எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 9 நவம்பர், 2025

மஸாஹிரா கனி நூல் வெளியீடு

 

(09/11/2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 க்கு இடம்பெற்ற மஸாஹிரா கனியின் 'வேரெழுது', 'விடத்தல்தீவு புலவர் முஹம்மத் காசிம் ஆலிம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அனைவருக்கும்.                                அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்


வேறெழுத முடியாமல்

வேரெழுத வந்தார்


வேறெதுவும்

எழுத முடியாமல்

தன்

வேரெழுத வந்தார்


போர் எழுதியதால்

ஊர் அழுத

பொழுதெழுதி


பேர் எழுதிக் கொண்டார்


சுவைப்

போர் எழுதிய

சுவையால்

தன்

சுமை எழுதிக் கொண்டார் 


தன் இமைப் பொழுதில்

எழுதியதை

இதயத்தில் எழுதி -

நூல் எழுதி -

நிஜம் எழுதி 

எம்முன்னே

வைத்தார்

பல நெஞ்சங்கள்

தைத்தார் 



மஸாஹிரா கனி 

கனிந்தெழுதினாலும் 

கனி எழுத வரவில்லை

காய் எழுத வரவில்லை


மானிடர்க்காய்

எழுத வந்தார்

வேரெழுத வந்தார் 



வேரெழுது

என்று

ஏர் உழுது சென்றார்  


கிளை பரப்பி

தலை நிமிர்ந்து

தன்

கனி கொடுத்து நிற்கும்

விருட்சத்தின் 

அடி காண

எமை

அழைத்துச் சென்றார்


எமை

வளைத்துக் கொண்டார்


தன் பாட்டன் 

விடத்தல்தீவு புலவர்

முஹம்மது காசிம் ஆலிம்

புகழ் எழுதிச்

சென்றார்


தன் வேர்

கண்டு கொண்டார்


அதனால்

வீறு கொண்டார்


நீர் எழுதியதால்

கண்ணீர் எழுதிய

காவியங்கள் பிறந்த 

நாட்டில்


மஸாஹிரா கனியே

நீர் எழுதியது

ஆனந்தக் கண்ணீர்

காவியம்


தமிழ்

மார் எழுதிய

பால் குடித்து

தமிழ்ப்பால் 

தனை வளைத்து

தாழ்ப்பாள் போடாது

கவிதை

மடை திறக்கும்

மஸாஹிரா



இவர் விழித்திருந்தது 

பல இரா



அதில் கண்டதெல்லாம்

வேர் காணும் கனா


வயிற்றுக்கு

சோறெழுதிய 

ஏர் எழுதிய

கவிதை 

நெற்கதிர்


எங்கள்

வாழ்க்கைக்கு 

வாழ்த்தெழுதிய

மஸாஹிரா கனியின்

எழுத்துக்கு

யார் நிற்கப் போகிறார்கள்

எதிர்


கார் எழுதியது

மழை

கெட்டிக் காரி

இவள் எழுதியது

கலை

அதை வைத்துத்தானே 

எமக்கெல்லாம் 

வீசியிருக்கிறார் 

வலை


மஸாஹிரா கனி

விண்மீன் சொற்கொண்டு

எழுதிய கவிதையில் 

வலைமீனாய் 

வசியப்பட்டுப் போயிருக்கிறோம்


மூல வேர்

விடத்தல்தீவு புலவர்

முஹம்மது காசிம் ஆலிம்

பேத்தியே 

மஸாஹிரா கனியே


இன்னும் இன்னும்

உன்

வேரெழுது


அங்கெல்லாம்

உன்

பேரெழுது 


உனை

வாழ்த்தி மகிழ்கிறேன்

வல்லான் அல்லாஹ்

தொழுது !


நன்றி !


- என். நஜ்முல் ஹுசைன்

வெள்ளி, 7 நவம்பர், 2025

இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு..

 



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி 09/11/2025 தொகுத்து வழங்கிய 'பொய்கை' நிகழ்ச்சியில் இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு ஒலிபரப்பான கவிதை. 



எங்கள் காது பிடித்து
தூக்கி விட்ட
அன்னை வானொலிக்கு
அகவை நூறு
வாழ்த்துகள்

எங்கள் அகப் பை
நிறைந்தது
இலங்கை வானொலியே
நீ உன்
அகப்பையினால்
பரிமாறிய உணவில்தானே

நீ
எங்கள் செவிகளிலூட்டிய
பல்சுவையினால்தானே
எங்கள் செல்நெறி
உருவானது

எங்கள் வாழ்க்கையையே
உன்னிடம்தானே
ஒப்பமிட்டுத் தந்திருந்தோம்
இன்று நாங்கள்
ஜொலிக்கின்றோம் என்றால்
எம்மை
ஒப்பமிட்டுத் தந்தது நீயல்லவா

செல்நெறி காட்டிய
உனக்கு
செய்நன்றி செய்வதற்கு
காத்திருக்கிறோம் -
மிக மிக நீண்ட வரிசையில்

உன் ஒவ்வொரு ஆண்டும்
எம்மை ஆண்டுதான்
சென்றிருக்கிறது

நீ என்றென்றும்
வீற்றிருப்பாய்
ஒலிபரப்புச் சக்கரவர்த்தியாய் -
மற்றவர்களைப்
பின்தள்ளி !

- என். நஜ்முல் ஹுசைன்

வியாழன், 6 நவம்பர், 2025

மொழிவாணன் விரலி வெளியீடு

 



ஜனரஞ்சக எழுத்தாளரின் விரலி Pendrive வெளியீட்டு விழா 02/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை






இந்த ஆண் டிரைவர்

பெண் டிரைவரை
கண்டுபிடித்துள்ளார்

ஆம்
மொழிவாணன் எனும்
இந்த
மொழி வானம்

எழுத்து வானவில்லில்
வர்ணங்கள் பூசியவர்

நம் மொழிவாணன்
எழுத்து டிரைவர்

எத்தனை வேகமானவை
இவர் எழுத்துகள்

அவை
அதிவேகப்
பாதைகளில்தான்
பயணம்
செய்துள்ளன

நாவலுக்குள்
ஆவலைத் தூண்டியவர்
நா சுவைக்க
பா வலை வீசுபவர்

தசாப்தங்கள் தாண்டிய
இவர் எழுத்துப் பயணம்

ஜனரஞ்சக எழுத்தாளர்
மகுடத்தை
சுவீகரித்துக் கொண்டது

எழுத்தை ஆண்டு
வந்த
மொழிவாணன்
பல தடைகள்
தாண்டியவர்
பலரை
எழுதத் தூண்டியவர்

அது மட்டுமல்ல

பல முதல்களில்
காலடி
எடுத்து வைத்தவர்

பல முதலைகளை
கண்டவர்

பல முதல் அலைகளை
கண்டவர்

வீடியோக்களில்
விசித்திரம் காட்டியவர்

ஒளிக்கலவையால்
சித்திரம் தீட்டியவர்

மொழிவாணனும்
ஒரு கடல்தான்

இவரது அலைகளும்
ஓய்வதில்லை
கைகளும்
சோர்வதில்லை

இதோ
புதிய படையல்

எம் நாட்டின்
முதல் முயற்சி

விரலியில் செய்து
விரலினில் தந்திருக்கிறார்

நடிப்பையும்
வாய் அசைப்பையும்
பிடித்து வைத்து
வித்தைக் காட்டியுள்ளார்

வியப்பைக் கூட்டியுள்ளார்
மனப்பை நிறைத்துள்ளார்

மலைப்பை ஊட்டியுள்ளார்

பென்டிரைவுக்கு
பின்னாலுள்ள
ஆண்டிரைவ்
மொழிவாணன்

சாதிக்க வேண்டும் என்ற
உத்வேக நாயகன்

இன்றும் இளைஞனாய்

இன்னும் இன்னும்
வித்தியாசப் படைப்புகள்
இவரிடமிருந்து வரவேண்டும்

இவர் புகழ்
நின்று நிலைக்க வேண்டும்

என வாழ்த்தி அமர்கின்றேன்

நன்றி

- என். நஜ்முல் ஹுசைன்


கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்

 




வலம்புரி கவிதா வட்டத்தின் 117 ஆவது கவியரங்கு 05/11/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் ஸ்ரீதேவி கணேஷனுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்

- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)




அழகு தமிழ் சொல்லெடுத்து
இதயம் கவர்வாள்
அலங்கார மொழி உரைத்து முன்னே நிற்பாள்
பழகியவள் பண்பினிலே
உயரம் காண்பாள்
பணிவினிலே தலைகுனிவாள்; நிமிரும் கூர்வாள்
சுழன்றுஅவள் தன்பணியை தலைமேல் வைப்பாள்
சுறுசுறுப்பாய் நடைபயின்று
நெருப்பாய் உழைப்பாள்

அறிவிப்புத் துறையினிலே
ஆற்றல் காட்டி
அதிலுள்ள நுணுக்கங்கள்
அறிவாய் போற்றி
குறிப்பாக தன்நாமம்
மிளிர்ந்தே ஒளிர
குறையகற்றி செயல்பட்டு
முன்னே செல்வாள்
பறித்தேதான் இதயங்கள்
பாவை இவளும்
பாங்காக வே நல்ல
பெயரில் வாழ்வாள்
குறித்தேநாம்  இவள்ஆற்றல்
தன்னைக் கண்டு
கொடுத்தோமே நம்தலைமை
இன்றே இங்கே


ஸ்ரீதேவி கணேஷ னெனும்
இவளின் வரிகள்
சிரித்தேதான்  பலர் சிந்தை
கவர்ந்து நிற்கும்
அறிந்தேநாம் இவரழைத்து
வகவ அரங்கை
தலைமேலே வைத்தோமே
நாமும் மகிழ்ந்தோம்
தரித்தெங்கும் நிற்காமல்
கவிதை கங்கை
தலைநிமிர்ந்து நடைபோட்டு
தடைகள் தாண்டும்
பறித்தெங்கள் கவிஞர்களும் கவிதைஉள்ளம்
பின்செல்வார்
இக்கவிதை பெண்ணாளோடு

கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
இன்று
வகவக் கவியரங்கு
நூற்றிப் பதினேழு
வான்முட்டும் கரகோஷம்
ஒலிக்கும் நீகேளு

வாருங்கள்
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்








செவ்வாய், 14 அக்டோபர், 2025

பாத்திமா நளீரா

 ( 12/10/2025 அன்று கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பாத்திமா நளீரா எழுதிய 'ஏழாம் வானத்தின் சிறகு' கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது வாசிக்கப் பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்



நான் தயார் 

நீங்கள் தயாரா


ஏழாம் வானம்

சென்று வர


சிறகுகள் தர தயாராய் 

இருக்கிறார்


நளீரா


கவிதைகளின் தாயாராய் 

அவற்றுக்கு 

சொல் உணவு ஊட்டி

எங்களை

சொக்க வைத்துள்ளார்


சொற்களுக்குள் 

மாணிக்கக் கற்கள்

வைத்துள்ளார்


தோண்டிப் பாருங்கள்

என்று

புதையல் வைத்துள்ளார்


பாத்திமா நளீரா

என்ற இந்த

கவிதைப் பெண்ணாள்


இவ்வுலகைக் கண்டிருக்கிறாள் 

தன்

காத்திரக் கண்ணால்

தன் கரம் பற்றிய 

மை சிந்தும் 'பென்'னால் 


இவள் தாள்

பூமியைத் தொடாமல் 

பார்த்துக் கொண்டிருக்கிறது

இவள் எழுதிக் குவித்திருக்கும் 

கவிதைத் தாள்


நான்

பறந்து கொண்டிருக்கிறேன்


ஏழாம் வான் சென்று

சிறகடித்துக் கொண்டிருக்கும்

இந்தக்

கவிதை ஆளுமையை 

அடையாளமிட


எழுத்துத் தேரில் 

அன்றே

பவனி வந்து


இலக்கிய உலகே

கவனி என்று

பேரிகை கொட்டிய 

காரிகை இவர்


இவர்

எழுதிக் குவித்ததை

அவர்

எங்களிடம் தந்துள்ளார்


யார் அவர் ?


நளீரா சித்திரம் வரைய

சுவர் கொடுத்தவர்


ஆம்

அவரின் அவர்

எங்கள்

சித்தீக் காரியப்பர்


செய்திருக்கும்

காரியமோ 

வெரி வெரி சுப்பர்


இலக்கிய உலகில்

இருவருமே

நிலைத்து நிற்பர்


மனைவிக்கு 

மகுடம் சூடும்

பாக்கியம்

எத்தனைப் பேருக்கு

வாய்க்கிறது ?


அத்தகு உள்ளம்

எத்தனைப் பேருக்கு

இருக்கிறது ?



நளீரா

சிறிது காலம்

தன் கைகளை

கட்டிப் போட்டிருந்தார்


தன் கைகளுக்கு

கட்டில் போட்டிருந்தார்-

உறங்கிக் கொள்ள


இக்கட்டில் இருந்தவரை

இக் கட்டில் வேண்டாமென்று

திக்கெட்டும் பறக்கும்

சிறகுகள் கொடுத்தார் 

சித்தீக்


மனைவிக்கு

சிறை கொடுக்கும்

கணவர்கள்

இன்றும் இருக்கும்போது

சித்தீக் காரியப்பர்

சிறகுகள் கொடுத்திருக்கிறார்


அதனால் நளீரா

ஏழாம் வானத்திற்கு

எம்மையும்

அழைத்துச் சென்றிருக்கிறார்


நாளையும் 

சிறகு விரித்துப்

பறக்கப் போகும்

பாத்திமா நளீரா

உங்களுக்கு

வாழ்த்துகள் வந்து சேர்கிறது

கலரா கலரா


தையலாய் தைத்த

பாத்திமா நளீரா

இன்னும் பல நூல்கள்

நீங்கள்

நூற்க வேண்டும்

சமுதாய அவலங்கள்

மாய்க்க வேண்டும்


நன்றி


 - என். நஜ்முல் ஹுசைன்








 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

கவிஞர் லைலா அக்ஷியா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு 06/10/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் லைலா அக்ஷியாவிற்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
 
- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர்
  வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)

எத்தனையோ ஆற்றல்கள் தன்னுள் வைத்து
எப்போதும் சுறுசுறுப்பின் வடிவமாகி
வித்தைகள் பலகாட்டும்
விந்தை செய்து
இத்தினத்தில் வகவத்தின்
தலைமை ஏற்று
வித்துவமாய் கவியரங்கை
நடத்திச் செல்ல
வஞ்சியிவள் வந்துநின்றாள்
எங்கள் மேடை

அறிவிப்புத் துறையினிலே
அழகாய் மின்னி
அகமகிழும் வார்த்தைகள்
அன்பாய் பேசி
தெறிக்கின்ற பொருளுள்ள
கவிதை பாடி
தெரியாதோர் மனங்களையும்
தன்பால் இழுத்து
அறிவென்னும் ஆயுதத்தால்
தன்னை வடித்து
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
எழுந்து நிற்பார்

எப்போதும் எம்கவிதை
மேடை வந்து
ஏற்றமிகு கவிதைகளால்
சபையை ஈர்த்து
தப்பேதும் இல்லாமல்
தனக்கே என்று
தனியான தோர்இடத்தை
பெற்றுக் கொண்டார்
இப்போது இவரழைத்து
இவரின் தலையில்
எம்கவிதை அரங்கினையே
நாமும் வைத்தோம்
அப்பப்பா என்றேநாம்
போற்றி மகிழ
கவிதைமகள் லைலாக்கே
செவிகள் தந்தோம்

கவிஞர்
லைலா அக்ஷியா

இன்றெங்கள் கவியரங்கு
நூற்றுப் பதினாறு
உங்கள் தலைமையிலே
ஓடட்டும்
அமுதத் தேனாறு

வாருங்கள்
கவிஞர் லைலா அக்ஷியா

சனி, 12 ஜூலை, 2025

கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா

 வலம்புரி கவிதா வட்டத்தின் 113 ஆவது கவியரங்கு 10/7/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்க தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.


- நஜ்முல் ஹுசைன் 

தலைவர் 

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ் என்று மொழிவதிலே இன்பங் கண்டு 

அமிழ் தென்று அதன் சுவையில் தேனை உண்டு திமிர் கொண்டு நான் கவிஞன் என்றே மொழிந்து நிமிர்ந் தேதான் படைக்கின்ற ஆற்றல் உள்ளான் 


பல்வேறு பட் டங்கள்

தன்னைச் சுமந்து 

வல்ல மைகள் தன்எழுத்தில் 

காட்டி நின்று 

அல்லல் படும் மாணவர்க்கு கரங்கள் நீட்டி 

எல்லை இல்லா மகிழ்ச்சியிலே திளைக்கும் ஒருவன் 


வகவத்தின் படிகளிலே 

ஏறி நின்று 

அகமதிலே குடியிருக்கும் 

கவிதை பாடி 

சுகமாக தன் பணிகள் 

தலையில் கொண்டு 

திகழ்கின்றான் தனக்கும் என பெயரை வைத்து 


ஒரு கவிதை யேபாடி 

ஓடிச் செல்லும் 

அருங்கவிஞர் சிவராசா 

மேடை அமர்த்தி 

பெருங் கவிஞர் கூட்டத்தை பொறுப்பாய் தந்தோம் 

இருந்தே தான் தலைமையிலே நன்றே சிறக்க 


கவிஞர் தெஹியோவிற்ற 

இரா. சிவராசா


இன்றெங்கள் கவியரங்கு 

நூற்றி பதின்மூன்று -இதில் காட்டிடவே வேண்டும் நீங்கள் 

நல்ல பல சான்று 

தலைமைதான் உங்களுக்கு 

அதை மனதில் ஏற்று பெருக்கெடுத்து ஓடட்டும் கவிதை எனும் ஊற்று !