எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 6 ஜனவரி, 2024

இந்த வீடு வேண்டும் - சிறுகதை

 


இந்த வீடு வேண்டும்


                - என். நஜ்முல் ஹுசைன்

திக் கொண்டிருந்த குர்ஆனை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி விட்டு தலையைத் தூக்கிப் பார்த்தார் சமத் சேர். இன்னும் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் கதவைத் தட்டுபவர் மிகவும் மெதுவாகத்தான்  தட்டிக் கொண்டிருந்தார். அதனால்தான் அந்தச் சத்தம் உள் அறைக்குள்ளும், சமையலறைக்குள்ளும் இருந்த அவரின் மனைவி மகள்கள் யாருக்கும் கேட்கவில்லை.

சமத் சேர் குர்ஆனை வைத்து விட்டு மெதுவாகச் சென்று கதவைத் திறந்தார்.

அங்கே சுந்தரம் ஐயா நின்று கொண்டிருந்தார்.

'சுந்தரம் ஐயாவுடன் இருந்த அனைத்து கணக்கு வழக்குகளையும், கொடுக்க வேண்டிய கோப்புகளையும் பரிபூரணப்படுத்தி கொடுத்து விட்டேனே. மறுபடியும் ஏன் வந்திருக்கிறார் ?'

சிந்தனையோட்டம் சென்று கொண்டிருக்கும் போதே, "வாங்க ஐயா, வாங்க. சுகமா இருக்கிறீங்களா ?"

"ஓம் ஓம்  ஐயா சுகமா இருக்கிறானான். ஒரு முக்கிய விஷயமா உங்கள பாக்க வந்தன்" என்றார்.

சமத் சேர் தனது மனைவியுடனும் நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த வீட்டை வாங்கியவர், இந்த சுந்தரம் ஐயாதான் .

சமத் சேர் ஒரு ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.  மினுவன்கொட பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தவர்.

கொழும்பு புதுக்கடையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். நான்கு பெண் பிள்ளைகள் இருந்தாலும் இன்னும் ஒரு மகளுக்குக் கூட திருமணம் நடக்கவில்லை. மூத்த மகளுக்கு மட்டுமே திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆசிரியர் தொழில் மூலம் கிடைக்கும் பென்ஷன் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடச் செய்தது. மின்சார கட்டண பில்லை பார்க்கும் போதெல்லாம் சமத் சேர் எங்கே தனக்கு ஹார்ட் எட்டேக் வந்து விடுமோ என்று அச்சப்படாத வேளை இல்லை. போதாதற்கு தண்ணீர் பில்லும் தனது பங்குக்குச் சேர்ந்து கொண்டது.

மூத்த மகளுக்கு மிகவும் எளிமையாக திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டுமென்றால் கூட சில லட்சங்கள் தேவை.  சமத் சேர் யாரிடமும் சென்று கை நீட்டிப் பழக்கமில்லாதவர். வயதும் ஏறிக் கொண்டிருந்த மூத்த மகளின் திருமணத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்று சமத் சேரும் மனைவியும் மிகவும் உறுதியாக இருந்தனர்.

அதற்காக புதுக்கடையில் தாங்கள் வசித்து வந்த வீட்டை விற்கத் தீர்மானித்தனர்.   பல பேர் வீட்டைப் பார்த்து விட்டுப் போனாலும் எல்லோருமே மிகவும் குறைந்த விலைக்குத்தான் வீட்டைக் கேட்டனர்.

சமத் சேருக்கோ வீடு விற்கும் பணத்தில்தான் மூத்த மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும், தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறிய வீட்டை வாங்கவும் வேண்டும் என்ற நிலை. அத்தோடு மற்றைய மூன்று மகள்களுக்கும் எதையாவது சேமித்து வைக்கவும் வேண்டும்.

அதனால் சரியான விலை கிடைக்கும் வரை காத்திருந்தார்.  சுந்தரம் ஐயாதான்  சமத் சேர் எதிர்பார்த்த பணத்தைத் தர சம்மதித்தார். முதலில் சுந்தரம் ஐயாவும் சமத் சேரிடம் பேரம் பேசினாலும் கூட சமத் சேர் தனது பெண் மக்களைப் பற்றி கூறியவுடன் மறு பேச்சு பேசாமல் வீட்டை சமத் சேர் சொன்ன விலைக்கே வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார். இதுவே சுந்தரம் ஐயாவின் மனிதாபிமானத்தைக் காட்டி நின்றது.

சுந்தரம் ஐயா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் கொழும்புக்கு அடிக்கடி வந்து வியாபார பொருட்களை வாங்கிச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். கொழும்புக்கு வரும் போது தங்குவதற்கும் வாங்குகின்ற சில பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அவருக்கு ஒரு இடம் தேவைப்பட்டது. தரகர் மூலம் வந்த சமத் சேரின் வீடு அவருக்கு பிடித்திருந்தது. எழுபது லட்சத்துக்கு அந்த வீட்டை அவர் வாங்கிக் கொண்டார். 

வீடு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டப்பூர்வமான வேலைகளையும் ஒரு சட்டத்தரணி மூலம் பூர்த்தி செய்து கொடுத்து சமத் சேர் பணத்தை வாங்கிக் கொண்டார்.

இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன.  புதியதொரு சின்ன வீட்டினை வாங்கி அங்கேதான் சமத் சேர் குடும்பம் குடியிருக்கின்றது. மூத்த மகளின் திருமண ஏற்பாடுகளும் மெது மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது.

'இப்போது சுந்தரம் ஐயா எதற்கு தேடிக் கொண்டு வந்திருக்கிறார் ?' சிந்தனையோடு சமத் சேர் சுந்தரம் ஐயாவை அமரச் சொன்னார்.

பரஸ்பரம் இருவரும் சுக நலன்களை விசாரித்துக் கொண்டனர்.

"ஐயா சொல்லுங்க. என்ன விஷயமா தேடி வந்திருக்கீங்க ?"

"சேர், எல்லாம் நல்ல விஷயமாத்தான் வந்தனான். உங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க வந்திருக்கன்" என்று கூறி தான் கொண்டு வந்திருந்த கைப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு காசோலையை எடுத்து சமத் சேரிடம் நீட்டினார்.

அதில் 3 ம் சில பூஜ்ஜியங்களும் எழுதப்பட்டிருந்தன. அது முப்பதினாயிரமா அல்லது மூன்று லட்சமா ? என்று சமத் சேருக்கு யூகிக்க முடியாதிருந்தது.

"சுந்தரம் ஐயா, வீட்டுக்குத்தான் நீங்க முழுசா பணத்த தந்திட்டீங்களே ? எதுக்கு இந்தப் பணம் ?"

"சேர், நீங்க சொன்ன பணத்த தந்து நா வீட்ட வாங்கிட்டன்தான்.  ஆனா இது அதுக்குப் பிறகு உங்களுக்கு கிடைச்ச பணம். உங்களின்ர பணம்"

சமத் சேர் குழப்பத்தில் இருந்தார். கையை நீட்டி காசோலையை வாங்கவில்லை. சுந்தரம் ஐயா ஏதோ பகிடி பண்ணுகிறார் என்று சமத் சேர் நினைத்தார்.

"இல்ல இல்ல சேர் இது உங்களின்ர பணம்தான். மூண்டு கோடி ரூபா."

சமத் சேருக்குத் தலை சுற்றியது.

'என்ன மூணு கோடியா....?'

இப்போதுதான் சமத் சேருக்கு சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்தது.
சுந்தரம் ஐயா ஏதோ ஏமாற்றப் பார்க்கிறார். இந்த முகநூலில எல்லாம் உங்களுக்கு கோடி கிடைத்திருக்கிறது என்று சொல்லி வங்கி விபரங்களையெல்லாம் எடுத்து அதிலுள்ள பணத்தையெல்லாம் சுருட்டுகிற கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். அப்படித்தான் இதுவுமோ என்று நினைப்பதை சமத் சேரினால் தவிர்க்க முடியாமலிருந்தது.

அவரது சிந்தனையை கலைத்து சுந்தரம் ஐயா பேசினார். 

"நான் உங்களிட்டை வீட்டை வாங்கி பத்து நாளைக்குள்ள ஒரு பெரீய மனிசன் வசதியானவர் அழகான காரிலை வந்து வாசலிலை இறங்கினார்.

இந்த வீட்டை எனக்குத் தாருங்கோ எண்டு கரச்சல் படுத்தினார். நானோ இது என்ரை தொழிலுக்காய் வாங்கின வீடு. இதை விக்கிற எண்ணமில்லை என்று ஒரேயடியாய்ச் சொல்லிப் போட்டன்.

அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமே ? இந்த இடத்திற்கு எவ்வளவு விலையெண்டாலும் நான் தரத் தயாராய் இருக்கிறன்.இந்த இடம் எனக்கு வேணும் எண்டார். அவர் ஒரு போரா பாய் கண்டியளோ! அவர் என் வீட்டு வலப்பக்கமும் இடப்பக்கமும்உள்ள வீடுகளையும் வாங்கிப்போட்டாராம். நடுவிலை உள்ள எங்கடை வீட்டையும் வாங்கினால்தான் தன்ரை வேலையள் செய்யச் சுகமாம். பெரீய எபாட்மண்ட் கட்டப் போறவராம்.  அவர் கடைசியாக என்ன சொன்னவர் தெரியுமே? மூண்டுகோடி தருவதாகச் சொன்னார்.
                        அவர் மூண்டு கோடி எண்டோணை உங்கடை நாலு பொம்புளைப் புள்ளையளும் என்ரை கண்ணுக்கு முன்னுக்கு நிண்டினம்.
                 அந்தப் பத்து நாளும் அங்கை நீங்கள் இருந்திருந்தால் அந்த "பாய்"உங்களிட்டை வீட்டை விலைக்கு வாங்கியிருப்பார் .
நான் அவர்ர விருப்பத்திற்கு மறுப்புச் சொல்லேல்லை. நேற்றுத்தான் எல்லா வேலையும் முடிஞ்சுது .இந்தாருங்கோ உங்கடை மூண்டுகோடி ரூபா. எனக்கு எழுபது லச்சத்தை தாருங்கோ"

என்று கூறி சமத் சேரின் கைகளில் காசோலையை சுந்தரம் ஐயா திணித்தார்.

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா ? 

" உயர் குணம் கொண்ட மனிதர்களைத் தீர்மானிப்பது காலமல்ல" சமத் சேரின் உள்ளம் சொன்னது. அவர் சுந்தரம் ஐயாவின் கரங்களைப் பற்றி முத்தமிட்டுக் கொண்டிருந்தார் - கண்ணீர் அந்தக் கரங்களில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தது.

==============================

ஞானம் - ஜனவரி, 2024

புதன், 27 டிசம்பர், 2023

சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 95 ஆவது கவியரங்கு 26-12-2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்.

      - என். நஜ்முல் ஹுசைன்
        தலைவர்,
        வலம்புரி கவிதா வட்டம்
        (வகவம்)

தனக்கென கவிதையின் உலகில் நின்று
தனித்துவம் பெற்றவன்; தகைமையாளன்
கனத்திட வைப்பவன் கவிதை மொழியால்
கதைகளில் அனுபவச் சோகம்
பிழிவான்
மனங்களை வென்றிடும் கவிதை பாடி
மலைத்திடும் அளவினில் ரசிகர்
பெற்றான்
கனவதில் நிலைக்கின்ற போதும்
கூட
கவிதையில் வாழ்ந்திவன் இன்பம் காண்பான்

இளமையை தமிழுக்கே தாரை வார்த்து
இலக்கணம் இலக்கியம் பாடம் கற்றான்
விளக்கென பலருக்குச் சுடரும் ஏற்றி
விதிமுறை நடைமுறை சொல்லித் தந்தான்
வளம்பெறும் கவிதையில் வாழும் கவிஞன்
வகவத்தில் இருப்பது பெருமை என்போம்
உளமெலாம் நிறைந்தவன் இவனை இன்று
உரிமையாய் தலைமைக்கே அழைத்து வந்தோம்

அமீர் எனும் சொல்லுக்குத் தலைவன் பொருளாம்
அரங்கிற்கு இன்றிவன் பொருத்த மானான்
அமீர் அலி என்கின்ற சந்தக் கவிஞன்
அமீர் எனும் தலைவனாய்
அமைந்து கொண்டான்
டுமீலென வெடித்திடும் கைத் துப்பாக்கி
போலிவ னரங்கிலே வெடிக்க வந்தான்
தமிழெனும் அமுதினைச்
சாறாய்பி ழிந்து
தன்அக வாழ்க்கையைப்
படிக்க வந்தான்


சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி

இது
தொண்ணூற்றி ஐந்தாம்
கவியரங்கு
இதில் இருக்கிறதே
உனக்கும் பெரும் பங்கு
எம் கவிஞர் படையும்
துணைக்கிங்கு
சங்கத் தமி ழெடுத்து
நீ முழங்கு !

வருக
சந்தக் கவிமணி
கிண்ணியா அமீர் அலி
- என். நஜ்முல் ஹுசைன்

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

ஐம்பது எழுத்து ஆளுமைகள்" வாழ்த்துப் பா

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்


பாவேந்தல் பாலமுனை பாறூக் தொகுத்த "ஐம்பது எழுத்து ஆளுமைகள்" நூல் அறிமுக விழா 16/12/2023 அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற போது வாசித்த வாழ்த்துக் கவிதை

ஓர் ஆளுமை
ஆழ
மைத் தொட்டுள்ளது

ஆளுமைகளை
ஆழம் பார்த்து
காலை விட்டுள்ளது

காலை வாரும் உலகில் தலையை வாரி விட்டுள்ளது

இளமைத் தொட்டு
எழுதியவர்கள்
இள "மை"த் தொட்டு எழுதியவர்கள்
தம் முதுமைத் தொட்டும்
எழுதி இருப்பதை

தன் புது மைத்
தொட்டு எழுதி
பார்வைக்கு வைத்திருக்கிறார் இந்தப் பார் வைத்திருக்கிறார்

பாவேந்தல் பாறூக்

அது அவர்
பேர் வைத்திருக்கிறது

எழுத்துலகில்
வேர் வைத்தவர்களை
தன் வேர்வை வைத்து
எழுதி இருக்கிறார்

தன் இமைகள்
சுமைகள் தாங்கிய போதும் நித்திரை மறந்து
இதனை சுகப்பிரசவம்
ஆக்கித் தந்துள்ளார்

எத்தனையோ சுகப்பிரசவங்களின் மகப்பேற்று
மனை

தமிழன் -
தமிழ் முரசு

ஆம்
தமிழ்
முரசு கொட்டியல்லவா
பிரசவம் நடத்தியுள்ளது


அன்பைக் கொட்டி ஆளுமைகளை அணைத்துக்கொண்டது

அவர்கள் அணைத்துக் கொண்டதால்
இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஆளுமைகள்

பத்திரிகைகளே
உங்கள்
திரி கைகளால் தானே
இந்தப் பிரகாசம்
எங்களுக்கு



சஞ்சிகைகளே
எங்கள் சிகைகளே   அலங்காரமாய்
இருப்பது உங்களால்தானே

உங்களின்
அச்சகங்களும்
அட்சரங்களும்
உச்சரித்ததால்
உச்சம் தொட்ட
ஆளுமைகள்

பேனைத் தொட்டு எழுதிய நாங்கள் இப்போது
"போனை"த் தொட்டு எழுதுகிறோம்

நாங்கள் எப்படி
எழுதினாலும் உங்கள்
பிரசுர பானை தானே
அதனைச் சமைத்து அகப்பையில் அள்ளி
வாசகர்
அகப்
பைக்கு ஊட்டி விடுகின்றது

அப்பக்கம் இப்பக்கம் இருந்தவர்களுக்கெல்லாம்
தன் பக்கம்
ஒரு பக்கம் வழங்கி
அக்கம் பக்கமாக்கிய
தமிழ் முரசு பொறுப்பாசிரியர் ஜீவா சதா
சிவம்
நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் இலக்கிய இதயங்களில்
மகத் துவம்


பாலமுனை பாறூக்

ஆளுமைகளின்
பாலம் உனை
பாராட்டி மகிழ்கின்றேன்

நீங்கள் துணிந்த கருமம் யாரும் துணியாத கருமம்

இந்த ஆளுமைகளை
ஒரு நூலால் கட்டியிருக்கிறீர்கள்

ஒரு நூலாய் கட்டியிருக்கிறீர்கள்

பாவேந்தலே நீங்கள்
பூ வேந்தி இருக்கிறீர்கள்

பல்லோரின் பிரார்த்தனைகள் உங்களை ஏந்தி இருக்கின்றன

நன்றி !

என். நஜ்முல்  ஹுசைன்

16/12/2023

புதன், 13 டிசம்பர், 2023

அவர்களுக்காக - சிறுகதை

 

அவர்களுக்காக.........!


             - என். நஜ்முல் ஹுசைன்


செய்தியை கேள்விப்பட்டவுடன் அபூநஜாத் திகைத்துப் போய்விட்டான்.  அவன் நினைத்ததோ ஒன்று; ஆனால் நடக்கப் போவதோ ஒன்று. அவனால் அதனை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.  தீயில் விழுந்த புழுவாக அவன் துடித்தான்; துவண்டான்.  

உயிரை துச்சமென மதித்து அவன் செய்த செயல் எத்தனை அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும்.  ஆனால் அது போன்ற ஒரு செயலில் ஈடுபடக் கிடைத்ததை பேரருளாகவே அபூநஜாத் கருதினான்.  அவ்வாறான ஒரு தீரமான செயலைச் செய்வதற்கு அவன் மட்டுமல்ல அவனது சக தோழர்களும் எப்போதும் தயாராகவே இருந்தனர்.

எனினும் இதனை செய்வதற்கு அபூநஜாத்தையே தெரிவு செய்தமைக்கு காரணம் அவனிடமிருந்த விசேடமான விஞ்ஞான தொழில் நுட்ப அறிவுதான். இச் செயலை செய்வதற்கு வெறுமனே உடல் வலிமையும் துணிவும் மட்டும் போதாது. அபாயகரமான அச் செயலை செய்வதற்கு நுண்ணிய அறிவும், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சில செயல்களை செய்யும் ஆற்றலும் இருக்க வேண்டும்.  அந்த ஆற்றல் நிரம்பப் பெற்றவன்தான் அபூநஜாத்.

தனது தாய் நாட்டு மக்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்காக போராடும் அந்தப் போராளிக்கு தீவிரவாதி பட்டம் சூடி அவனது போராட்டத்தை சில மேற்குலக நாடுகள் மழுங்கடிக்கப்  பார்த்தாலும் அவனும் அவனது சக தோழர்களும் முன் வைத்த காலை என்றென்றும் பின் வைக்க  மாட்டார்கள்.

இடைக்கிடை கண்முன்னே தங்களது உறவுகள் குறிப்பாக வயோதிபர்கள், பெண்கள் குழந்தைகள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அவ் வேளை அவர்களது போராட்டம் இன்னும் கூர்மையாகிக் கொண்டுதானிருந்தது. அவ்வப்போது அப்பாவிகளைக் தாக்கிவிட்டு வீர பிரதாபம் பேசித் திரியும் இஸ்ரேலுக்கும், அதனைப் பார்த்துக் கொண்டே குருடர்களாக இருக்கும் மற்றைய  நாடுகளுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டுமென சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அந்த   காஸா மண்ணின் மைந்தர்கள் காத்துக் கிடந்தனர். 

அந்தச் சந்தர்ப்பம்தான் அபூநஜாத்துக்கும் அவனது நண்பர்களுக்கும் வாய்த்தது.

