எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 11 டிசம்பர், 2017

கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா



03-12-2017 அன்று இடம்பெற்ற 44வது வகவ கவியரங்கத்தை தலைமையேற்று நடாத்த கவிதாயினி சுதர்ஸனி பொன்னையா அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்புவிடுத்தேன்-
                                                     என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்

பல மைல்கள் இவர் தாண்டி வந்தார் - வகவம்
தன் மைல் கல் என நம்பி
வந்தார்
பலம் கவிதை என்ற உணர்வினாலே - எமை
உறவென்றே இவர் ஏற்றுக் கொண்டார்

அழகான கவி வரிகள் தருவார் -
அதில் ஆழம் போய்
முத்தெடுத்து எமை மயக்கி
வெல்வார்
அழகான பெண்ணுக்குள் இருக்கும்
சோகத்தை கவியாக்கி
கயமையையும்    கொல்வார்

வகவத்தை புகுந்த வீடாக்கி
புள காங்கிதம் கொண்ட
கவிதா யினி இவரை
வரவேற்று நாம் மகிழ்ந்தோமே
இன்று
கவியரங்க தலைமையை தான்
தந்தோமே

கவிதாயினி !
சுதர்ஸனி பொன்னையா எனும்
தையலே
தைத்திடு எம்மை நீ
உன் கவிதையால் இன்று

அது எம் மனதுக்குள் சென்று
தைத்திட வேண்டும்
கிழிந்த எம் மனங்களை
ஒன்றாக்கி
தைத்திடவும்  வேண்டும்

சுதர்ஸனி
நீ இனி
கவிதையால் இனி !

சனி, 9 டிசம்பர், 2017

"நேற்று, இன்று, நாளை " நேத்ரா மீலாத் கவியரங்கில்


கடந்த 01-12-2017 வெள்ளிக்கிழமை மாலை 5.15 க்கு நேத்ரா தொலைக்காட்சியில் மீலாத் விசேட நிகழ்ச்சியில் ஒளிபரப்பான "நேற்று, இன்று, நாளை " என்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை. தமிழ்த்தென்றல் அலி அக்பர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் என்னோடு கவிஞர்கள் கம்மல்துறை இக்பால் மற்றும் மன்னூரான் சிஹார் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
- என். நஜ்முல் ஹுசைன்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

(நேற்று)

உயிரினும் மேலாம்
எங்கள் அண்ணல் நபி
நினைவேந்தி நடக்கின்ற
கவியரங்கு
நேத்ரா நேயமுடன்
அழைத்ததனால் நாமிங்கு
தமிழ்த்தென்றல் அலி அக்பர்
தலைமையிலே தமிழெடுத்தோம்
தூயோன் தூதரே
உங்கள் புகழ் பாட
புகழ் பாட

சேர்ந்து ஸலவாத்துச் சொல்ல
காத்திருக்கும் சொந்தங்களே
நாவுக்கு மட்டுமல்ல நாளைய
வாழ்வுக்கும் வளம் சேர்க்க
பார்த்திருக்கும்
நெஞ்சங்களே
அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு
ராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

அந்த ஹிராக் குகையிலிருந்துதானே
எங்கள் அண்ணல் நபி
இந்த உலகுக்கு
பகலைத் தந்தார்கள்

இன்னல் அவர்கள் வாழ்வில்
பின்னல் போட்ட போதும்
கன்னலாய்தானே
அதனை ஏற்றுக் கொண்டார்கள்
அது
உம்மத் எமக்காகத்தானே

வல்லான் அல்லாஹ்
சொர்க்கத்துக்குச் செல்ல
அண்ணல் நபியவர்களுக்கு
செங்கம்பளம் விரித்து வைத்திருக்கிறான்
தாயிப் நகரமோ
அண்ணல் நபியின் இரத்தத்தால்தானே
கம்பளம் விரித்தது -
நபியின் கோரிக்கைகளுக்கெதிராய்
கைகள் விரித்தது

கொடுமை கோபுரம் தொட்டது
வானவர்களின் நெஞ்சை சுட்டது
என்றாலும்
கோபம் கோமான் நபியை
நெருங்கிட பயந்தது

பொறுமை பல தீமைகளை
மட்டுமல்ல
பல “தீ “ களையும்
தடுக்கும் ஆற்றல் பெற்றது
என்று நேற்றே சொல்லித் தந்தீர்கள்

