ஜனரஞ்சக எழுத்தாளரின் விரலி Pendrive வெளியீட்டு விழா 02/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை
இந்த ஆண் டிரைவர்
பெண் டிரைவரை
கண்டுபிடித்துள்ளார்
ஆம்
மொழிவாணன் எனும்
இந்த
மொழி வானம்
எழுத்து வானவில்லில்
வர்ணங்கள் பூசியவர்
நம் மொழிவாணன்
எழுத்து டிரைவர்
எத்தனை வேகமானவை
இவர் எழுத்துகள்
அவை
அதிவேகப்
பாதைகளில்தான்
பயணம்
செய்துள்ளன
நாவலுக்குள்
ஆவலைத் தூண்டியவர்
நா சுவைக்க
பா வலை வீசுபவர்
தசாப்தங்கள் தாண்டிய
இவர் எழுத்துப் பயணம்
ஜனரஞ்சக எழுத்தாளர்
மகுடத்தை
சுவீகரித்துக் கொண்டது
எழுத்தை ஆண்டு
வந்த
மொழிவாணன்
பல தடைகள்
தாண்டியவர்
பலரை
எழுதத் தூண்டியவர்
அது மட்டுமல்ல
பல முதல்களில்
காலடி
எடுத்து வைத்தவர்
பல முதலைகளை
கண்டவர்
பல முதல் அலைகளை
கண்டவர்
வீடியோக்களில்
விசித்திரம் காட்டியவர்
ஒளிக்கலவையால்
சித்திரம் தீட்டியவர்
மொழிவாணனும்
ஒரு கடல்தான்
இவரது அலைகளும்
ஓய்வதில்லை
கைகளும்
சோர்வதில்லை
இதோ
புதிய படையல்
எம் நாட்டின்
முதல் முயற்சி
விரலியில் செய்து
விரலினில் தந்திருக்கிறார்
நடிப்பையும்
வாய் அசைப்பையும்
பிடித்து வைத்து
வித்தைக் காட்டியுள்ளார்
வியப்பைக் கூட்டியுள்ளார்
மனப்பை நிறைத்துள்ளார்
மலைப்பை ஊட்டியுள்ளார்
பென்டிரைவுக்கு
பின்னாலுள்ள
ஆண்டிரைவ்
மொழிவாணன்
சாதிக்க வேண்டும் என்ற
உத்வேக நாயகன்
இன்றும் இளைஞனாய்
இன்னும் இன்னும்
வித்தியாசப் படைப்புகள்
இவரிடமிருந்து வரவேண்டும்
இவர் புகழ்
நின்று நிலைக்க வேண்டும்
என வாழ்த்தி அமர்கின்றேன்
நன்றி
- என். நஜ்முல் ஹுசைன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக