எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்

 



வலம்புரி கவிதா வட்டத்தின் 97 ஆவது கவியரங்கு 23/02/2024 வெள்ளிக்கிழமை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.
 
- என். நஜ்முல் ஹுசைன்
  தலைவர், வலம்புரி கவிதா வட்டம்
  (வகவம்)


தலைமைக்கு நீங்கள்தான் வேண்டும் என்று
தலைமேலே வகவத்தைத் தூக்கி வைத்து
அலைபாயும் எனமனதுக் கணையும் போட்டு
அருகிருந்து பத்தாண்டை
தொடவும் செய்தார்
நிலைமைகள் எதுவாக இருந்தபோதும்
நிழலாக இவரொன்றாய்
கூட வந்தார்
மலைபோல செயலாளர் அமைந்த தாலே
மலைத்திடவே கலையுலகை
வைத்தோம் நாமே


தகைமைகள் பலவற்றைத் தன்னில் கொண்டு
தலைநிமிர்ந்து வெளிநாடு
பயணம் சென்று
வகையோடு பல்வேறு பதவி கண்டு
வளமாக ஊடகத்தில் ஜொலித்து நின்று
பகையின்றி தொலைக்காட்சி
செய்திப் பிரிவில்
பலம்வாய்ந்த பதவியிலே மிளிர்ந்து வென்று
திகைக்கின்ற வண்ணம் இவர் இலக்கியத்தில்
தனக்கென்று தனிப்பாணி கொண் டுயர்ந்தார்


இளநெஞ்சன் முர்ஷிதீன் உயர்ந்த கவிஞர்
இருக்கின்றார் வகவத்தை நிமிர்த்தும் எலும்பாய்
களம்புகுந்து தன் கருத்தை வலுவாய் சொல்லி
காரியங்கள் ஆற்றிடுவார்
ஓயமாட்டார்
வளம்பெற்ற வலம்புரியின் கவிதை அரங்கை
வண்ணமய மாக்கிடவே தலைமையேற்றார்
இளமையின்னும் மாறவில்லை முன்பைப் போன்றே
இயக்கிடுவார் நம்அரங்கை
இனிமைப் பொங்க


கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்

தொட்டுவிட்டோம்
கவியரங்கு தொண்ணூற்றேழு
தேனூறும் கவிதைகளால் எம்மைச் சூழு
கவிதை படை நீ நடத்தி
நெஞ்சில் வாழு
மகிழ்ந்திடவே
வைக்கிறது இந்த நாளு !


வருக
கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன்


  - என். நஜ்முல் ஹுசைன்



கருத்துகள் இல்லை: