பனித்தீ களம் - என். நஜ்முல் ஹுசைன்
செவ்வாய், 27 ஜனவரி, 2026
புதன், 14 ஜனவரி, 2026
கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்
வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கு 03.01.2026 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)
வழிகாட்டும் ஒளி விளக்காய்
இவரும் இங்கே
வீற்றிருந்து மாணவர்கள்
உலகம் செய்தார்
விழிதிறந்தார் இவரென்று
போற்றி மகிழ்ந்து
வீறுடனே பலரின்று
உயரம் தொட்டார்
களிப்புடன் நான்
இவரிடமே கற்றேன் என்று
கண்களிலே நீர் முட்ட
சொல்லி இவர்க்கு
அளிக்கின்றார் அள்ளி அள்ளி பிரார்த் தனைகள்
இலக்கியமே என்றதுமே
தூரம் மறந்து
இன்பமுடன் சுறுசுறுப்பாய்
பறந்து வருவார்
நிலவுஅது பௌர்ணமியாய் ஜொலிக்கும் நாளில்
நின்றிடுவார் வகவத்தின்
வாசல் வந்து
உலவுகின்ற உறவுக்கு
பாலம் அமைத்து
உயரத்தில் நின்றிருப்பார்
எங்கள் மனதில்
பலமாக இவர் எமக்கு
ஆனார் வகவ
பாதையிலே ராஜநடை போடுகின்றார் -
ராஜன் நடை போடுகின்றார்
நமடகஹ வரலாறு தன்னை எழுதி நல்லதொரு பணி செய்து
தலையும் நிமிர்ந்தார்
கமகமக்கும் கவிதைகளால்
எங்கள் மேடை
கலகலப்பாய் ஆவதற்கு
துணையும் நின்றார்
நமதுள்ளம் கவர்ந்தவரை
அழைத்து வந்து
நாமின்று இவ்வரங்கின்
தலைமை தந்தோம்
எமதரங்கின் தலைமை கவி
ராஜன் நசீர் தீன்
எழுகின்ற கரவோசை
வாழ்த்தும் உமையே
கவிஞர் கலேவெல ராஜன் நசீர்தீன்
கவியரங்கில் நாம் தொட்டோம் நூற்று பதினெட்டு
உங்கள் தலைமையிலே ஜொலிக்கட்டும் புதுமை பல தொட்டு தமிழ் பாலில் தேன் கலந்து
நீ முரசு கொட்டு
சபையே
கவியரங்கு கலகலக்க
நீ கையைத் தட்டு
வாருங்கள்
கவிஞர் கலவெல ராஜன் நசீர்தீன் !
வெள்ளி, 19 டிசம்பர், 2025
கவிஞர் பர்ஹாத் சித்தீக்
வலம்புரி கவிதா வட்டத்தின் 112 ஆவது கவியரங்கு 10/06/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் பர்ஹாத் சித்தீக்குக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
சுறுசுறுப்பின் இலக்கணத்தை தன்னில் காட்டி
சுகமென்றே பொதுச்சேவை
தன்னை ஆக்கி
விறுவிறுப்பாய் செயல்புரிந்து
நிற்கும்இவனை
விருப்பமுடன் பாராட்டி
நிற்பர் பலரும்
அருவருப்பு என்பதனை என்றும் காட்டா
அன்பு மகன் எல்லோர்க்கும் இனியன்; உயர்ந்தோன் பொறுப்பெடுத்து பணியாற்றும்
இவனை இன்று
பெருமனதாய் நாமழைத்து தலைமை தந்தோம்
பொதுச்சேவை மட்டுமல்ல கவிதை என்னும்
பேராறில் மூழ்கிஇவன்
முத்தும் எடுப்பான். விதவிதமாய் வகவத்தின்
மேடை தன்னில்
வியப்பூட்டும் கவிதைகளால் உள்ளம் நனைப்பான்
இதமாக இவன் கவிதை இருக்கும் அதுபோல்
இதயத்தைப் பிழிந்தெடுக்கும் பொருளும் இருக்கும்
சதம்போட்டு கவியுலகில் நிலைத்து நிற்பான்
சாதிக்கும் இளையமகன் பர்ஹாத் சித்தீக்
கவிஞர் பர்ஹாத் சித்தீக்
இன்றெங்கள் கவியரங்கு நூற்றுபன் னிரண்டு
உன்றன் தலைமையிலே வடியட்டும் தமிழ்த்தேனும் திரண்டு
வரவேற்று நாம் தந்தோம் எம்மேடை இன்று
காட்டி நில்லு உன் புலமை எம்மனதை வென்று
- என். நஜ்முல் ஹுசைன்
ஞாயிறு, 9 நவம்பர், 2025
மஸாஹிரா கனி நூல் வெளியீடு