விடுதலை வேட்கையோடு எத்தனை நாட்கள் தான் கற்களை மட்டுமே நம்பி இருப்பது. அபூ நஜாத் போன்ற உறுதிமிக்க இளைஞர்கள் எதிரிக்கு இணையான போர் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்லை.  எல்லாவிதமான ஆயுதங்களையும் கையாளும் ஆற்றல்களையும் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமல்ல நவீன அறிவியல் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் கண்ணில் மிளகாய் தூள் தூவும் வண்ணம்  சில பல நுணுக்கமான ஆற்றல்களையும் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டனர்.  அந்த ஆற்றலே அபூநஜாத்தை எதிரியின் நாட்டுக்குள் - இல்லை இல்லை தமது நாடு என நினைத்துக் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் எதிரியின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லும் திறனை அவனுக்கு வழங்கி இருந்தது. தான் செல்வது மரணத்தின் பயணம் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கொஞ்சம் கூட அச்சச்சிறையில் தன்னை பூட்டி வைத்துக் கொள்ளவில்லை.

கண்முன்னே தனது அப்பாவி உறவுகள் அடிக்கப்பட்டு,  உதைக்கப்பட்டு, ஈவிரக்கமின்றி  துவம்சம் செய்யப்படுவதை அன்றாடம் கண்டு கண்டு அபூநஜாத்தினதும்,    அவனைப் போன்றே அவனது தோழர்களினதும்   நெஞ்சங்கள் புழுங்கிக் கொண்டிருந்தன. நிச்சயம் தமது எதிரி ராணுவம் அழிக்கப்பட வேண்டியவை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.  அந்த போராட்டத்தின் விலை தங்கள் உயிர்கள்தான் என்பதை அவர்கள் அறியாமலில்லை. தாங்களும் வீரச் சொர்க்கம் அடைய வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. எனினும் மரணிக்கும் முன்பு சுதந்திர பாலஸ்தீனத்தைக் கண்டுவிட்டு மரணிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உறுதியாக கொண்டிருந்தனர்.  நியதிப்படி எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராகவே இருந்தனர். கொடூர இஸ்ரேலுக்கு பல மேற்குலக நாடுகள் துணையாக இருக்கும் போது தங்களுக்கு வெறும் வாய்ஜாலங்களே துணையாக இருக்கின்றன என்பதை எண்ணும் போதெல்லாம் அவர்களின் இரத்தம் கொதிப்பேறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. தம் கைகளே தமக்கு உதவி என்பதை அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.

தாம் எதிர்பார்த்து காத்திருந்த வேளை வந்த போது, அவனும் அவனது நண்பர்களும் திட்டம் தீட்டினார்கள். அதனை திறம்படச் செய்யும் ஆற்றல்  தொழில்நுட்ப அறிவில் அனைவரையும் மிஞ்சிய அபூ நஜாதிற்கு இருக்கிறது என்று ஒருமித்துத் தீர்மானித்தார்கள்.

மிக சூசகமான முறையிலே திட்டமிட்டு அபூநஜாத் எதிரியின் எல்லைக்குள் சுரங்கம் வழியாக நுழைந்தான். எப்போதுமே தங்கள் கைகள் ஓங்கி இருப்பதன் கர்வத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் எல்லைக்குள் மிகவும் மெத்தனமாகவே இருந்தனர்.

அபூநஜாத்தும்  நண்பர்களும் குறிவைத்த  இடத்திற்கு ஒரு சில இராணுவ வீரர்களே பாதுகாப்புக்காக இருந்தனர். அவர்கள் கூட அவர்களது கவனங்களையெல்லாம் வெவ்வேறு திசைகளில்தான் செலுத்தி இருந்தார்கள். கேலிப்பேச்சுக்களை உதிர்த்து  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அது அபூநஜாத்தின் வேலையை அவன் நினைத்து வந்ததைவிட இலகுவாக்கியது. தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தானோ அது இத்தனை இலகுவாக முடியும் என்று அவன் கூட நினைக்கவில்லை.

எதிரிகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கும் கருவிகளை ஏமாற்றும் கலையில் அபூநஜாத் விசேட பயிற்சிப் பெற்றிருந்தான்.

அந்த அறிவைப் பயன்படுத்தி அவன் செய்து வந்திருந்த பொருள் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தது.

அதே வேளை வெளியே பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு இஸ்ரவேலின் தொழில்நுட்பம் இல்லையோ என்பதையும் அபூநஜாத்தினால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.  இல்லாவிட்டால் இப்படியான ஒரு திட்டத்தை இவ்வளவு இலகுவாக முடிக்க முடியுமா ?

அவனும் அவனது நண்பர்களும் திட்டமிட்ட காரியத்தை ஒரு சிறு கீறலுமின்றி அவனால்  செய்ய முடிந்தது அவனுக்கே பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.

"அல்ஹம்துலில்லாஹ்" என்று பாதுகாப்பாகத் திரும்பி வந்து அமர்ந்த போதுதான் அவனுக்கு இடி போல் அந்தச் செய்தி கிடைத்தது.

அச்செய்தி கிடைத்தவுடன் அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. பலமுறை சிந்தித்தான். பலவாறு சிந்தித்தான். நண்பர்களுடன் ஆலோசனை செய்ய நினைத்தான். என்றாலும் செய்யவில்லை. அவன் செய்ய நினைத்திருக்கும் காரியம் முன்பை விட அபாயகரமானது என்று அவனுக்குத் தெரியும். தனது நண்பர்கள் அதனை தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் அவனை அவர்களிடம் ஆலோசனைப் பெறுவதைத் தடுத்தது.

