எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 6 ஜனவரி, 2024

இந்த வீடு வேண்டும் - சிறுகதை

 


இந்த வீடு வேண்டும்


                - என். நஜ்முல் ஹுசைன்

திக் கொண்டிருந்த குர்ஆனை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டு தலையைத் தூக்கிப் பார்த்தார் சமத் சேர். இன்னும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் கதவைத் தட்டுபவர் மிகவும் மெதுவாகத்தான்  தட்டிக் கொண்டிருந்தார். அதனால்தான் அந்தச் சத்தம் உள் அறைக்குள்ளும், சமையலறைக்குள்ளும் இருந்த அவரின் மனைவி மகள்கள் யாருக்கும் கேட்கவில்லை.

சமத் சேர் குர்ஆனை வைத்து விட்டு மெதுவாகச் சென்று கதவைத் திறந்தார்.

அங்கே சுந்தரம் ஐயா நின்று கொண்டிருந்தார்.

'சுந்தரம் ஐயாவுடன் இருந்த அனைத்து கணக்கு வழக்குகளையும், கொடுக்க வேண்டிய கோப்புகளையும் பரிபூரணப்படுத்தி கொடுத்து விட்டேனே. மறுபடியும் ஏன் வந்திருக்கிறார் ?'

சிந்தனையோட்டம் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க ஐயா, வாங்க. சுகமா இருக்கிறீங்களா ?"

"ஓம் ஓம்  ஐயா சுகமா இருக்கிறானான். ஒரு முக்கிய விஷயமா உங்கள பாக்க வந்தன்" என்றார்.

சமத் சேர் தனது மனைவியுடனும் நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த வீட்டை வாங்கியவர், இந்த சுந்தரம் ஐயாதான் .

சமத் சேர் ஒரு ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.  மினுவன்கொட பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தவர்.

கொழும்பு புதுக்கடையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நான்கு பெண் பிள்ளைகள் இருந்தாலும் இன்னும் ஒரு மகளுக்குக் கூட திருமணம் நடக்கவில்லை. மூத்த மகளுக்கு மட்டுமே திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆசிரியர் தொழில் மூலம் கிடைக்கும் பென்ஷன் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடச் செய்தது. மின்சார கட்டண பில்லை பார்க்கும் போதெல்லாம் சமத் சேர் எங்கே தனக்கு ஹார்ட் எட்டேக் வந்து விடுமோ என்று அச்சப்படாத வேளை இல்லை. போதாதற்கு தண்ணீர் பில்லும் தனது பங்குக்குச் சேர்ந்து கொண்டது.

மூத்த மகளுக்கு மிகவும் எளிமையாக திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டுமென்றால் கூட சில லட்சங்கள் தேவை.  சமத் சேர் யாரிடமும் சென்று கை நீட்டிப் பழக்கமில்லாதவர். வயதும் ஏறிக் கொண்டிருந்த மூத்த மகளின் திருமணத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்று சமத் சேரும் மனைவியும் மிகவும் உறுதியாக இருந்தனர்.

அதற்காக புதுக்கடையில் தாங்கள் வசித்து வந்த வீட்டை விற்கத் தீர்மானித்தனர்.   பல பேர் வீட்டைப் பார்த்து விட்டுப் போனாலும் எல்லோருமே மிகவும் குறைந்த விலைக்குத்தான் வீட்டைக் கேட்டனர்.

சமத் சேருக்கோ வீடு விற்கும் பணத்தில்தான் மூத்த மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும், தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறிய வீட்டை வாங்கவும் வேண்டும் என்ற நிலை. அத்தோடு மற்றைய மூன்று மகள்களுக்கும் எதையாவது சேமித்து வைக்கவும் வேண்டும்.

அதனால் சரியான விலை கிடைக்கும் வரை காத்திருந்தார்.  சுந்தரம் ஐயாதான்  சமத் சேர் எதிர்பார்த்த பணத்தைத் தர சம்மதித்தார். முதலில் சுந்தரம் ஐயாவும் சமத் சேரிடம் பேரம் பேசினாலும் கூட சமத் சேர் தனது பெண் மக்களைப் பற்றி கூறியவுடன் மறு பேச்சு பேசாமல் வீட்டை சமத் சேர் சொன்ன விலைக்கே வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார். இதுவே சுந்தரம் ஐயாவின் மனிதாபிமானத்தைக் காட்டி நின்றது.

சுந்தரம் ஐயா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் கொழும்புக்கு அடிக்கடி வந்து வியாபார பொருட்களை வாங்கிச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். கொழும்புக்கு வரும் போது தங்குவதற்கும் வாங்குகின்ற சில பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அவருக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. தரகர் மூலம் வந்த சமத் சேரின் வீடு அவருக்கு பிடித்திருந்தது. எழுபது லட்சத்துக்கு அந்த வீட்டை அவர் வாங்கிக் கொண்டார். 

வீடு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டப்பூர்வமான வேலைகளையும் ஒரு சட்டத்தரணி மூலம் பூர்த்தி செய்து கொடுத்து சமத் சேர் பணத்தை வாங்கிக் கொண்டார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.  புதியதொரு சின்ன வீட்டினை வாங்கி அங்கேதான் சமத் சேர் குடும்பம் குடியிருக்கின்றது. மூத்த மகளின் திருமண ஏற்பாடுகளும் மெது மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது.