(09/11/2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.30 க்கு இடம்பெற்ற மஸாஹிரா கனியின் 'வேரெழுது', 'விடத்தல்தீவு புலவர் முஹம்மத் காசிம் ஆலிம்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அனைவருக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்
வணக்கம்
வேறெழுத முடியாமல்
வேரெழுத வந்தார்
வேறெதுவும்
எழுத முடியாமல்
தன்
வேரெழுத வந்தார்
போர் எழுதியதால்
ஊர் அழுத
பொழுதெழுதி
பேர் எழுதிக் கொண்டார்
சுவைப்
போர் எழுதிய
சுவையால்
தன்
சுமை எழுதிக் கொண்டார்
தன் இமைப் பொழுதில்
எழுதியதை
இதயத்தில் எழுதி -
நூல் எழுதி -
நிஜம் எழுதி
எம்முன்னே
வைத்தார்
பல நெஞ்சங்கள்
தைத்தார்
மஸாஹிரா கனி
கனிந்தெழுதினாலும்
கனி எழுத வரவில்லை
காய் எழுத வரவில்லை
மானிடர்க்காய்
எழுத வந்தார்
வேரெழுத வந்தார்
வேரெழுது
என்று
ஏர் உழுது சென்றார்
கிளை பரப்பி
தலை நிமிர்ந்து
தன்
கனி கொடுத்து நிற்கும்
விருட்சத்தின்
அடி காண
எமை
அழைத்துச் சென்றார்
எமை
வளைத்துக் கொண்டார்
தன் பாட்டன்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
புகழ் எழுதிச்
சென்றார்
தன் வேர்
கண்டு கொண்டார்
அதனால்
வீறு கொண்டார்
நீர் எழுதியதால்
கண்ணீர் எழுதிய
காவியங்கள் பிறந்த
நாட்டில்
மஸாஹிரா கனியே
நீர் எழுதியது
ஆனந்தக் கண்ணீர்
காவியம்
தமிழ்
மார் எழுதிய
பால் குடித்து
தமிழ்ப்பால்
தனை வளைத்து
தாழ்ப்பாள் போடாது
கவிதை
மடை திறக்கும்
மஸாஹிரா
இவர் விழித்திருந்தது
பல இரா
அதில் கண்டதெல்லாம்
வேர் காணும் கனா
வயிற்றுக்கு
சோறெழுதிய
ஏர் எழுதிய
கவிதை
நெற்கதிர்
எங்கள்
வாழ்க்கைக்கு
வாழ்த்தெழுதிய
மஸாஹிரா கனியின்
எழுத்துக்கு
யார் நிற்கப் போகிறார்கள்
எதிர்
கார் எழுதியது
மழை
கெட்டிக் காரி
இவள் எழுதியது
கலை
அதை வைத்துத்தானே
எமக்கெல்லாம்
வீசியிருக்கிறார்
வலை
மஸாஹிரா கனி
விண்மீன் சொற்கொண்டு
எழுதிய கவிதையில்
வலைமீனாய்
வசியப்பட்டுப் போயிருக்கிறோம்
மூல வேர்
விடத்தல்தீவு புலவர்
முஹம்மது காசிம் ஆலிம்
பேத்தியே
மஸாஹிரா கனியே
இன்னும் இன்னும்
உன்
வேரெழுது
அங்கெல்லாம்
உன்
பேரெழுது
உனை
வாழ்த்தி மகிழ்கிறேன்
வல்லான் அல்லாஹ்
தொழுது !
நன்றி !
- என். நஜ்முல் ஹுசைன்
வெள்ளி, 7 நவம்பர், 2025
இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு..
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி 09/11/2025 தொகுத்து வழங்கிய 'பொய்கை' நிகழ்ச்சியில் இலங்கை வானொலியின் நூற்றாண்டை முன்னிட்டு ஒலிபரப்பான கவிதை.
எங்கள் காது பிடித்து
தூக்கி விட்ட
அன்னை வானொலிக்கு
அகவை நூறு
வாழ்த்துகள்
எங்கள் அகப் பை
நிறைந்தது
இலங்கை வானொலியே
நீ உன்
அகப்பையினால்
பரிமாறிய உணவில்தானே
நீ
எங்கள் செவிகளிலூட்டிய
பல்சுவையினால்தானே
எங்கள் செல்நெறி
உருவானது
எங்கள் வாழ்க்கையையே
உன்னிடம்தானே
ஒப்பமிட்டுத் தந்திருந்தோம்
இன்று நாங்கள்
ஜொலிக்கின்றோம் என்றால்
எம்மை
ஒப்பமிட்டுத் தந்தது நீயல்லவா
செல்நெறி காட்டிய
உனக்கு
செய்நன்றி செய்வதற்கு
காத்திருக்கிறோம் -
மிக மிக நீண்ட வரிசையில்
உன் ஒவ்வொரு ஆண்டும்
எம்மை ஆண்டுதான்
சென்றிருக்கிறது
நீ என்றென்றும்
வீற்றிருப்பாய்
ஒலிபரப்புச் சக்கரவர்த்தியாய் -
மற்றவர்களைப்
பின்தள்ளி !
