எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 14 அக்டோபர், 2025

பாத்திமா நளீரா

 ( 12/10/2025 அன்று கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பாத்திமா நளீரா எழுதிய 'ஏழாம் வானத்தின் சிறகு' கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வின் போது வாசிக்கப் பட்ட வாழ்த்துக் கவிதை)



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்



அனைவருக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

வணக்கம்



நான் தயார் 

நீங்கள் தயாரா


ஏழாம் வானம்

சென்று வர


சிறகுகள் தர தயாராய் 

இருக்கிறார்


நளீரா


கவிதைகளின் தாயாராய் 

அவற்றுக்கு 

சொல் உணவு ஊட்டி

எங்களை

சொக்க வைத்துள்ளார்


சொற்களுக்குள் 

மாணிக்கக் கற்கள்

வைத்துள்ளார்


தோண்டிப் பாருங்கள்

என்று

புதையல் வைத்துள்ளார்


பாத்திமா நளீரா

என்ற இந்த

கவிதைப் பெண்ணாள்


இவ்வுலகைக் கண்டிருக்கிறாள் 

தன்

காத்திரக் கண்ணால்

தன் கரம் பற்றிய 

மை சிந்தும் 'பென்'னால் 


இவள் தாள்

பூமியைத் தொடாமல் 

பார்த்துக் கொண்டிருக்கிறது

இவள் எழுதிக் குவித்திருக்கும் 

கவிதைத் தாள்


நான்

பறந்து கொண்டிருக்கிறேன்


ஏழாம் வான் சென்று

சிறகடித்துக் கொண்டிருக்கும்

இந்தக்

கவிதை ஆளுமையை 

அடையாளமிட


எழுத்துத் தேரில் 

அன்றே

பவனி வந்து


இலக்கிய உலகே

கவனி என்று

பேரிகை கொட்டிய 

காரிகை இவர்


இவர்

எழுதிக் குவித்ததை

அவர்

எங்களிடம் தந்துள்ளார்


யார் அவர் ?


நளீரா சித்திரம் வரைய

சுவர் கொடுத்தவர்


ஆம்

அவரின் அவர்

எங்கள்

சித்தீக் காரியப்பர்


செய்திருக்கும்

காரியமோ 

வெரி வெரி சுப்பர்


இலக்கிய உலகில்

இருவருமே

நிலைத்து நிற்பர்


மனைவிக்கு 

மகுடம் சூடும்

பாக்கியம்

எத்தனைப் பேருக்கு

வாய்க்கிறது ?


அத்தகு உள்ளம்

எத்தனைப் பேருக்கு

இருக்கிறது ?



நளீரா

சிறிது காலம்

தன் கைகளை

கட்டிப் போட்டிருந்தார்


தன் கைகளுக்கு

கட்டில் போட்டிருந்தார்-

உறங்கிக் கொள்ள


இக்கட்டில் இருந்தவரை

இக் கட்டில் வேண்டாமென்று

திக்கெட்டும் பறக்கும்

சிறகுகள் கொடுத்தார் 

சித்தீக்


மனைவிக்கு

சிறை கொடுக்கும்

கணவர்கள்

இன்றும் இருக்கும்போது

சித்தீக் காரியப்பர்

சிறகுகள் கொடுத்திருக்கிறார்


அதனால் நளீரா

ஏழாம் வானத்திற்கு

எம்மையும்

அழைத்துச் சென்றிருக்கிறார்


நாளையும் 

சிறகு விரித்துப்

பறக்கப் போகும்

பாத்திமா நளீரா

உங்களுக்கு

வாழ்த்துகள் வந்து சேர்கிறது

கலரா கலரா


தையலாய் தைத்த

பாத்திமா நளீரா

இன்னும் பல நூல்கள்

நீங்கள்

நூற்க வேண்டும்

சமுதாய அவலங்கள்

மாய்க்க வேண்டும்


நன்றி


 - என். நஜ்முல் ஹுசைன்








 

கருத்துகள் இல்லை: