எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 14 ஆகஸ்ட், 2013

நோன்புப் பெருநாள் இஸ்லாமிய கீதம்

நோன்புப் பெருநாள் விசேட நிகழ்ச்சி நேத்ரா தொலைக்காட்சியில் 09-08-2013 அன்று ஒளிபரப்பானபோது இடம்பெற்ற எனது இஸ்லாமிய கீதம் . இசை : டோனி ஹசன்   பாடியவர் : முஸ்தபா


கை வீசி கொடுத்தோர்க்கு பெருநாள்  - இரு 
கை ஏந்தி கேட்டோர்கள் இறை யருளைப் பெறும் நாள் 
மெய் வருத்தம் பாராது  இரவில் 
மேலோனை வணங்கியதால் 
மேதினிக்கே  திருநாள்                                                   
                                                                                   (கை வீசி..)


தீமைக்கு தீ வைக்க துணிந்து விடு - அந்த 
திட்டத்தை ரமழானில் படித்து விடு 
இம்மைக்கும் மறுமைக்கும் பாலமிடு -அதை 
இறையோனின் மறைதன்னில் கண்டு எடு 
ஊமைக்கும் கனவுண்டு; தெரிந்து கொடு  -அதில் 
நரகத்தின் வேதனையை விரைந்து டு
                  
                                                                                           (கை வீசி.....) 

முப்பத்தை காட்டிய திங்கள் இது - அல்லாஹ் 
முகப்பத்தை கூட்டியே சிரிக்கிறது
தப்பைத்தான் திருத்திய அருளும் இது - நரகம் 
தப்பத்தான் வழி காட்டி மறைகிறது 
ஒப்பனை பண்ணித்தான் செல்கிறது - மீண்டும் 
வரும்வரை அதன் வழி நின்று விடு 
                                                                                             (கை வீசி.....)

                              

                                                 -  என். நஜ்முல் ஹுசைன்






ஞாயிறு, 14 ஜூலை, 2013

வியாழன், 27 ஜூன், 2013

சௌந்தரராஜனே ....................




சௌராஷ்டிர
குந்தி தேவி
தமிழ் கம்பனுக்கு
தாரை வார்த்த
கர்ணன் நீ

அள்ளி அள்ளி
கொடுக்கும்
சீதக்காதி நீ –
இறந்த பின்பும்
கொடுக்கிறாய்

இந்தச் சொற்களுக்குள்
உன்னை
அடக்க முடியாது

தமிழ் கடலில்
மூழ்கி
முத்தெடுத்தவன் நீ
நீச்சல் மட்டுமல்ல-
எதிர் நீச்சலும் போட்டவன்

தமிழில்
எந்தச் சொல்லும்
உன் நாவைத்
தப்பிப் போகவில்லை –
தப்பாகவும் போகவில்லை

நாங்கள் உனது
கடன்காரர்கள்
உன்னிடம் படித்த
உச்சரிப்புப் பாடத்துக்கு
இன்னும்
கட்டணம் செலுத்தவில்லை


தமிழ் மொழி
உன்னைப் பார்த்துதான்
'மொழி' என்றது

நீ மொழிந்தபோதெல்லாம்
அது
குற்றாலம் அருவியிலே
குளித்துக் கொண்டது

அதுமட்டுமல்ல

கல் தோன்றி
மண் தோன்றா
காலத்தின்
முன் தோன்றிய
மூத்தத் தமிழ்
என்ற
சான்றிதழையும்; பெற்றுக்கொண்டது

உன் குரல் வளையில்
சிக்கிய
மீன்கள் நாங்கள்

நீ எங்கள்
பிராணனை வாங்கவில்லை

இன்றும்
பிராணவாயு
தந்துகொண்டிருக்கிறாய்


நீ
தமிழன்
களைப்பைப்
போக்கிய
கலப்பை -
உள்ளத்தில் உற்சாகப் பயிரிட்டு


நீ
விலங்காகப் பாடியவனல்ல
நாங்கள்
விளங்காமல்
பாடியவனுமல்ல

உன் பாடலால்
எங்களுக்கு
விலங்கிட்டவன்
இலட்சோப லட்ச
இதய அரியாசணையின்
ஆஸ்தான பாடகனாய்
விளங்கிட்டவன்


டி.எம்.எஸ்.
வாழ்வின்
எல்லா தருணத்திற்கும்
தகவல் தந்த
எஸ்.எம்.எஸ்

வல்லவனே
நீயும் ஒரு
வள்ளுவன்தான்
அவனிடமிருந்தது
திருக்குறள்
உன்னிடமோ
திருக் குரல்

பிசிறு தட்டாத
அந்தக் குரலால்தானே
உன்
விசிறிகளின் வியர்வைக்கு
நீ
சாமரம் வீசியிருக்கிறாய்

இதய வடுக்களுக்கு
ஒத்தடம் இட்டவனே


உன்னைத்
தீயினால் சுட்ட வடு

நீ
நாவினால் சுட்டுப் போட்டிருக்கும்
வடுக்களால்தானே
ஆறிக்கொண்டிருக்கிறது

உன்னோடு உடன் வந்த
உனது வயதுதான்
உன்னை
எமனிடம் ஒப்படைத்தது

எங்கெங்கோ சிதறியிருக்கும் 
உன் 
ரசிகர்கள் அல்ல !




