)

கவிஞர் ரவூப் ஹஸீர்

 


கவிஞர் ரவூப் ஹஸீர்


வலம்புரி கவிதா வட்டத்தின் 91 ஆவது கவியரங்கு 30/08/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)



புரட்டித்தான் போடுகின்ற ஆற்றல் உள்ளான்
புதுக் கவி தைக்கு என்று ஒரு பேரும் உள்ளான்
விரட்டித்தான் கயமைகள் மாயவென்று
வீறு கொண்டு எழவைக்கும் புதுமை சொல்லான்
திரட்டித்தான்  இவன் வழங்கும் தகவல் கேட்டு
திணறுகின்ற வகையினிலே எம்மைக் குத்தி
உருட்டித்தான் மனமெங்கும் ரணங்கள் செய்து
உணர்வுகளில் கிளறி விடும்
சொற்கள்; முள்ளான்

மேடையிலே இவனேறி நின்றால்
செவிகள்
மெய்மறந்து இவனுக்கே அடிமை யாகும்
ஓடையிலே நாம் குளித்து அள்ளும்
இன்பம்
ஓதுகின்ற இவன் மொழிக்குள் வந்து சேரும்
பீடையிலே வாடுகின்ற மானுடத்தின்
பிணிதீர்க்க இவன் கையில் ஏந்தும் வாளும் 
கூடையிலே இவனள்ளி கொட்டுகின்ற
கொள்கைக்குள் பலர்தம்மை
கொடுப்பர் நாளும்

இன்றல்ல நேற்றல்ல கவிதை ஏந்தி
இலக்கியத்தில் இவன் நுழைந்த தந்தக் காலம்
இன்றும்தான் இளமைவரி மாறிடாமல்
இயங்கியிவன் மாற்றுகின்றான் எங்கள் ஞாலம்
குன்றெனவே வலம்புரியில் ஏறிநின்று
கூர்மையுடன் போடுகின்றான் புதிய கோலம்
இன்றெங்கள் அரங்கிற்குத் தலைமைத் தாங்க
இணங்கி ஹஸீர் வந்ததெங்கள்
நல்ல நேரம்

தொண்ணூற்றி ஒன்று இந்த கவியரங்கம்
தோள்கொடுக்க வந்து நின்றார் ரவூப் ஹஸீர்
வண்ணங்களால் கவிஞர் அலங்கரித்தே
வார்த்தைகளால் வழங்கிடு வாரே சீர்
எண்ணங்கள் சிறகடிக்க இடம் அளித்தோம்
எழுச்சிக் கவிஞரென கொடுத்தோம் பேர்

வாருங்கள்
கவிஞர் ரவூப் ஹஸீர்


கவிஞர் ரவூப் ஹஸீர்


வலம்புரி கவிதா வட்டத்தின் 91 ஆவது கவியரங்கு 30/08/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் ரவூப் ஹஸீர் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன்
           தலைவர்,
           வலம்புரி கவிதா வட்டம்
           (வகவம்)



புரட்டித்தான் போடுகின்ற ஆற்றல் உள்ளான்
புதுக் கவி தைக்கு என்று ஒரு பேரும் உள்ளான்
விரட்டித்தான் கயமைகள் மாயவென்று
வீறு கொண்டு எழவைக்கும் புதுமை சொல்லான்
திரட்டித்தான்  இவன் வழங்கும் தகவல் கேட்டு
திணறுகின்ற வகையினிலே எம்மைக் குத்தி
உருட்டித்தான் மனமெங்கும் ரணங்கள் செய்து
உணர்வுகளில் கிளறி விடும்
சொற்கள்; முள்ளான்

மேடையிலே இவனேறி நின்றால்
செவிகள்
மெய்மறந்து இவனுக்கே அடிமை யாகும்
ஓடையிலே நாம் குளித்து அள்ளும்
இன்பம்
ஓதுகின்ற இவன் மொழிக்குள் வந்து சேரும்
பீடையிலே வாடுகின்ற மானுடத்தின்
பிணிதீர்க்க இவன் கையில் ஏந்தும் வாளும் 
கூடையிலே இவனள்ளி கொட்டுகின்ற
கொள்கைக்குள் பலர்தம்மை
கொடுப்பர் நாளும்

இன்றல்ல நேற்றல்ல கவிதை ஏந்தி
இலக்கியத்தில் இவன் நுழைந்த தந்தக் காலம்
இன்றும்தான் இளமைவரி மாறிடாமல்
இயங்கியிவன் மாற்றுகின்றான் எங்கள் ஞாலம்
குன்றெனவே வலம்புரியில் ஏறிநின்று
கூர்மையுடன் போடுகின்றான் புதிய கோலம்
இன்றெங்கள் அரங்கிற்குத் தலைமைத் தாங்க
இணங்கி ஹஸீர் வந்ததெங்கள்
நல்ல நேரம்

தொண்ணூற்றி ஒன்று இந்த கவியரங்கம்
தோள்கொடுக்க வந்து நின்றார் ரவூப் ஹஸீர்
வண்ணங்களால் கவிஞர் அலங்கரித்தே
வார்த்தைகளால் வழங்கிடு வாரே சீர்
எண்ணங்கள் சிறகடிக்க இடம் அளித்தோம்
எழுச்சிக் கவிஞரென கொடுத்தோம் பேர்

வாருங்கள்
கவிஞர் ரவூப் ஹஸீர்

- என். நஜ்முல் ஹுசைன்









கவிஞர் தி. ஸ்ரீதரன்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 90 ஆவது கவியரங்கு 01/08/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் தி. ஸ்ரீதரன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