நாங்கள் உங்கள் வழி
நடக்கிறோம் என்று
அடிக்கடி வழுக்கி விழுகிறோம்

எங்கள் உம்மத்துகளை
பலருக்கு
விழுங்க விடுகிறோம்

அண்ணலே யாரஸூலே
நீங்கள் நேற்று
வரலாறு படைத்தபோது
உங்கள் சஹாபா விழுதுகள்
பல தரைகளில் விதைக்கப்பட்டார்கள்-
எங்கள் மண்ணிலும்

அந்த உறுதிப்பத்திரத்தை
காணாமலாக்கிவிட்டு
தலை குனிந்து நிற்கிறோம்
என்றாலும்
அண்ணலே யாரஸூலே
உங்களது நேற்றைதானே
நாங்கள் திரும்பத் திரும்ப
படிக்கிறோம்

எமது இன்றைய வெற்றியும்
நாளைய வெற்றியும்
அங்கேதானிருக்கிறது
என்று தெரிந்து கொண்டதால்
……………………………………..

(இன்று)
எங்கள் வாழ்க்கையெல்லாம்
எங்களோடு
பயணித்துக் கொண்டிருக்கும்
யார ஸூலே
அடிக்கடி நாம்
உங்கள் ஒட்டகத்திலிருந்து
இறங்கிப் போய் விடுகிறோம்

எங்கள் அகத்திலிருந்து
உங்களை
இறக்கி வைத்துவிடுகிறோம்
அதனால்
எங்களை நாங்கள்
அழுக்காக்கிக் கொண்டு

ஏந்தல் நபியே
உங்களை ஏந்திய
மனங்களுக்குத்தர்னே
மணக்கும் மகிமை இருக்கிறது
என்பதை
அடிக்கடி மறந்து போகிறோம்

நீங்கள் எங்களுக்கு
ஒரேயொரு பெயர் வைத்தீர்கள்
ஆனால்
இப்போது எங்களுக்கு
பல பெயர்கள்

எங்களுக்கென்று பல
நாடுகள்
நாங்கள்தான்
எந்த நாட்டிலுமில்லை

வரலாறு படைத்த நாம்
வரலாற்றுப் பாடங்களில்
சித்தியடைய முடியாமல்
இன்று

எமது கழுத்தை
நாமே அறுக்க
துடித்துக் கொண்டிருக்கிறோம்

ஒற்றுமை உங்களுடன் வாழ்ந்தது
இங்கே உனக்கு இடமில்லை
என்று நாங்களோ அதை
விரட்டிக் கொண்டிருக்கிறோம்

எங்கள் உறவுகள்
அகதிகளாய்
ஓடித் திரிகிறார்கள்
செல்வம் எங்களிடம்
குவிந்து கிடந்தாலும்
மன்னித்துக் கொள்ளுங்கள்
அந்த அழுகுரல்களுக்கு
காது கொடுக்க முடியாமல்
மேலை நாட்டு “இயர் போன்”
எங்கள் காதுகளில் மாட்டப்பட்டுள்ளது

பலம் எங்களிடமிருக்கிறது
அதனைக் கண்டு
அகதிகளை விரட்டியடிப்போர்
கிஞ்சித்தும் அஞ்சமாட்டார்கள்
அதை எப்போதுமே
நாம் காட்டமாட்டோம்
என்று தெரிந்ததால்

இஸ்லாம் எங்களோடிருக்கிறது
பாவம்
நாங்கள்தான் அதனோடு இல்லை

அண்ணலே யாரஸூலே
இதயத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டதால்
சர்வதேசமெங்கும்
நாங்கள் ஏளனப் பொருளாய்

இல்லை இல்லை
எமது இன்று
இப்படியே முடிந்து விடாது
எங்கள் கோமான் நபியே
உங்கள் மீது ஸலவாத்துச் சொல்லி
இதோ இதோ
நாங்கள்
நடக்கத் தயாராகிவிட்டோம்
உங்கள் வழி !
………………………………………..