-    என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 14 மே, 2013

சொல்லாட்சி /'செல்'லாட்சி






'சிம்'
ஆசனம்
போட்டு அமர்ந்திருப்பதால்
உலகை எல்லாம்
ஆட்சி செய்து கொண்டிருக்கிறது -
கைப்பேசி

- என். நஜ்முல் ஹுசைன்

சொல்லாட்சி /'செல்'லாட்சி - கைபேசி கவிதைகள்

செவ்வாய், 7 மே, 2013

செவிக்கும் விருந்தளித்த திருமண வைபவம்



  
எனது பால்ய வயது நண்பர் அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜின்னா  தம்பதியரின் ஏகப் புத்திரி பாத்திமா ருஷைக்காவின் திருமணம் கடந்த 14/05/2013 அன்று கொழும்பு வெள்ளவத்தை மியாமி மண்டபத்திலும், திருமண வரவேற்பு வைபவம் 04/05/2013 அன்று வெள்ளவத்தை Grand Marine ஹோட்டலிலும்  நடைபெற்றன. பாத்திமா ருஷைக்கா கொழும்பு பல்கலைக்கழகத்தின் BBA பட்டதாரி ஆவார். அத்துடன் CIMA வினையும் பூர்த்திசெய்தவர். அவருக்கு மணமகனாக  வாய்த்தவர் கல்பிட்டி அல் ஹாஜ் அஹ்மத் ஹுசைன் தம்பதியரின்  புதல்வர் முஹம்மத் இர்ஷாத் MBA பட்டதாரியாவார்.
லண்டனில் பணிபுரிகிறார் . அல் ஹாஜ். எம்.எஸ். எம்.ஜின்னா தற்போது  .வியாபாரத்  துறையில் மும்முரமாக ஈடுபட்டுவந்தாலும்  பழைய வானொலிக் கலைஞர். முஸ்லிம் சேவையில் சிறுகதையை வித்தியாசமாக வாசிப்பதில்  புகழ் பெற்றுத் திகழ்ந்தார். ITN தொலைக்காட்சி 'முத்துச்சரம்' நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் திகழ்ந்தார்.
அதனால்தான்  என்னவோ அவரது மகளது திருமண வைபவத்தை வெறுமனே வயிற்றுக்கு மட்டும் விருந்திட்டு  விருந்தினர்களை அனுப்பிவைக்க அவர் விரும்பவில்லை.
திருமண வைபவத்தின் போது ஆண்கள் பிரிவிலிருந்து என்னை ஒரு வாழ்த்துக்கவிதை பாடவைத்தார்.  பெண்கள் பிரிவிலிருந்து பிரபல பாடகி நூர்ஜஹான் மர்சூக்கை வாழ்த்துப் பாடலைப்  பாடவைத்து புதிய அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்கினார்.
இவ் வைபவத்திற்கு அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கலைஞர்கள் என பல்வேறுபட்டோர் வருகை தந்து சிறப்பித்தனர்.

திருமண வரவேற்பு வைபவம் 4/05/2013 அன்று நடைப்பெற்றபோது ஒருபடி மேலே சென்று  ஒரு சிறிய  வாழ்த்து மேடையை உருவாக்கியிருந்தார். அல்ஹாஜ்  எம்.எஸ்.எம்.ஜின்னாவின் மற்றொரு உற்ற நண்பர் 'தமிழ்த்தென்றல்' எஸ்.எம்.அலி அக்பர் வரவேற்புரையுடன்  வாழ்த்துரை வழங்க, உலக அறிவிப்பாளர் பீ .எச்.அப்துல் ஹமீத் மணமக்களை வாழ்த்தி அறிவுரை  கூறி பேசினார். சூரியன் FM பணிப்பாளர் நடராஜசிவம் அடுத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார்.  திருமண வைபவத்தில் வாசித்த கவிதையை சிறிய மாற்றங்களுடன்  நானும்  வாசித்தேன். கல்வித்துறைச் சார்ந்தோர், வியாபாரிகள், தொழில் துறைச்சார்ந்தோர்  என பல்வேறுப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ் வைபவம் பலரின் பாராட்டுகுள்ளானது. 

வைபவத்தில் நான் வாசித்த 'வாழ்த்துக் கவிதை'

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

இந்த
இனிய மாலைப்பொழுதின்
இனிய வாழ்த்துகள்

நான்
விருந்து போட வந்திருக்கிறேன் -

நானும்
விருந்து போட வந்திருக்கிறேன் -
உங்கள் செவிகளுக்கு

தயவு செய்து
உங்கள்
இதயங்களையும்
எடுத்து வாருங்கள்


அரியாசனத்தில்
அமர்ந்திருக்கிறாள்
ருஷைக்கா என்ற
இந்த  மகாராணி

'மஹரா நீ?'
என்று
இர்ஷாத் மகாராஜாவைப்
பார்த்து கேட்டவாறு

என்
பால்ய நண்பன்
அல்ஹாஜ். .
எம்.எஸ்.எம்.ஜின்னா 
ஹாஜியானி
சித்தி நசீரா ஜின்னா
ஆகியோரின்
ஏகப் புத்திரி -
ஏக போகப் புத்திரி -

பாத்திமா ருஷைக்கா

செல்வியாய் இருந்த
இந்தக் குமரி
திருமதியாய்  வந்து
திருவோடு
எம்மை வரவேற்கிறாள்

இந்த அன்பு மகளின்
பிஞ்சு நடையைப் பார்த்த
எங்களுக்கு

இவள்
கிடுகிடு வென்று
கல்வியின் படிகளிலே
ஏறி நின்றபோது
ஆகாய விமானத்திலே
பறந்தது
இவளது பெற்றோர்
மட்டுமல்ல -
நாங்களும்தான்

'நண்பன்டா'
என்று
இவளது தந்தை
நட்புக்கு
இலக்கணம் சொன்னார்
அவர் புதல்வியாய்
வந்து இவள்
எம்மையும்
'தலைக்கனம்'
கொள்ளச்செய்தாள்

தந்தை
மகளுக்காற்றும் உதவி
என்
அன்பு நண்பனாலும்

மகள்
தந்தைக்காற்றும் உதவி
'தங்க மகளே'
உன்னாலும்
ஜொலித்துக்கொண்டிருக்கிறது

நற் பண்புகளால்
உயர்ந்து
எமைக் கவர்ந்த
மணமகனே
மனம் வீசும் - எம்
மருமகனே

எங்கள் இதயத்தில்
இடம்பிடித்த
முஹம்மத் இர்ஷாதே

எங்கள் மகள்
பாத்திமா ருஷைக்காவின் 
இதய
சிம்மாசனத்தைப் பிடித்த
முஹம்மத் இர்ஷாத்
மணமகனே

கல்வியின்
லிப்டில் ஏறி
நீங்கள் சென்ற
உயரம்
கல்பிட்டியையே
நிமிர்ந்து நிற்கச்
செய்துள்ளது

உங்கள் பெற்றோரை
ஈன்ற பொழுதில்
பெரிதுவக்கச் செய்துள்ளது

கல்பிட்டி  அல்ஹாஜ்
ஹமீத் ஹுசைன் தம்பதியரின்
மகனே
எங்கள் மருமகனே

ருஷைக்கா
எங்கள்
கண்களுக்குள் வளர்ந்தவள்
இப்போது உங்கள்
இதயத்தில்
இறக்கி வைத்துள்ளோம்

எங்கள்
விரல் பிடித்து
நடந்த
'தங்க மகளை '
உங்கள்
கரமாக்கி
நாங்கள்  மகிழ்ந்தோம்

கல்பிட்டியை
'மாணிக்கக்
கல்'
பிட்டியாய்  ஆக்கிய
மணமகனே இர்ஷாதே

வெல்லம்பிட்டியை
இனிக்கும்
'வெல்லம் '
பிட்டியாய்  ஆக்கிய
மணமகளே
ருஷைக்காவே


நீங்கள்
படித்தவர்கள் - எங்கள்
இதயத்தைப் பிடித்தவர்கள்

பற்றுடன்
பற்றிக்கொண்டு
பிறர்
பின்பற்ற  வாழுங்கள்

உங்கள் வாழ்வு
நன்றாகப்
பின்னிப் பிணைந்து
ஒற்றுமையால்
நிலைக்க

சந்தோஷ  பூ மழையில்
தினம் தினமும்
தான்  நனைய

நோய்
நொடியற்ற வாழ்க்கையிலே
நீடித்த  ஆயுள் பெற

பிள்ளைகளின் செல்வத்தால்
கொள்ளையின்பம் அனுபவிக்க

பதினாறும் பெற்றே நீர்
பூவுலகில் பெருமை பெற

வாழ்த்தி மகிழ்வது
நான் மட்டுமல்ல
வந்திருக்கும் அனைவரும்தான்

-  என். நஜ்முல் ஹுசைன்