- என். நஜ்முல் ஹுசைன்
வியாழன், 6 நவம்பர், 2025
மொழிவாணன் விரலி வெளியீடு
ஜனரஞ்சக எழுத்தாளரின் விரலி Pendrive வெளியீட்டு விழா 02/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட வாழ்த்துக் கவிதை
இந்த ஆண் டிரைவர்
பெண் டிரைவரை
கண்டுபிடித்துள்ளார்
ஆம்
மொழிவாணன் எனும்
இந்த
மொழி வானம்
எழுத்து வானவில்லில்
வர்ணங்கள் பூசியவர்
நம் மொழிவாணன்
எழுத்து டிரைவர்
எத்தனை வேகமானவை
இவர் எழுத்துகள்
அவை
அதிவேகப்
பாதைகளில்தான்
பயணம்
செய்துள்ளன
நாவலுக்குள்
ஆவலைத் தூண்டியவர்
நா சுவைக்க
பா வலை வீசுபவர்
தசாப்தங்கள் தாண்டிய
இவர் எழுத்துப் பயணம்
ஜனரஞ்சக எழுத்தாளர்
மகுடத்தை
சுவீகரித்துக் கொண்டது
எழுத்தை ஆண்டு
வந்த
மொழிவாணன்
பல தடைகள்
தாண்டியவர்
பலரை
எழுதத் தூண்டியவர்
அது மட்டுமல்ல
பல முதல்களில்
காலடி
எடுத்து வைத்தவர்
பல முதலைகளை
கண்டவர்
பல முதல் அலைகளை
கண்டவர்
வீடியோக்களில்
விசித்திரம் காட்டியவர்
ஒளிக்கலவையால்
சித்திரம் தீட்டியவர்
மொழிவாணனும்
ஒரு கடல்தான்
இவரது அலைகளும்
ஓய்வதில்லை
கைகளும்
சோர்வதில்லை
இதோ
புதிய படையல்
எம் நாட்டின்
முதல் முயற்சி
விரலியில் செய்து
விரலினில் தந்திருக்கிறார்
நடிப்பையும்
வாய் அசைப்பையும்
பிடித்து வைத்து
வித்தைக் காட்டியுள்ளார்
வியப்பைக் கூட்டியுள்ளார்
மனப்பை நிறைத்துள்ளார்
மலைப்பை ஊட்டியுள்ளார்
பென்டிரைவுக்கு
பின்னாலுள்ள
ஆண்டிரைவ்
மொழிவாணன்
சாதிக்க வேண்டும் என்ற
உத்வேக நாயகன்
இன்றும் இளைஞனாய்
இன்னும் இன்னும்
வித்தியாசப் படைப்புகள்
இவரிடமிருந்து வரவேண்டும்
இவர் புகழ்
நின்று நிலைக்க வேண்டும்
என வாழ்த்தி அமர்கின்றேன்
நன்றி
- என். நஜ்முல் ஹுசைன்
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
வலம்புரி கவிதா வட்டத்தின் 117 ஆவது கவியரங்கு 05/11/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கத் தலைமையை ஏற்று நடத்த கவிஞர் ஸ்ரீதேவி கணேஷனுக்கு இவ்வாறு நான் அழைப்புவிடுத்தேன்
- என். நஜ்முல் ஹுசைன்
தலைவர்
வலம்புரி கவிதா வட்டம்
(வகவம்)
அழகு தமிழ் சொல்லெடுத்து
இதயம் கவர்வாள்
அலங்கார மொழி உரைத்து முன்னே நிற்பாள்
பழகியவள் பண்பினிலே
உயரம் காண்பாள்
பணிவினிலே தலைகுனிவாள்; நிமிரும் கூர்வாள்
சுழன்றுஅவள் தன்பணியை தலைமேல் வைப்பாள்
சுறுசுறுப்பாய் நடைபயின்று
நெருப்பாய் உழைப்பாள்
அறிவிப்புத் துறையினிலே
ஆற்றல் காட்டி
அதிலுள்ள நுணுக்கங்கள்
அறிவாய் போற்றி
குறிப்பாக தன்நாமம்
மிளிர்ந்தே ஒளிர
குறையகற்றி செயல்பட்டு
முன்னே செல்வாள்
பறித்தேதான் இதயங்கள்
பாவை இவளும்
பாங்காக வே நல்ல
பெயரில் வாழ்வாள்
குறித்தேநாம் இவள்ஆற்றல்
தன்னைக் கண்டு
கொடுத்தோமே நம்தலைமை
இன்றே இங்கே
ஸ்ரீதேவி கணேஷ னெனும்
இவளின் வரிகள்
சிரித்தேதான் பலர் சிந்தை
கவர்ந்து நிற்கும்
அறிந்தேநாம் இவரழைத்து
வகவ அரங்கை
தலைமேலே வைத்தோமே
நாமும் மகிழ்ந்தோம்
தரித்தெங்கும் நிற்காமல்
கவிதை கங்கை
தலைநிமிர்ந்து நடைபோட்டு
தடைகள் தாண்டும்
பறித்தெங்கள் கவிஞர்களும் கவிதைஉள்ளம்
பின்செல்வார்
இக்கவிதை பெண்ணாளோடு
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
இன்று
வகவக் கவியரங்கு
நூற்றிப் பதினேழு
வான்முட்டும் கரகோஷம்
ஒலிக்கும் நீகேளு
வாருங்கள்
கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன்