'இப்போது சுந்தரம் ஐயா எதற்கு தேடிக் கொண்டு வந்திருக்கிறார் ?' சிந்தனையோடு சமத் சேர் சுந்தரம் ஐயாவை அமரச் சொன்னார்.

பரஸ்பரம் இருவரும் சுக நலன்களை விசாரித்துக் கொண்டனர்.

"ஐயா சொல்லுங்க. என்ன விஷயமா தேடி வந்திருக்கீங்க ?"

"சேர், எல்லாம் நல்ல விஷயமாத்தான் வந்தனான். உங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க வந்திருக்கன்" என்று கூறி தான் கொண்டு வந்திருந்த கைப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு காசோலையை எடுத்து சமத் சேரிடம் நீட்டினார்.

அதில் 3 ம் சில பூஜ்ஜியங்களும் எழுதப்பட்டிருந்தன. அது முப்பதினாயிரமா அல்லது மூன்று லட்சமா ? என்று சமத் சேருக்கு யூகிக்க முடியாதிருந்தது.

"சுந்தரம் ஐயா, வீட்டுக்குத்தான் நீங்க முழுசா பணத்த தந்திட்டீங்களே ? எதுக்கு இந்தப் பணம் ?"

"சேர், நீங்க சொன்ன பணத்த தந்து நா வீட்ட வாங்கிட்டன்தான்.  ஆனா இது அதுக்குப் பிறகு உங்களுக்கு கிடைச்ச பணம். உங்களின்ர பணம்"

சமத் சேர் குழப்பத்தில் இருந்தார். கையை நீட்டி காசோலையை வாங்கவில்லை. சுந்தரம் ஐயா ஏதோ பகிடி பண்ணுகிறார் என்று சமத் சேர் நினைத்தார்.

"இல்ல இல்ல சேர் இது உங்களின்ர பணம்தான். மூண்டு கோடி ரூபா."

சமத் சேருக்குத் தலை சுற்றியது.

'என்ன மூணு கோடியா....?'

இப்போதுதான் சமத் சேருக்கு சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது.
சுந்தரம் ஐயா ஏதோ ஏமாற்றப் பார்க்கிறார். இந்த முகநூலில எல்லாம் உங்களுக்கு கோடி கிடைத்திருக்கிறது என்று சொல்லி வங்கி விபரங்களையெல்லாம் எடுத்து அதிலுள்ள பணத்தையெல்லாம் சுருட்டுகிற கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். அப்படித்தான் இதுவுமோ என்று நினைப்பதை சமத் சேரினால் தவிர்க்க முடியாமலிருந்தது.

அவரது சிந்தனையை கலைத்து சுந்தரம் ஐயா பேசினார். 

"நான் உங்களிட்டை வீட்டை வாங்கி பத்து நாளைக்குள்ள ஒரு பெரீய மனிசன் வசதியானவர் அழகான காரிலை வந்து வாசலிலை இறங்கினார்.

இந்த வீட்டை எனக்குத் தாருங்கோ எண்டு கரச்சல் படுத்தினார். நானோ இது என்ரை தொழிலுக்காய் வாங்கின வீடு. இதை விக்கிற எண்ணமில்லை என்று ஒரேயடியாய்ச் சொல்லிப் போட்டன்.

அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமே ? இந்த இடத்திற்கு எவ்வளவு விலையெண்டாலும் நான் தரத் தயாராய் இருக்கிறன்.இந்த இடம் எனக்கு வேணும் எண்டார். அவர் ஒரு போரா பாய் கண்டியளோ! அவர் என் வீட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும்உள்ள வீடுகளையும் வாங்கிப்போட்டாராம். நடுவிலை உள்ள எங்கடை வீட்டையும் வாங்கினால்தான் தன்ரை வேலையள் செய்யச் சுகமாம். பெரீய எபாட்மண்ட் கட்டப் போறவராம்.  அவர் கடைசியாக என்ன சொன்னவர் தெரியுமே? மூண்டுகோடி தருவதாகச் சொன்னார்.
                        அவர் மூண்டு கோடி எண்டோணை உங்கடை நாலு பொம்புளைப் புள்ளையளும் என்ரை கண்ணுக்கு முன்னுக்கு நிண்டினம்.
                 அந்தப் பத்து நாளும் அங்கை நீங்கள் இருந்திருந்தால் அந்த "பாய்"உங்களிட்டை வீட்டை விலைக்கு வாங்கியிருப்பார் .
நான் அவர்ர விருப்பத்திற்கு மறுப்புச் சொல்லேல்லை. நேற்றுத்தான் எல்லா வேலையும் முடிஞ்சுது .இந்தாருங்கோ உங்கடை மூண்டுகோடி ரூபா. எனக்கு எழுபது லச்சத்தை தாருங்கோ"

என்று கூறி சமத் சேரின் கைகளில் காசோலையை சுந்தரம் ஐயா திணித்தார்.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா ? 

" உயர் குணம் கொண்ட மனிதர்களைத் தீர்மானிப்பது காலமல்ல" சமத் சேரின் உள்ளம் சொன்னது. அவர் சுந்தரம் ஐயாவின் கரங்களைப் பற்றி முத்தமிட்டுக் கொண்டிருந்தார் - கண்ணீர் அந்தக் கரங்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தது.

==============================

ஞானம் - ஜனவரி, 2024

கருத்துகள் இல்லை: