எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 8 மே, 2023

சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி


வலம்புரி கவிதா வட்டத்தின் 87 ஆவது கவியரங்கம் 06/05/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கினைத் தலைமையேற்று நடாத்த சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

         - என். நஜ்முல் ஹுசைன் 

            தலைவர்,

            வலம்புரி கவிதா வட்டம்.              (வகவம்)



எழுத்தோடு தன் வாழ்வைப் பிணைத்து இங்கே

எதிர்நீச்சல் பலபோட்டு நிமிர்ந்தவராம்
இழுத்தேதான் பொதுப்பணியை
தனது பணியாய்
இன்பமென வேநினைத்து
உழைப்பவராம்
பழுத்தேதான் இனிக்கின்ற கனியைப் போல
பலபேரின் உள்ளங்களில் வாழ்பவராம்
உழைத்தேதான் வகவத்தை உயர்ந்த நிலையில்
உவகையுடன் வைத்து இங்கே பெருமை கொண்டார்

முதல்அடியை வகவத்தில் நானும் வைக்க
முகமலர்ந்து மனமுவந்து அழைத்தவராம்
நிதமும்தான்  மற்றவரின் ஆற்றல்கண்டே
நிறைமனதால் வாழ்த்திடவே
துணிபவராம்
இதயத்தில் எப்போதும் மற்றவர்க்கு
உதவிடவே வேண்டுமென
நினைப்பவராம்
பதவிக்குள் எம்மையெல்லாம் வைத்து இங்கே
பத்திரமாய்/பக்குவமாய் காத்து நிற்கும்
பெருந்தகையாம்


எண்பத்தி யேழான கவியரங்கம்
எழுச்சியுடன் சிறந்திங்கு நடப்பதற்கு
கண்பொத்தா பொறுப்புடனே பின்னால் நிற்கும்
காத்திபுல் ஹக்கென்னும் இவர்க்கே
நாங்கள்
கண்குளிர தலைமையினை தந்து
மகிழ்ந்தோம்
கண்ணியராம் நாகூர் கனி கவிஞரையே
கவியரங்கத் தலைவரென
அழகு பார்த்தோம்


சத்திய எழுத்தாளர் என்பதிலே
எப்போதும் நெஞ்சுயர்த்தி
நிற்பவரை
வித்தகமே இலக்கியத்தில் புரிந்தேதான்
தசாப்தங்கள் பல கடந்து
இருப்பவரை
இத்தினத்தில் கவியரங்கத் தலைவரென
ஆக்கியே நாம்
இறும்பூதி
பெருமை கொண்டோம்


சத்திய எழுத்தாளர்
வகவ சிரேஷ்ட ஸ்தாபகர்
எஸ். நாகூர் கனி அவர்களே
இது
இன்றைய கவியரங்கைத்
தலைமையையேற்று
நடத்துவதற்கான  அழைப்பு
இந்தக் கவிதையுள்ளங்களுக்கெல்லாம்
தெரியுமே
வலம்புரி கவிதா வட்டத்தின் வளர்ச்சியில்
நீங்கள் செய்துவரும் உழைப்பு
அடடா அதனால் இன்று நீங்கள்தானே
எங்கள் வகவ கவிஞர்களின் தலைப்பூ !

கவிஞர் கலாபூஷணம்
சத்திய எழுத்தாளர்
எஸ். ஐ. நாகூர் கனி
பேனா கூர் கனி அவர்கள் !