எதையுமே யோசிக்கவில்லை தன்னந் தனியனாய் தன் பயணத்தைத் தொடர்ந்தான். எத்தனை நீளமான பயணம். சென்று வந்த வழி தான் என்றாலும், உள்ளம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. 'சென்ற முறை எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவிச் சென்றேன் இம்முறையும் அப்படி முடியுமா ? அல்லது உயிரைத் தியாகம் செய்ய நேரிடுமா ? '

"யா அல்லாஹ் நான் நினைத்த காரியத்தை முடிக்கச் செய். அதன் பிறகு எனது உயிர் பிரிந்தால் பரவாயில்லை" என்பதே அவன் வழியெங்கும் செய்த பிரார்த்தனையாக இருந்தது. 

சிரமத்துடன் தான் போக வேண்டிய எல்லையை அடைந்து விட்டான். இன்னும் ஒரு ராணுவ வீரனையும் காணவில்லை. எனினும் பதுங்கிப் பதுங்கிச் சென்றான். 

"டுமீல்" தலைக்கு மேலால் வெடிச்சத்தம். மயிரிழையில் அபூநஜாத் உயிர் தப்பினான்.

ஆறு ராணுவ வீரர்கள் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அவனைச் சூழ்ந்து விட்டார்கள்.

அவர்களது மேலதிகாரி கத்துவது கேட்டது.  அவர்களது மொழியிலேயே அவன் கத்தினான்      

"சுட வேண்டாம். அவனை உயிருடன் பிடியுங்கள். எப்படி இத்தனை தூரம் வந்தான் என்று கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும்"  என்றான்.

அதனால் ராணுவ வீரர்கள் அவனை அமுக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.  என்றாலும் அவர்களையெல்லாம் விட அபூநஜாத் மிகவும் பலசாலியாக இருந்தான். அவர்களது பிடியிலிருந்து திமிரி  அவனை விடுவித்துக் கொண்டான். தப்பி ஓட முயற்சி செய்தான். என்றாலும் ஒவ்வொரு ராணுவ வீரனும் அபூநஜாத்தை நையப் புடைக்க ஆரம்பித்தனர். மேனியிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

என்றாலும் அபூநஜாத் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அவர்களுடன் போராடிப் போராடி முன்னேறினான். துப்பாக்கியின் மறுமுனையாலும்,  சப்பாத்துக் கால்களினாலும் அவனை தாக்கினர். அத்தனையையும் தாங்கிக் கொண்டு அபூநஜாத் இன்னும் முன்னேறினான்.

ராணுவ வீர்களின் பிடிக்குள் இருந்து கொண்டே அவர்களையும் மீறி,  இரத்தம் தோயத் தோய உடைந்த கால்களை இழுத்துக் கொண்டு ஓரிடத்திலே வந்து நின்றான்.

ஒரு பெரும் கல்லை அகற்றினான்.

அங்கே பெரியதொரு வெடிகுண்டு மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கண்டு ராணுவ வீரர்கள் அனைவருமே அவ்விடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர்.  அதனை வெடிக்கச் செய்யத்தான் அவன் அங்கே வந்திருக்கிறான் என்று அவர்களுக்கு விளங்கிவிட்டது. அது வெடித்தால் அங்கே பேரழிவு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. 

அச்சத்தின் காரணத்தால் அவர்கள் அவனை விட்டுவிட்டு நெடுந் தூரம் ஓட ஆரம்பித்தனர்.

'இப்போது குண்டு வெடிக்கும், இப்போது குண்டுவெடிக்கும்' என எதிர்பார்த்து இருந்த வேளை அந்தக் குண்டு வெடிக்கவே இல்லை. நேரம் சென்று கொண்டே இருந்தது....

இல்லை குண்டு வெடிக்கவில்லை'

மெது மெதுவாக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கே அபூநஜாத் குண்டுக்கருகில் நின்று கொண்டு  ஏதோ செய்து கொண்டிருந்தான்.  ஏதோ வயர்களைத் தேடி  வெட்டிக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் அங்கே இருந்த ராணுவ அதிகாரிக்கு புரிய ஆரம்பித்தது.  அங்கே வந்திருந்தவன் குண்டை வெடிக்க வைக்க வரவில்லை.

அந்தக் குண்டை செயலிழக்கச் செய்ய வந்திருக்கிறான்.

அவன் குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த போதும் தனது பணியை செய்து முடித்திருக்கிறான். 

தனது பணி முடிந்து "அல்ஹம்துலில்லாஹ்" என்று அபூநஜாத் நிலத்தில் சாய்ந்தான். 

ராணுவ அதிகாரி, சிறிய மயக்கத்திலிருந்த அபூநஜாத்தின் கன்னத்தில் தட்டினான். முகத்தில் தண்ணீர் தெளித்தான். 

மெதுவாக கண்களைத் திறந்த அபூநஜாத்திடம்  "என்ன செய்கிறாய் ? " என்று கொச்சை அரபியில் கேட்டான்.

