எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 17 மார்ச், 2010

சிரிக்கச் சொன்னவன் ஸ்ரீதர்

'ஒரு
சோகமான செய்தி'
தொலைபேசியின்
அடுத்த முனையில்
ஸ்ரீதர்

வேலைப்பளுவுக்கு மத்தியிலும்
அந்த
சோகச் செய்தியை
தாங்கிக் கொள்ள
என்னை நான் தயார் செய்துகொண்டு
'என்ன செய்தி'
என்றேன்

ஒரு பிரபல கவிஞரின்
பெயரைக் குறிப்பிட்டு
'அவன் என்ன சொன்னாலும்
கேட்காமல்
மறுபடியும் நூல் வெளியிடுகிறானாம்'

சொல்லிச் சிரித்தான்
ஸ்ரீதர்

ஸ்ரீதர்
பெயரிலேயே சிரிக்கச் சொன்னவன்

செயலிலே
நம்மை எல்லாம்
சிரிக்க வைத்தவன்

உண்மையைச் சொல்கிறேன்
ஒரு நாள் கூட
அவன் என்னை
அழ வைத்ததில்லை

இன்று மட்டும்
நான் எப்படி அழ..........

ஸ்ரீதர்
எம்மை விட்டும்
மறைந்துவிட்டானாம்
நண்பர்கள் சொன்னார்கள்

என்றாலும்
மனம் இன்னும் அதை
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

இல்லை இல்லை
ஸ்ரீதர்
இறந்து போகவில்லை

பலநாட்கள்
ஸ்ரீதரை காணாமலிருந்திருக்கிறேன்

தொடர்பில்லாமல் இருந்திருக்கிறேன்

அது போல்தான் இன்றும்
நான் அவனைக் காணவில்லை

ஆனாலும் அவன்
காணாமல் போகவில்லை

இப்படி சொல்லித்தான்
என் மனதுக்கு
ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்

அழுகின்ற என் நண்பர்களே
நீங்களும் இப்படி உங்கள் மனங்களுக்கு
ஆறுதல் சொல்லிக் கொள்ளுங்கள்

நண்பா ஸ்ரீதரா

Diana மறைந்தபோது
Diana
Die ஆனாள்
என்று நான் பாடிய கவிதையை
காணும்போதெல்லாம்
சிலாகித்துக் கூறியவனே

நீ இன்று
Die ஆனாயே

ஐயகோ
நண்பா ஸ்ரீதரா

நீ வெறுமனே
இறந்து போகும்
Die ஆகவில்லை

என்றுமே
எங்கள் எண்ணங்களிலே
வண்ணக் கலவையாய்
நிலைத்திருக்கும்
Dye ஆனாய்
Dye ஆனாய்


[கொழும்பு இலக்கிய வட்ட ஏற்பாட்டில் 14 . 03 .2010 அன்று இல. 176 , புதுச் செட்டித் தெரு, கொழும்பு 13 ல் இடம்பெற்ற மறைந்த "பல்கலைச் செல்வன்" ஸ்ரீதர் பிச்சையப்பா அஞ்சலி நிகழ்வின்போது என். நஜ்முல் ஹுசைனால் வாசிக்கப்பட்ட கவிதை]