(நாளை)
வா முஸ்லிம் உம்மத்தே
இந்த வாழ்க்கையை
அந்த வள்ளல் நபியிடம்
முழுமையாய் ஒப்படைக்க

நேற்று கரடு முரடான பாதையிலே நடந்த
அண்ணல் நபி
இன்று நன்கு செப்பனிட்ட பாதையிலே
எங்களை
கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்

காணாமல் போன ஒட்டகம்
கல்வி
உடைந்து போன எங்கள்
பெருமைகளை ஒட்ட
“கம்”GUM மும் கல்விதான்
என்று
எங்கள் சந்ததிகளுக்குச்
சொல்லிக் கொடுப்போம்

வெறும் கல்விமான்களாய்
மாத்திரமல்ல
பட்டங்களைச் சுமந்த
ஜடங்களாய் மாத்திரமல்ல
அண்ணல் நபியே
உங்கள் அழகிய வழியின்
பொக்கிஷங்களாய்
அவர்களை மின்னச் செய்வோம் -
அவர்களை மனிதர்களாய்
மிளிரச் செய்வோம்

விட்டுக் கொடுப்பதும்
சேர்ந்து வாழ்வதும்
இஸ்லாம்தான்
என்று புரிய வைப்போம்
அனைவரும் ஆதமின் மக்கள்
என்று வேதம் சொன்னதை
சிந்தையில் ஏற்றுவோம்

சினம் இனம் அழிக்கும்
என்று உணரச் செய்வோம்
பொறுமையை பெருமை ஆடையாய்
அணிந்த பூமான் நபியே
எங்கள் உம்மத்திற்கு
அதை
பொன்னாடையாய் போர்த்திவைப்போம்

எல்லார் கைகளுமே
பற்றிப் பிடித்தால்
ஒற்றுமையின் கயிற்றை
யாருக்கு தைரியம் வரும்
அதில் போட ஓட்டை

சர்வதேசமெங்கும்
சர்வதேசமெங்கும்
இஸ்லாம் சிம்மாசனம் போட்டு அமர
முஸ்லிம் உம்மத்தை
உங்கள் இதயாசனத்தில்
அமரச் செய்வோம்

குண்டு வைக்க வந்தவனல்ல
இவன்
மானிடர்க்கு தொண்டு செய்ய வந்தவன்
என்று உலகோர்
உணர்ந்து கொள்ள வழி சமைப்போம்

எங்கள் உடைகளுக்குள்
புதைந்திருக்கும் மனிதத்தை
பாரெங்கும் பறை சாற்றுவோம்

மரியாதைக்குரியவர்கள் இவர்கள்
என்ற
அடைமொழிக்கு
சொந்தக்காரர்களாவோம்

அண்ணலே யாரஸூலே
இதோ
எங்கள் நாளைய தினத்தை
உங்கள் பாதையிலே
ஒப்படைக்கிறோம்
நாளைய மஹ்ஷரிலே
நாங்கள்
சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள்
என்று
ஒப்பமிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் !

ஸல்லல்லா ஹு அலா முஹம்மத்
ஸல்லல்லா ஹு அலைவஸல்லம்!

செவ்வாய், 7 நவம்பர், 2017

கவிஞர் வாழைத்தோட்டம் எம் வஸீர்

வலம்புரி கவிதா வட்டத்தின் 43 வது கவியரங்கு  3-11-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் வாழைத்தோட்டம் எம் வஸீருக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் -
என். நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்.

அன்று முதல் எம்மோடு வந்தான்
இவன்
தன் ஆற்றல் தனைக் காட்டி
எம் நெஞ்சை வென்றான்
திறக்காதா வகவத்தின் கதவு
மீண்டும்
என்றிவனும் ஏங்கித்தான் எம்மைப்போல் தவித்தான்

கவிதை யையே உள்ளமெல்லாம்
வைத்தான்
காண்கின்ற பொருளையெல்லாம்
கவித்துவமாய் பார்த்தான்
கடினமென நினைக்காமல்
மரபை
நண்பரிடம் ஆவலுடன் ஆசையுடன் கற்றான்

வாழைத் தோட்டத்து மைந்தன்
வாஞ்சையுடன் வகவத்தை யே மதிக்கும் கவிஞன்
வேலை பல பொறுப்புடனே
இருந்தும்
வகவமென்றால் வேட்கையுட னே
வருவான் என்றும்

வாழைத்தோட்டத்து வஸீர்தான்
தலைமை யினை தானேற்க
வந்ததுவே குஷிதான் - கவிதை
மாலையோடு வருகின்ற
கவிஞர்
தம்மோடு தான் சேர்த்து
மறக்க வைப்பான் பசிதான்

கவிஞர் எம். வஸீர்
கவியரங்கு உங்களிடம்
காட்டிடுங்கள் உங்கள் இடம்!



திங்கள், 6 நவம்பர், 2017

RAINY DAYS AND LIMPING LEGS

5-11-2017 அன்று "SUNDAY OBSERVER " பத்திரிகையில் இடம்பெற்ற எனது ஆங்கிலக் கவிதை




ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி கவியரங்கு - "கை"

வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி தனது 60ம் ஆண்டு வைர விழா நிகழ்வுகளுக்காக 28-5-2005 இரவு 10 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கவியரங்கொன்றை ஏற்பாடு
செய்திருந்தது. 



தலைமை : கலாபூஷணம் கலைவாதி கலீல்

கவிஞர்களும் தலைப்புகளும்

கிண்ணியா அமீர் அலி - நாசி
காத்தான்குடி பௌஸ் - வாய்
ரவூப் ஹசீர் - கண்
மேமன்கவி - காது
நஜ்முல் ஹுசைன் - கை


"கை" என்ற தலைப்பில் நான் பாடிய கவிதை -
என். நஜ்முல் ஹுசைன்


வைரவிழா காணும்
பாபுல் ஹஸன்
அதிபர் எம். ஜே.எம். காசிம்
அவர்களே
அதிதிகளே, ஆசிரியர் குழு
உறுப்பினர்களே


கவிதையால்
தலைவாரி பூச்சூடும்
கலைவாதி கலீல் அவர்களே

அவர் எங்கள்
தலைகளை வாரும்போது
எங்கள் கால்களை வாராமல்
கை தட்டி மகிழும்
சபையோரே


இக் கல்லூரி காற்றினிலே
சுவாசித்து
இன்று தலைநகரிலே
தென்றலாய் பவனி வரும்
தமிழ்த் தென்றல் அலி அக்பர்
அவர்களே

இங்கே இதய மண்ணிலே
விதைகள் போடுவதற்காய்
கவிதை கொண்டு வந்திருக்கும்
என் அருமை கவிஞர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்


இது நாங்கள்
கவிதை பாட
சாலை தந்த
பாடசாலை
இல்லை இல்லை
உறுப்புகள் தந்த
தான சாலை


சீறிப் பாயும்
ஹசீர் கண்
கண் கொடுத்திருக்கிறது

புவிக்காய் பாடும்
மேமன்கவிக்காய்
காது கொடுத்திருக்கிறது
அவர் கவிதைக்கு
காது கொடுக்கக் காத்திருக்கிறது


அடடா
மருத்துவத்தில் இல்லா
விசித்திரம்
வாய், நாசிகூட
கொடுத்திருக்கிறது


காத்தான்குடி பௌசிடம்
வாயைக் கொடுத்திருக்கிறது

கிண்ணியா அமீர் அலியின்
கவிதைகளை
மூக்கைக் கொடுத்து
முகர்ந்துப் பார்த்துள்ளது


இதில் என்ன விசித்திரம்
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
வெறுமனே மூலையில் போய்
குந்தி விடாதே
சமுதாய மேடையிலே
நிமிர்ந்து நில் என்று
எத்தனைப் பேருக்கு
மூளை கொடுத்த கல்லூரி
இன்றெனக்கு
கை கொடுத்துள்ளது -
கவிதை பாட
 

இன்றெனக்கு ஒரு கை
கொடுத்துள்ளது


உங்களுக்கு
இருக்கை தந்துள்ளது


இருக்கைகளை நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்

அதற்காகத்தானே
ஏலம் போல் மணக்க வேண்டிய
எம் சமுதாயம்
ஏலம் போடப்படுகிறது
அதனால் இருக்கையை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
 

இரு
கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்
தட்டும் இரு கைகளை மட்டும்
எங்களுக்குத் தாருங்கள்


சபையோரே
பந்தை வீசுவது மட்டும்தான்
எங்கள் வேலை
அதை சரியாய்
பாய்ந்துப் பிடிப்பது
உங்கள் வேலை


சமுதாயமே
உனது இதயக் கையைப்
பொத்தி வைத்துக்கொண்டு
உனக்கு வேறென்ன வேலை


மனிதனை ஏற்றிவிடுவது
வேண்டுமானால்
ஏணியாய் இருக்கலாம்
என்றாலும் எம் சமூகத்தை
கை தூக்கி விடுவது
கல்விதானே
 

