எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 14 அக்டோபர், 2025

பாத்திமா நளீரா

 ( 12/10/2025 அன்று கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பாத்திமா நளீரா எழுதிய 'ஏழாம் வானத்தின் சிறகு' கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது வாசிக்கப் பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்



நான் தயார் 

நீங்கள் தயாரா


ஏழாம் வானம்

சென்று வர


சிறகுகள் தர தயாராய் 

இருக்கிறார்


நளீரா


கவிதைகளின் தாயாராய் 

அவற்றுக்கு 

சொல் உணவு ஊட்டி

எங்களை

சொக்க வைத்துள்ளார்


சொற்களுக்குள் 

மாணிக்கக் கற்கள்

வைத்துள்ளார்


தோண்டிப் பாருங்கள்

என்று

புதையல் வைத்துள்ளார்


பாத்திமா நளீரா

என்ற இந்த

கவிதைப் பெண்ணாள்


இவ்வுலகைக் கண்டிருக்கிறாள் 

தன்

காத்திரக் கண்ணால்

தன் கரம் பற்றிய 

மை சிந்தும் 'பென்'னால் 


இவள் தாள்

பூமியைத் தொடாமல் 

பார்த்துக் கொண்டிருக்கிறது

இவள் எழுதிக் குவித்திருக்கும் 

கவிதைத் தாள்


நான்

பறந்து கொண்டிருக்கிறேன்


ஏழாம் வான் சென்று

சிறகடித்துக் கொண்டிருக்கும்

இந்தக்

கவிதை ஆளுமையை 

அடையாளமிட


எழுத்துத் தேரில் 

அன்றே

பவனி வந்து


இலக்கிய உலகே

கவனி என்று

பேரிகை கொட்டிய 

காரிகை இவர்


இவர்

எழுதிக் குவித்ததை

அவர்

எங்களிடம் தந்துள்ளார்


யார் அவர் ?


நளீரா சித்திரம் வரைய

சுவர் கொடுத்தவர்


ஆம்

அவரின் அவர்

எங்கள்

சித்தீக் காரியப்பர்


செய்திருக்கும்

காரியமோ 

வெரி வெரி சுப்பர்


இலக்கிய உலகில்

இருவருமே

நிலைத்து நிற்பர்


மனைவிக்கு 

மகுடம் சூடும்

பாக்கியம்

எத்தனைப் பேருக்கு

வாய்க்கிறது ?


அத்தகு உள்ளம்

எத்தனைப் பேருக்கு

இருக்கிறது ?



நளீரா

சிறிது காலம்

தன் கைகளை

கட்டிப் போட்டிருந்தார்


தன் கைகளுக்கு

கட்டில் போட்டிருந்தார்-

உறங்கிக் கொள்ள


இக்கட்டில் இருந்தவரை

இக் கட்டில் வேண்டாமென்று

திக்கெட்டும் பறக்கும்

சிறகுகள் கொடுத்தார் 

சித்தீக்


மனைவிக்கு

சிறை கொடுக்கும்

கணவர்கள்

இன்றும் இருக்கும்போது

சித்தீக் காரியப்பர்

சிறகுகள் கொடுத்திருக்கிறார்


அதனால் நளீரா

ஏழாம் வானத்திற்கு

எம்மையும்

அழைத்துச் சென்றிருக்கிறார்


நாளையும் 

சிறகு விரித்துப்

பறக்கப் போகும்

பாத்திமா நளீரா

உங்களுக்கு

வாழ்த்துகள் வந்து சேர்கிறது

கலரா கலரா


தையலாய் தைத்த

பாத்திமா நளீரா

இன்னும் பல நூல்கள்

நீங்கள்

நூற்க வேண்டும்

சமுதாய அவலங்கள்

மாய்க்க வேண்டும்


நன்றி


 - என். நஜ்முல் ஹுசைன்








 

செவ்வாய், 7 அக்டோபர், 2025

கவிஞர் லைலா அக்ஷியா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு 06/10/2025 அன்று நடைபெற்றபோது கவியரங்கை தலைமையேற்று நடத்துமாறு கவிஞர் லைலா அக்ஷியாவிற்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
 
- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர்
  வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)

எத்தனையோ ஆற்றல்கள் தன்னுள் வைத்து
எப்போதும் சுறுசுறுப்பின் வடிவமாகி
வித்தைகள் பலகாட்டும்
விந்தை செய்து
இத்தினத்தில் வகவத்தின்
தலைமை ஏற்று
வித்துவமாய் கவியரங்கை
நடத்திச் செல்ல
வஞ்சியிவள் வந்துநின்றாள்
எங்கள் மேடை

அறிவிப்புத் துறையினிலே
அழகாய் மின்னி
அகமகிழும் வார்த்தைகள்
அன்பாய் பேசி
தெறிக்கின்ற பொருளுள்ள
கவிதை பாடி
தெரியாதோர் மனங்களையும்
தன்பால் இழுத்து
அறிவென்னும் ஆயுதத்தால்
தன்னை வடித்து
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
எழுந்து நிற்பார்

எப்போதும் எம்கவிதை
மேடை வந்து
ஏற்றமிகு கவிதைகளால்
சபையை ஈர்த்து
தப்பேதும் இல்லாமல்
தனக்கே என்று
தனியான தோர்இடத்தை
பெற்றுக் கொண்டார்
இப்போது இவரழைத்து
இவரின் தலையில்
எம்கவிதை அரங்கினையே
நாமும் வைத்தோம்
அப்பப்பா என்றேநாம்
போற்றி மகிழ
கவிதைமகள் லைலாக்கே
செவிகள் தந்தோம்

கவிஞர்
லைலா அக்ஷியா

இன்றெங்கள் கவியரங்கு
நூற்றுப் பதினாறு
உங்கள் தலைமையிலே
ஓடட்டும்
அமுதத் தேனாறு

வாருங்கள்
கவிஞர் லைலா அக்ஷியா

சனி, 12 ஜூலை, 2025

கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா

 வலம்புரி கவிதா வட்டத்தின் 113 ஆவது கவியரங்கு 10/7/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்க தலைமையை ஏற்று நடாத்த கவிஞர் தெஹியோவிற்ற இரா. சிவராசா அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.


- நஜ்முல் ஹுசைன் 

தலைவர் 

வலம்புரி கவிதா வட்டம் (வகவம்)




தமிழ் என்று மொழிவதிலே இன்பங் கண்டு 

அமிழ் தென்று அதன் சுவையில் தேனை உண்டு திமிர் கொண்டு நான் கவிஞன் என்றே மொழிந்து நிமிர்ந் தேதான் படைக்கின்ற ஆற்றல் உள்ளான் 


பல்வேறு பட் டங்கள்

தன்னைச் சுமந்து 

வல்ல மைகள் தன்எழுத்தில் 

காட்டி நின்று 

அல்லல் படும் மாணவர்க்கு கரங்கள் நீட்டி 

எல்லை இல்லா மகிழ்ச்சியிலே திளைக்கும் ஒருவன் 


வகவத்தின் படிகளிலே 

ஏறி நின்று 

அகமதிலே குடியிருக்கும் 

கவிதை பாடி 

சுகமாக தன் பணிகள் 

தலையில் கொண்டு 

திகழ்கின்றான் தனக்கும் என பெயரை வைத்து 


ஒரு கவிதை யேபாடி 

ஓடிச் செல்லும் 

அருங்கவிஞர் சிவராசா 

மேடை அமர்த்தி 

பெருங் கவிஞர் கூட்டத்தை பொறுப்பாய் தந்தோம் 

இருந்தே தான் தலைமையிலே நன்றே சிறக்க 


கவிஞர் தெஹியோவிற்ற 

இரா. சிவராசா


இன்றெங்கள் கவியரங்கு 

நூற்றி பதின்மூன்று -இதில் காட்டிடவே வேண்டும் நீங்கள் 

நல்ல பல சான்று 

தலைமைதான் உங்களுக்கு 

அதை மனதில் ஏற்று பெருக்கெடுத்து ஓடட்டும் கவிதை எனும் ஊற்று !

சனி, 7 ஜூன், 2025

ஈத் முபாரக்

 அவர்கள்

துல்ஹஜ்ஜிலும்
ரமழானோடு வாழ்கையில்

வீடில்லாமல் இருக்கும்
அவர்களுக்கு எதிராய்
வீட்டோ இருக்கையில்

'நாவே'
நா அடங்கிப் போயிருக்கையில்

எப்படி
சுதந்திரமாய் சொல்லமுடியும்

ஈத் முபாரக்

   - என். நஜ்முல் ஹுசைன்

செவ்வாய், 20 மே, 2025

கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா

வலம்புரி கவிதா வட்டத்தின் 110 ஆவது கவியரங்கு 12/04/2025 சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கை தலைமையேற்று நடாத்த கவிஞரும் எழுத்தாளருமான எம்.ஏ. ரஹீமா அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தேன்.

- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர்,
  வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)



எழுத்துலகை நிமிர்ந்தேதான்
பார்க்க வைத்தார்
எழுத்தாளர் பலர்மனதை
கொள்ளையிட்டார்
அழுதிருக்கும் சமூகத்தின்
அவலம்தீர
அடம்பிடித்தே தன் எழுத்தில்
படமும் பிடித்தார்
எழுந்திருக்கும் சிறுகதையில்
கவிதையுலகில்
எடுப்பாக இவர்நின்று
மிளிருகின்றார்

உண்மைதான் சிலகாலம்
அஞ்ஞா வாசம்
இவர்புரிந்து
பண்ணாமல் எழுத்துப் பணியும்
தனித்திருந்தார்

கண்ணியமாய் வகவம் தான்
இழுத்து வந்து
கசடறவே எழுதுங்கள்
மீண்டும் என்று
திண்ணியமாய் உற்சாகம்
ஊட்டியதை
இவ்விடத்தில் சொல்வது எம் கடமையன்றோ

கல்வியிலும் முடிசூடி இருந்த
எம்ஏ
ரஹீமா வின்
பேராற்றல் மீண்டும்
துளிர்க்க
எல்லையற்ற மகிழ்ச்சியுடன்
எழுதுகின்றார்
கவியரங்க தலைமையினில்
அன்றும் ஜொலித்த
வல்லவராம் ரஹீமாவை
விழைந்தே அழைத்தோம்
நூற்றிபத்தின் தலைமையினை
அவர்க்கே தந்தோம்

கவிஞர், எழுத்தாளர்
எம்.ஏ. ரஹீமா
110 ஆவது கவியரங்கம்
உங்களிடத்தில்


எம் கவிஞர்கள்
வைக்கட்டும் உங்களை
உயரிடத்தில்!







ஞாயிறு, 23 மார்ச், 2025

ரமழான் கவிதை 2025

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 16/03/2025 ஞாயிறு இரவு ஒலிபரப்பான கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'கவிதா நதி' யில் ஒலிபரப்பான எனது ரமழான் கவிதை.


ரமழானே
உன்னிடம் நாங்கள்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறோம்

எம்மிடம் நீ
ஒப்படைக்கப்பட்டிருக்கிறாய்

இது ஓர்
உடன்படிக்கை

எங்களுக்கும் உனக்கும்
சில
பொறுப்புகள் உண்டு

உன்னை நாங்கள்
இபாதத்தால்
அலங்கரிக்க வேண்டும்

நீ எங்களை தக்வாவால்
கழுவி
சுத்தம் செய்ய வேண்டும்

உனக்காக
எங்கள் வயிறுகளை
நாங்கள்
வெறுமையாக்க வேண்டும் 

எங்கள் ஆத்மாவுக்கு
நீ
விருந்து வைக்க வேண்டும்

நீ வந்து
எங்களுக்கு
ஏழைகளை ஞாபகப்படுத்த வேண்டும்

நாங்கள் பொட்டலம் ஏந்தி
வறுமையின்
வாசல் தேடி
பயணம் செய்ய வேண்டும்

நாங்கள்
வணக்கத்தின் எண்ணிக்கைகளை
அதிகரிக்க வேண்டும்

நீ
ஒன்றுக்கு பல என்று
பதிவு
செய்ய வேண்டும்

நாங்கள் குர்ஆனின்
பக்கங்களில்
தஞ்சமாக வேண்டும்

நீ
சொர்க்கத்தின் பக்கங்களில்
எங்கள் பெயரையும்
எழுதி வைக்க
வேண்டும்

முடிவில் நீ
விடை பெறுவாய்
நாங்கள்
விடை தருவோம்

நீ மீண்டும் வருவாய்
என்ற நம்பிக்கையில் -

நாங்கள் மீண்டும்
பழைய
வாழ்க்கைக்குள்
மூழ்கி விட மாட்டோம்
என்ற நம்பிக்கையில்!

- என். நஜ்முல் ஹுசைன்

திங்கள், 10 பிப்ரவரி, 2025

பிறந்த நாள் !

 


பிறந்த நாள் !


உன் பிறந்த நாள்
உனக்கான நாளா ?

இல்லை அது
உன்
அன்னைக்கான நாள் !

தன்
வயிற்று மாளிகைக்குள்
உனக்கு
மெத்தைப் போட்டு

அவளோ
சிறையில் இருந்தாள் !

உன் இருட்டறையை
அவள்
வெளிச்சம் போட்டு
வைத்திருந்தாள்

அவள்
பிரசவித்ததால்தான்
நீ பிறந்தாய் !

அவள் பிரசவம்
முதலாமிடத்தில்
உன் பிறப்பு
இரண்டாம் இடத்தில்தான் !

இன்றைய உனது
மகிழ்ச்சிக்கு மூலதனம்
அவளது வேதனைதானே !

ஒவ்வொரு முறை நீ
பிறந்த நாள்
கொண்டாடும் போதும்

முதலில்
உன் அன்னையைக்
கொண்டாடு !

- என். நஜ்முல் ஹுசைன்

2025 பெப்ரவரி மாத 'ஞானம்' இதழில் என் கவிதை - பிறந்த நாள்.