பேசும் திறனை இழந்திருந்த அபூநஜாத் மெது மெதுவாக பேசினான்.

"இந்த நிலத்துக்கு மேல் பெரியதொரு ராணுவ அணிவகுப்பு நடக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அந்த வேளையிலே இக்குண்டை வெடிக்கச் செய்தால் பெருந்தொகையான ராணுவ வீரர்களை, அரசியல் தலைவர்களை கொல்லலாம் என்று தீர்மானித்தோம்.

அதனால் தான் இந்த இடத்தை கண்டுப்பிடித்து நானே வந்து உங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைவாக இதனைக் கொண்டு வந்து பொருத்தினேன்.

"அப்படியா ?" நடுக்கத்தோடு கேட்ட ராணுவ அதிகாரி

"அப்படி என்றால், அப்படி என்றால் ஏன் இத்தனை கஷ்டப்பட்டு வந்து இதனை செயலிழக்க செய்கிறாய் ?"

"நான் இந்தக் குண்டை பொருத்தி விட்டு சென்ற பிறகுதான், எனக்கு அந்தத் தகவல் கிடைத்தது. 

அந்தப் பேரணியில் 400 சிறுவர் சிறுமியர் கலந்து கொள்கிறார்கள் என்ற செய்திதான் அது.  எங்களது இலக்கெல்லாம் ராணுவ வீரர்கள் ஆன உங்களை நோக்கித் தானே தவிர அந்த மழலைகளை நோக்கி அல்ல. அந்தச்  சிறுவர்கள் வெடித்துச் சாவதை நாங்கள் எப்போதுமே விரும்புவதில்லை.  அவர்களை பாதுகாக்கவே நான் மீண்டும் வந்தேன்"  என்று தட்டுத்தடுமாறி சொன்ன போது அந்த ராணுவ அதிகாரியின் விழிகளில் நீர் முட்டியது.

 இரத்தம் தோய்ந்த அபூநஜாத்தை அந்த ராணுவ அதிகாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

அவனது தழுதழுத்த நாவில் இருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன

" நீங்கள் தீவிரவாதிகள் அல்ல- போராளிகள்".

 ("விடிவெள்ளி"   7/12/2023)


செவ்வாய், 12 டிசம்பர், 2023

கவிஞர் பொன். தாட்சாயினி சர்மா

 தாட்சாயினி சர்மா


ஊற்றெடுக்கும் தமிழைத்தான் துணைக்கழைத்து
உற்சாக மே பொங்க வகவத்தில்
ஆற்றலினை யே காட்ட முன்வந்த
ஆரணங்கே இந்தப் பெண்கவிஞர்
போற்றலுடன் இன்றவர்க்கு தலைமை தந்து
பேருவகையே நாங்கள் கொள்ளுகின்றோம்
சாற்றுகின்ற கவிதைகளால் மனங்கவர்ந்த
சாதனையாள் இவளை நாம் வாழ்த்தி நின்றோம்

இலக்கியத்தில் தனக்கென ஓர் இடம்பிடித்து
இடறிவிழாதே எங்கும்  தடம்பதித்து
உலவுகின்ற இவர் எழுந்து நிற்கின்றார்
உதவுகின்ற சமூகத்தின் சேவைதன்னில்
நிலவுக்கு ஒப்பான குளிர் மனத்தாள்
நிமிர்ந்திருப்பார் உயர்வான பண்புகளால்
வலம்வந்தார் இன்றெங்கள் வகவத்தில்
வாகாவே அரங்கத் தலைமையேற்று


தாட்சாயினி சர்மா எனும் இவரின்
தகைமைகள் பற்பலவாம் சாற்றவொண்ணா
வாட்டமின்றி எப்போதும் சிரித்த முகம்
வாஞ்சையுடன் பணிவதனின் துணையால் எங்கள்
நாட்டமதில் முன்னணியில் வந்து நின்றார்
நாடியே நாம் தலைமையினைத் தந்தே மகிழ்ந்தோம்
பாட்டெடுத்து எம்கவிஞர் அணியோ டிணைந்து
பாராட்டும் வண்ணம்தான் முன்னே செல்வார்

கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா
எங்கள் கவியரங்கம் தொண்ணூற்றி நாலு
இன்று நீங்கள் கிளப்புங்கள் தூளு

சர்மா பொன் தாட்சாயினி
உங்கள் கவியரங்கம்
இனித்திடட்டுமே இனி

வருக
கவிஞர் பொன் தாட்சாயினி சர்மா

செவ்வாய், 7 நவம்பர், 2023

கவிஞர் கலைமகன் பைரூஸ்

 


வலம்புரி கவிதா வட்டத்தின் 93 ஆவது கவியரங்கு 28/10/2023 அன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த கவிஞர் கலைமகன் பைரூஸ் அவர்களுக்கு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்

              - என். நஜ்முல் ஹுசைன்
               தலைவர்,
               வலம்புரி கவிதா வட்டம்
              (வகவம்)

கலைமகன் பைரூஸ்



ஆழமாய் தமிழை கற்க
ஆர்வமாய் தன்னை ஈந்தான்
வேழமாய் மொழியின் உள்ளே
வேகமாய் சென்று கற்றான்
வீழுதல் இன்றி எழுந்து
விசையுடன் கற்ப தாலே
பாழ் படலின்றி இவனும்
பண்டித னாகி நின்றான்


தமிழுக்கு தன்னைத் தந்தான்
தமிழினால் பெருமை கொண்டான்
அமிழ்தமாய் தமிழைப் பருக
அழகுற எழுது கின்றான்
இமியள வேனும் தமிழை
எவருமே களங்கம் செய்தால்
உமிழ்ந்திட அவரின் முகத்தில்
என்றுமே தயங்க மாட்டான்

வித்தகன் இவனும் கணிணி
வித்தைகள் கற்ற தாலே
புத்தமே புதிதாய் இவனின்
பெயரினில் எழுத்த மைத்தான்
சித்திரம் எழுத்தின் உருக்கு
சிறப்பிவன் பெயரை வைத்தே
முத்திரைப் பதிக்கும் கவிஞன்
கலைமகன் பைரூஸ் என்பான்


இருகரம் நீட்டி இவனை
இதயத்தால் அழைத்து நின்றோம்
வருகவே எங்கள் கவிதை
அரங்கினை தலைமை யேற்க
பருகவே உந்தன் தமிழை
பைந்தமிழ் தேனாய் பொழிக
உருகியே எங்கள் கவிஞர்
உன்னையே போற்றி மகிழ

கவிஞர் கலைமகன் பைரூஸ்
கவியரங்கு தொண்ணூற்றி மூன்று
காட்டிடுமா உன் தலைமைக்கு
சான்று !

வருக
வெலிகம மதுராப்புர
கவிஞர் கலைமகன் பைரூஸ் !

  - என். நஜ்முல் ஹுசைன்





திங்கள், 2 அக்டோபர், 2023

கவிஞர் ந. தாமரைச் செல்வி

 

வலம்புரி கவிதா வட்டத்தின் 92 ஆவது கவியரங்கம் 29/09/2023 அன்று கொழும்பு, பழைய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது கவிஞர் ந. தாமரைச் செல்விக்கு கவியரங்கைத் தலைமையேற்று நடாத்த வருமாறு இவ்வாறு நான் அழைப்பு விடுத்தேன்
       - என். நஜ்முல் ஹுசைன்.                            தலைவர்,                                                         வலம்புரி கவிதா வட்டம்
         (வகவம்)

வலம்புரிக்கே நலம் புரிய
வந்து நின்றார் எங்கள்
வகவத்தில் தனக்கெனவோர் இடம் பிடித்தார்

நிலம்மீது ஓங்கு மொழி
தமிழைப் பற்றி
நின்றிருப்பார் தலைநிமிர்ந்து நாளும் வெல்வார்
சிலம்பெடுத்து வீசுகின்ற வீரனைbப் போல்
சிலிர்க்கின்ற சொல்லெடுத்து சுழன்று அடிப்பார்
நலம் பெறவே நானிலமும் வாழும் மாந்தர்
வளம் பெறவே எழுத்தெடுத்து பணியும் செய்வார்

ஆயிரமாய் முகநூலில் பதிவு செய்து ஆற்றலினை பலரறிய வைத்து இவரும்
ஆயுதமாய் தமிழைத்தான் ஏந்தி நாளும்
ஏற்றமுடன் முன்னேறி செல்வார் உண்மை
பாய்கின்ற புலி போலே பெண்களுக்காய்
அவர் உரிமை நலன்களுக்காய் எழுந்து நிற்பார்
தேய்கின்ற நிலவைப் போல் அல்ல இவரும்
வளர்கின்ற வான் பிறைக்கு உவமையானார்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர் உள்ளம் தனிலேதான் தன் பெயரை பதிவு செய்து
உலவிடுவார் பொய்கை என்னும் தமிழின் ஆற்றில்
மெய் கையை நீட்டி இவர் புகழும் பெற்றார்
வலக்கையாய் இடக்கையாய் நண்பர் சூழ
வலம் வருவார் இலக்கியத்தில் நிமிர்ந்து நிற்பார்
இலங்கிடவே இவர் வடிக்கும் கவிதை மொழியால்
இங்கேயும் தனக்கென ஓர் இடமும் பெற்றார்

நூறுக்காய் நடை போடும் எங்கள் அரங்கம்
தொண்ணூற்றி யிரண்டை உன் தலைமேல் வைத்து
பூரித்து நிற்கிறதே புகழின் மணியே வா வந்து தலைமையினை ஏற்று நடாத்தி
நீயும் தான் சேர்த்துவிடு தமிழுக் கணியே


இது என்ன கேள்வி
உனக்கு இல்லையே தோல்வி
வா என் புதல்வி
கவிஞர்
ந. தாமரைச் செல்வி
என்றழைக்கிறதே
வகவ அரங்கம்
உன் கவிதையிலே அது
நிச்சயம் கிறங்கும்!

கவிஞர் ந. தாமரைச் செல்வி


    - என். நஜ்முல் ஹுசைன்