காலால் நீங்கள்
இமயத்தை ஏறலாம்
எனினும்
உன் கைகளால்தான்
வானத்தைப் பிடிக்கலாம் -
எழுத்து ஏணி வைத்து


வள்ளுவன்
இந்தக் கையால்
திருக்குறள் எழுதவில்லை
ஏனெனில்
இது என் கை
இருந்தாலும் உன் கையால்
ஒரு புதுக் குறள் எழுதலாம்
கல்வி உன் கைக்குள்
இருந்தால்


இங்கே எத்தனையோ விஷயங்கள்
எங்கள் கைக்கு வெளியே


சமுதாயமே நீ
மறக்காதே
எழுவாய் இலையேல்
வாக்கியம் இல்லை
கல்வியில் நீ
எழுவாய் இலையேல்
உனக்கு
வாழ்க்கையும் இல்லை


இலக்கணத்தில்
அவனும், அவளும்,
அவர்களும் படர்க்கை
என்றாலும்
அவர்கள் இல்லாமல்
ஏதுனக்கு வாழ்க்கை


கல்வி - ஒற்றுமை இரண்டும்
இருக்க வேண்டியது
உன் கை
இருந்தால் இந்த உலகுக்கே
தருவாய் விளக்கை
வாழ்க்கை உனக்குத் தரப்பட்ட
வலக்கை
நீ அதில் காட்டப்போவது
உதயமாகும் கிழக்கையா ?
அஸ்தமிக்கும் மேற்கையா ?
தீர்மானம் இருக்கிறது
உன் கை


கை கொடுத்த கடல் கூட
ஒரு நாள் கை விரித்தது
அந்தச் சந்தோசத்தில்
பலர்
கை சுருட்டிக் கொண்டார்கள் -
கிடைத்ததையெல்லாம்
சுருட்டிக் கொண்டார்கள்

அகதிகளுக்கு வந்ததை
அதிதிகளுக்கு வந்ததாய்
நினைத்துக் கொண்டார்கள்
 

இல்லை இல்லை
அதிதிகளாய் இருக்கும்
நாங்கள்
நாளை அகதிகளாய்
போய் விடுவோமோ
என்று பயந்து
கிடைத்த பொருட்களை
எடுத்து வைத்து
ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்கள்


சமுதாயம் இவர்களுக்கு
என்ன கைம்மாறு
செய்யப்போகிறது ?


அமெரிக்காவைப் போல்
இங்கே சிலர் வைத்திருப்பது
உலகை அழிக்கும் உலக்கை
என்றாலும் பாசாங்காய்
நீட்டுவது கருணைக்கை
அவர்களுக்கெல்லாம்
எப்படியாவது அடையவேண்டும்
தம் இலக்கை
யாரிடம் போய் சொல்லுவது
இவர்கள் வழக்கை


கைக்கும் இந்த வாழ்க்கை
இனிக்கும் நாள் எப்போது ?
எங்கள் கைக்குள்
சட்டத்தரணிகளாய் மிளிரும்
இளைய சமுதாயம்
இந்த வழக்கை
ஏற்றுக் கொள்ளும்போது


இளைய சமுதாயமே -
நம்பிக்கை வைத்துள்ளது
உடுக்கை இழந்த சமுதாய
இடுக்கண் களைய
உன் கை தருவாய்
என்று நம்பி
கை வைத்துள்ளது எம் சமூகம்


இலட்சியங்களை நீ
கைகளால் கைது செய்து
உன் கைகள்
வெறும் பொய்கள் அல்ல
இந்த உலகத்தைப் புரட்டும்
நெம்புகோலைத் தூக்கும்
வலிமை
உன் கைகளுக்குத்தான் உண்டு


வெறுமனே சத்தியம்
செய்வதற்காய் அல்ல
உன் கைகள்
சத்தியம் காப்பதற்காய்


நாளை என்ற நாளை
உன்னால்தான்
அடையாளம் காண முடியும்
சின்னஞ்சிறு வித்தியாசங்களுக்கிடையே
சறுகிப் போய் விடாதே
நீ பென்னம்பெரு
காரியங்களுக்காய்
உருவாகியுள்ளவன்


ஊசியின் கைகளில்
வழங்கப்படும் நூலைப் படித்து
மானத்தைப் பாதுகாக்க
பிரிந்திருக்கும் ஆடைகளை
ஒற்றுமையாக்குவதில்லையா -
அதுதான் உன் கைகளிலும்
தரப்பட்டிருக்கும் பணி


எது கை என்று
என்னிடம் கேட்டார்கள்
எதுகை இல்லாமல் சொன்னேன்
இது கை என்று -


இளைய சமுதாயமே
 

அது
உன் கை
உன் கை
உன் கை
 

நன்றி!

வெள்ளி, 6 அக்டோபர், 2017

கவிதாயினி யோகராஜன் சுசீலா




வலம்புரி கவிதா வட்டத்தின் (வகவம்) 42வது கவியரங்கு 05-10-2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமைத் தாங்கி நடாத்த கவிதாயினி யோகராஜன் சுசீலாவுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன் - என் நஜ்முல் ஹுசைன், தலைவர், வகவம்



 
புலிபோலே பாய்ந்து வரும் பெண்ணாள் - இவள்
பொங்கிடுவாள் கொடுமைகள் முன்னால்
வலி மிகுந்தாள் பெண்கள் வலி
கண்டால்
வார்த்தைகளால் சுட்டெரித்துக்
கொல்வாள்
வரிகளிலே ஏந்திய இவள்
சொல் வாள் 

இல்லை இவள் கவிதையிலே வேஷம்
இதயத்தைப் பிழிந்திடுவாள் ;
பேசும்
சொல்லுக்குள்ளே பொங்கும்
ரோஷம்
சோர்வில்லாள்; இவள் முன்னே 
எம் கவிதை கூசும்

உளவியலைப் பொருட்டாக கொண்டாள்
உலவுகின்ற மனத்துயரை
தீர்க்கும்
உறுதியினை தலைமேலே
வைத்தாள்
உம்மத்தம் செய்து திரிவோரை
அச்சமின்றி வெளிப்படையாய்
வைதாள் 

வகவத் திற்கிவள் வந்தாள்
மயிலா
தோகை விரித்தாடுகின்ற
குயிலா
வாகை சூடும் இவள்
வை சுசீலா
உன் தலைமையிலே சிறப்பை
வை சுசீலா 

யோகராஜன் சுசீலாவின்
தலைமை
காட்டிடுவாள் கவிதையிலே
இளமை
தொட்டிடுவோம் இவள்
கொட்டும் உளமை
வகவத்திற் கிவள் வருகை
பெருமை!

புதன், 20 செப்டம்பர், 2017

கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ்

வலம்புரி கவிதா வட்டத்தின் 41 வது கவியரங்கம் 05/09/2017 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களுக்கு நான் இவ்வாறு அழைப்பு விடுத்தேன்
- என் நஜ்முல் ஹுசைன்,  தலைவர்,  வகவம்

சமுதாயம் சீர் பெறவே வேண்டும் என்ற
சிந்தனையை வைத்திருக்கும்
சட்டத்தரணி
அமுதான இலக்கியத்தைக் கூட கையில்
ஏந்தியதால் புகழ்பெறுவார் இந்தத் தரணி
நிமிராதோ வளைந்திருக்கும்
மனித உள்ளம்
என்று நிதம் எண்ணுவதால் வருவார் பவனி
தமிழாலே துணை நிற்கும் கவிதை நெஞ்சே
வட்டத்தில் சட்டமிடும் இவரை கவனி

வேலைப் பளு எனும் சுமைக்குள்
மூழ்கி இவரும்
வேகமென வேஇயங்கி வந்த போதும்
வேளை வரும் போதெல்லாம்
தாளை எடுத்து
தமிழ் வடித்தார் வடித்தவைகள்
நெஞ்சம் கவரும்
தன்னையுமே வகவத்தோடிணைத்து இங்கே
கவிதைக்காய் குரல் கொடுக்க
வந்தார் இவரும்

சட்டத்தரணி ரஷீத் எம்
இம்தியாஸ் -  இன்று
வகவ கவியரங்கு உங்களிடம்

பெறுங்கள் சபாஷ்
எங்கள் கவிஞர்கள் கவிதைக்கு
அணியும் சேர்த்து
காட்டிடுங்கள் இன்று நீங்கள்
இங்கே பிக்போஸ் !