              - என். நஜ்முல்.         ஹுசைன்
               தலைவர்,
               வலம்புரி கவிதா வட்டம்
              (வகவம்)



அருவி என கொட்டி ஒரு கவி படிக்க
ஆர்வமுற்ற இளைய மகன் இங்கு வந்தான்
பெருவிருந்தாய் தமிழ் அள்ளித் தருவதிலே
பேராசை மிகக் கொண்ட ஆற்றலிவன்
உருவாகும் எண்ணத்தை உருவமாக்கி
உயிருள்ள தமிழ் கவிதை தந்து மகிழ்வான்
பெரும்பாலும் வகவத்தின் குழுமத்தை
பெயரெழுதி சொந்தமென ஆக்கிக் கொண்டான்

தினந்தோறும் கவி எழுதி வகவச் சுவரில்
திகட்டாமல் நாம் படிக்க வழிகள் செய்வான்
மனந்தோறும் நாம் வியந்து மலைத்து நிற்க
மாயம்தான் எங்கு பெற்றான் இது போல் எழுத
தனக்கேதான் வகவத்தைச் சொந்தமாக்கி
தன்பாணி யில் இதுபோல் எழுதிக் குவிக்க
சினந்தேதான் சிலபேர்கள் தாங்கள் எழுத
சிறிய இடை வெளிக்காகப் பார்த்து நிற்பர்

எப்போதும் கவிதையுடன் வாழும் இவனை
அழைத்தோம் நாம் கவியரங்கைத் தலைமையேற்க
தப்பாது வருகின்றேன் என்று கூறி
தலைநிமிர்ந்து தமிழோடு வந்து நின்றான்
உப்போடு இனிப்போடு உறைப்பும் சேர்த்து
உயர்கவிஞர் பட்டாளம் துணையும் சேர்த்து
இப்போது கவியரங்கைத் தலைமை தாங்க
இளங்கவிஞன் ஸ்ரீ தரனும் இசைந்து வந்தான்

கவிஞர் தி. ஸ்ரீதரன்
90 ஆவது கவியரங்கு
உந்தன் தலைமேல்

காட்டிவிடு  உன்திறமை
கன்னல் தமிழ்மேல்

வகவத்தின் கவிஞருடன்
வாகை சூடு
வாஞ்சையுடன்  நம்பிக்கை
வைத்தே  கவிமேல் !

கவிஞர் தி. ஸ்ரீதரன்

-     என். நஜ்முல் ஹுசைன்




கலா விஸ்வநாதன் வாழ்த்துக் கவி

 





(27/08/2023 அன்று இடம்பெற்ற கவிஞர் கலா விஸ்வநாதன் அவர்களின் "சித்தரமிர்தம்" நூல் வெளியீட்டு விழாவின் போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)

நெஞ் சகலா விஸ்வநாதன்
---------------------------------------------------
எல்லோரும் ஒன்றாக வே வாழ வேண்டு மென்றே
எந்நாளும் நினைக்கின்ற
ஏற்றமுடை மனதுடையான்
வல்லோனாய் தனைக் காட்டி
வார்த்தைகளில் விஷம் வைத்து
வஞ்சக மாய் தான் பேசி
யாரினதும் மனதுடையான்

மலையகத்து மக்கள் படும்
அப் பாட்டை தன் பாட்டாய்
கலையகத் தோடிவனும்
கவிதையிலே தான் வைத்தான்
விலைபோகும் அம் மக்கள்
விடுதலை யை தான் வேண்டி
சளைக்காதே அறைகூவி
சந்தர்ப்ப வாதிகளை
சொற்களினால் இவன் வைதான்

வலம்புரிக்காய் குரல் கொடுத்து
எம்மோடே இவன் இணைந்தான்
வலமாக இவன் நின்று
அன்று முதல் துணை வந்தான்
உளமார சொல்வதென்றால்
இவன் வியர்வை துளிகளுமே
களமாக இருந்தது வே
எம் வளர்ச்சிப் படிகளிலே


எழுத்துலகில் அன்று முதல்
எழுச்சியுடன் நின்றவன்தான்
பழுத்த பலா வாக இங்கு மிளிருகின்றான்
இன்றவன்தான்
விழுதெனவே  இவன் விதைத்த
விருட்சமென இவன் எழுத்து
பழுதின்றி பலர் மனதில்
படர்திங்கே நிற்கிறது

நெஞ் சகலா விஸ்வநாதன்
எங்கள் கலா விஸ்வநாதன்
வஞ்சமிலா நெஞ்சுடையான்
வாஞ்சையுடன் எமை அழைத்தான்
கொஞ்சும் தமிழ் மொழியினையே
கோர்த்தெடுத்து வாழ்த்துகிறேன்
விஞ்சும் மொழி இவன் எடுத்து
வீறுடனே இனும் படைக்க

நூறாக இவன் நூல்கள்
பேறாக கிடைத்திடனும்
எழுதுகின்ற இவன் கைகள்
இன்னுமின்னும் பலம் பெறனும்
கூடிநிற்கும் நாங்களெல்லாம்
குதூகலமாய் துணை நின்று
பொருளா தாரத்தின் தூண் எனவே
நின்றிடனும்

வாழ்த்துப் பா மாலை
நான் சூடி புகழுகின்றேன்
கலா
விஸ்வநாதன் கவிஞனையே
வாழ்த்தியே நான் மகிழுகின்றேன்

வாழ்த்துகள் வாழ்த்துகள்

  - என். நஜ்முல் ஹுசைன்